சென்னை, ஒக்கியம் துரைப்பாக்கத்தைசேர்ந்த வழக்கறிஞர் தமிழரசு தாக்கல் செய்த மனுவில், இந்தியாவில், ஜூன் 8-ம் தேதி நிலவரப்படி, ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 981 பேருக்கு கரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 429 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தொற்றுக்கு 7 ஆயிரத்து 200 பேர் பலியாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஜூன் 8-ம் தேதி வரை, 33 ஆயிரத்து 229 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 286 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
கரோனா தொற்று பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு, ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள போதும், சென்னையில் தொற்று தீவிரம் அதிகமாக இருக்கும் என செய்திகள் வெளிவருகின்றன.சென்னையில் மட்டும் 23 ஆயிரத்து 298 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதனால், சென்னையில் ஊரடங்கை தளர்த்துவதற்குப் பதில், ஊரடங்கை கண்டிப்புடன் அமல்படுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.