தமிழகத்தில் கரோனாவின் இரண்டாம் அலை தீவிரமாக பரவியதை சமாளிக்க தமிழக அரசு முழு ஊரடங்கை அமல் படுத்தியது. அதேவேளையில், முழு ஊரடங்கு மட்டும் இதற்கு தீர்வாகாது என கரோனா தடுப்பூசி போடுவதையும் அதிகப்படுத்தியது. 18 வயதுக்கு மேற்பட்டோர்களும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என அரசு அறிவித்தது. அதனைத் தொடர்ந்து ஏராளமானோர் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டினர்.
மேலும், மக்கள் ஒரே இடத்தில் கூடுவதை தடுக்கவும், தடுப்பூசிகளை பரவலாக கிடைக்கவும் பல்வேறு இடங்களில் அரசு முகாம்களை ஏற்படுத்தி தடுப்பூசி செலுத்திவருகிறது. அதுபோல், இன்று சென்னை, கோடம்பாக்கம் ராம் தியேட்டர் அருகே உள்ள பெண்கள் மேனிலைப் பள்ளியில் அமைக்கப்பட்ட கரோனா தடுப்பூசி முகாமில் ஏராளமான இளைஞர்கள் வரிசையில் காத்திருந்து கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.