ADVERTISEMENT

மருத்துவர் உடலை அடக்கம் செய்ய எதிர்த்த 5 பேர் ஜாமீன் மனு தள்ளுபடி!

08:23 PM Apr 24, 2020 | Anonymous (not verified)

மருத்துவர் உடலை வேலாங்காடு மயானத்தில் அடக்கம் செய்வதை எதிர்த்து போராட்டம் நடத்திய வழக்கில் கைதான 5 பேர் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

ADVERTISEMENT



கரோனா தொற்று காரணமாக உயிரிழந்த நரம்பியல் நிபுணர் சைமன் ஹெர்குலஸ் உடலை வேலாங்காடு இடுகாட்டில் அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தும், வாகனத்தை தாக்கியும், பொது ஊழியர்களை தாக்கியும் போராட்டத்தில் ஈடுபட்ட அன்னை சத்யா நகரைச் சேர்ந்த 22 பேர் மீது, சென்னை அண்ணா நகர் காவல் நிலையத்தில் ஒரு பெண், 17 வயது சிறுவன் உள்ளிட்ட 23 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 22 பேர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 17 வயது சிறுவன் தலைமறைவானதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT


இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டவர்களில் 5 பேர் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் 5-வதாக சேர்க்கப்பட்டுள்ள ஆனந்தராஜ், 6-வதாக சேர்க்கப்பட்டுள்ள சோமசுந்தரம், 14-வதாக சேர்க்கப்பட்டுள்ள குமார், 20-வதாக சேர்க்கப்பட்டுள்ள மணிகண்டன், 21-வதாக சேர்க்கப்பட்டுள்ள காதர் மொய்தீன் ஆகியோர் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

ஐந்து பேரும் கூட்டாக சேர்ந்து தாக்கல் செய்துள்ள மனுவில், சென்னை மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் கலையரசன் தங்களுக்கு எதிராக தவறாக புகார் அளித்திருப்பதாகவும், அதில் காவல்துறை வழக்கு பதிவு செய்திருப்பது தவறு என்றும், அந்த சம்பவத்துக்கும், தங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர். வீட்டில் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த தங்கள் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறை திடீரென கைது செய்திருப்பதாக மனுவில் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, கைதான 5 பேர் ஜாமீன் கோரி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் 5 பேரின் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டு, விசாரணைக்கு வரவுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT