கரோனா வைரஸ் இந்தியா உட்பட உலக நாடுகள் அனைத்திற்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இந்த வைரஸ் பாதிப்புக்கு இதுவரை முறையான மருந்து கண்டுபிடிக்கப்படாததால், அதைக் கட்டுப்படுத்துவது எப்படி என்று தெரியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. இந்த வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான ஒரே வழி சமூக விலகல் என்பதால் அனைத்து நாடுகளும் மக்களிடம் அதையே வலியுறுத்தி வருகின்றன. இந்தியாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இந்த வைரஸ் தமிழகத்திலும் வேகமாகப் பரவி வருகிறது.
தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,477 ஆக உயர்ந்துள்ளது என்றும், இன்று மட்டும் 105 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 411 பேர் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று மட்டும் 46 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் அதிகபட்சமாக 50 பேருக்கு இன்று கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.