Skip to main content

கடலூரில் கரோனா பரிசோதனைக்கு காத்திருக்க தேவையில்லை!!!

Published on 22/04/2020 | Edited on 23/04/2020

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிதம்பரம் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 32 லட்சத்து 63 ஆயிரம் மதிப்பிலான கரோனா நோய் கண்டறியும் ஆர்டி-பிசிஆர் (RT - PCR) கருவி அமைக்கப்பட்டுள்ளது. இதன் செயல்பாட்டினை பாண்டியன் எம்எல்ஏ  துவக்கி வைத்தார்.

 

corona virus- Cuddalore



அப்போது அவர் கூறுகையில் "உலகையே அச்சுறுத்தும் கரோனா நோய் தொற்றிலிருந்து தமிழக மக்களை காப்பதற்காக, தமிழகத்தில் நோய் தொற்றினை உடனுக்குடன் கண்டறிந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான மருத்துவம் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் தடையின்றி கிடைத்திட தேவையான நடவடிக்கைகளை தமிழக முதல்வர் எடுத்து வருகிறார்.

அந்த வகையில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கடலூர் மாவட்ட மருத்துவக் கல்லூரியாக செயல்படும் என்று தமிழக முதல்வரால்  அறிவிக்கப்பட்டதோடு இம்மருத்துவமனை கடலூர் மாவட்டத்தின் கரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பிரத்யேக சிகிச்சை மையமாக செயல்படும் என்றும் அறிவித்திருந்தார்.
 

nakkheeran app



கடலூர் மாவட்டத்தில் கரோனா நோய் தொற்று பரிசோதனை வசதிகள் இல்லாத காரணத்தால் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனை முடிவுகளுக்காக, இங்கு சேகரிக்கப்படும் ரத்தம் மற்றும் உமிழ்நீர் மாதிரிகள் இதுவரை அனுப்பி வைக்கப்பட்டு வந்தது.

அவ்வாறு மாதிரிகள் அனுப்பி வைக்கப்படுவதால் முடிவுகள் கிடைக்கப் பெற இரண்டு அல்லது மூன்று நாட்கள் காலதாமதம் ஆகிறது. அதனால் இம்மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கரோனா நோய் கண்டறிய உதவும் ஆர்டி-பீசிஆர் (RT - PCR) கருவி வாங்கிட சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 32.63 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ஒப்புதல் அளித்திருந்தேன். 

அதன் மூலம் உடனடியாக வைரஸ் டெஸ்டிங் மெஷின் வரவழைக்கப்பட்டு மருத்துவமனையில் பிரத்தியேக அறை ஒதுக்கீடு செய்யப்பட்டு கருவி நிறுவப்பட்டது.  சோதனை ஓட்டம் முடிந்து  இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (ஐ.சி.எம்.ஆர்) இந்த கருவியின் செயல்பாட்டிற்கு அனுமதி சான்று அளித்துள்ளது.

எனவே கரோனா நோய் தொற்று கண்டறியும் வசதி சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடங்கியுள்ளது. இனி நாள் கணக்கில் நோய் தொற்று முடிவுக்கு காத்திருக்க தேவையில்லை. 3 மணி நேரம் முதல் 24 மணி நேரத்திற்குள் முடிவு தெரிந்து விடும்" என்றார்.  நிகழ்ச்சியில் சிதம்பரம் சார் ஆட்சியர் விசு மகாஜன்,  பல்கலைக்கழக துணைவேந்தர்  முருகேசன், பதிவாளர் கிருஷ்ணமோகன்,  மருத்துவக் கல்லூரி முதல்வர்  ராஜ்குமார், கண்காணிப்பாளர் சண்முகம், காவல்துறை துணை கண்காணிப்பாளர் கார்த்திகேயன்  உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 


 

சார்ந்த செய்திகள்