Skip to main content

உயிரையும் பறித்து உறவுகளையும் சிதைத்த 'கரோனா' 

Published on 01/10/2021 | Edited on 01/10/2021

 

'Corona' takes lives and destroys relationships

 

ஈரோடு பச்சபாளி இந்திரா நகரைச் சேர்ந்தவர் 26 வயது ரம்யா. இவருக்கும் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த குமரேசன் என்பவருக்கும் சென்ற 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. ரம்யா கணவருடன் கிருஷ்ணகிரியில் வசித்து வந்தார். இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான குமரேசன் சென்ற ஜூன் மாதம் 1 ந் தேதி  கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதைத் தொடர்ந்து அவரது மனைவி ரம்யாயை அவரது மாமனார் " உனக்கு ராசி இல்லை... உன்னால்தான் என் மகன் இறந்துவிட்டான்'' எனக் கூறி ரம்யாவை கொடுமைப்படுத்தத் தொடங்கியிருக்கிறார்.

 

மேலும் அவர் வீட்டில் இருக்கக்கூடாது என்று கூறி விரட்டியிருக்கிறார். அவரது மாமனாருடன் கணவரின் தம்பியான கொழுந்தனாரும் அவரது மனைவியும் உடன் சேர்ந்து ''ரம்யாவை நீ வீட்டை விட்டுச் செல்லவில்லை என்றால் உன்னையும் உனது அம்மாவையும் கொலை செய்து விடுவோம்'' என மிரட்டியுள்ளனர். இறந்த ரம்யாவின் கணவர் எல்ஐசி பாலிசி போட்டுள்ளார். நல வாரியத்தில் உறுப்பினராகவும் சேர்ந்திருந்தார். அதோடு ரூபாய்  2 லட்சம் சீட்டு ஒன்றும் போட்டிருந்திருக்கிறார். அது மட்டுமல்ல பெற்றோரில் ஒருவர் கரோனா காரணமாக இறந்தால் அரசு உதவி பணம் கிடைக்கும். இவை அனைத்தும் மனைவியான ரம்யாவுக்கு வரும் என்பதால் அவர்கள் அதற்குத் தடையாக இருந்துள்ளார்கள். இந்த நிலையில் ஈரோடு வந்த ரம்யா தனது குழந்தையுடன் சென்று  மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு கொடுத்துள்ளார். அதில் அவர், "என்னை வீட்டை விட்டு விரட்டி விட்டனர். மேலும் எனது 20 பவுன் நகையும் அவர்கள் அபகரித்துக் கொண்டனர். எனவே காவல்துறை தலையிட்டு எனது மாமனார், கொழுந்தனார் மற்றும் அவரது மனைவி மீது சட்ட நடவடிக்கை எடுத்து எனக்கு வரவேண்டிய பணம் மற்றும் நகைகளை மீட்டுத்தர வேண்டும். மேலும் எங்களுக்கு  உயிர் பாதுகாப்பும் வழங்க வேண்டும்"  எனக் கூறியிருக்கிறார். கரோனா உயிரை மட்டுமா பறிக்கிறது? உறவுகளையும்தான் சிதைக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

நீலகிரியைத் தொடர்ந்து ஈரோடு; தேர்தல் அதிகாரியிடம் திமுக மனு

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளன.

இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதீத வெப்பம் காரணமாக கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர்  விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில் ஈரோட்டில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் நள்ளிரவில் சிசிடிவி கேமரா பழுதானதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோடு மக்களவைத் தொகுதியின் வாக்கு எண்ணும் மையம் சித்தோடு ஐ.ஆர்.டி.டி. அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம் அறையின் சிசிடிவி கேமரா நேற்று (28.04.2024) இரவு 11.30 மணியளவில் பழுதாகியுள்ளன. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேர்தல் அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதன் பின்னர் இன்று (29.04.2024) அதிகாலை 3.30 மணியளவில் வேறு கேமராக்கள் பொறுத்தப்பட்டன. ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் பிரகாஷும், அதிமுக சார்பில் ஆற்றல் அசோக் குமாரும், பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் விஜயகுமாரும், நாம் தமிழர் கட்சி சார்பாக கார்மேகனும் போட்டியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த இரு சம்பவங்களும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் வாக்கு இயந்திரங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனத் திமுக சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவை நேரில் சந்தித்த திமுக எம்.பி, என்.ஆர்.இளங்கோ இதற்கான மனுவை அளித்துள்ளார். அதில் 'வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் சிசிடிவி முறையாக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்கு இயந்திரங்கள் உள்ள அறையை சுற்றி 500 மீட்டர் சுற்றளவில் ட்ரோன் பறக்க தடை விதிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.