தென்மாவட்டங்களில் தீயாய் பரவும் கரோனா... போலீசாரையும் விட்டுவைக்கவில்லை!

corona in south

சென்னையில் வேகமெடுத்த கரோனா தொற்று தற்போது பாதிப்பு குறைந்து வருகிறது என்று திருப்திபட்டாலும், அதன் தாக்கம்தான் இதுவரையிலும் அமைதியாகவும், தொற்றுகள் குறைந்திருந்த நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் எகிறிக் கொண்டிருக்கின்றன. காரணம் சென்னை மற்றும்வெளி மாநிலங்களிலிருந்தெல்லாம் திரும்புபவர்களால் தொற்று பரவுவதோடு அவர்களோடு தொடர்பிலிருந்தவர்களின் பாதிப்பு தொடர்ந்து நாள் தோறும் அதிகாரித்து வருகிறது. இதற்கு காரணம் சோதனையின் முடிவுகள் வரத்தாமதமாவதுடன், பரிசோதனைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படாததும்தான்என்கிறார்கள் சமூக நல ஆர்வலர்கள்.

கடந்த மாத துவக்கத்தில் நெல்லையில் 83, தூத்துக்குடியில் 68, தென்காசியில் 63 என்றளவிலிருந்த தொற்று, இன்றைய லெவலில் நெல்லை 1,295, தூத்துக்குடி 1,416, தென்காசி 530 எனபல மடங்கு எகிறிவிட்டது. நேற்று மட்டும் மூன்று மாவட்டங்களின் தொற்று 213 வரை உயர்ந்திருக்கிறது. மாவட்டங்களில் நிலையாக வசிக்கும் மக்களின் தொற்று அளவு கூட இப்படி எகிறியதில்லை. இவைகள் சொந்த மண் திரும்பியவர்களால் ஏற்பட்ட பாதிப்பின் உயர்வு என்ற அச்சம் தற்போது பரவியிருக்கிறது.

இதனிடையே கரோனாவின் கொடுங்கரங்களுக்கு கரோனா வார்டு, மற்றும் கரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் காவல் பணியாற்றிய காவலர்களையும் விட்டு வைக்கவில்லை.

corona in south

நெல்லையிலுள்ள பாளை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கரோனா சிறப்பு வார்டில் பணியாற்றிய நெல்லை மாநகரப் பகுதியின் ஆயுத படைக் காவலர்கள் மற்றும் பெண் போலீஸ் உட்பட 6 காவலர்கள் மற்றும் பாளை தீயணைப்பு நிலைய உயரதிகாரி, பாளை மத்திய சிறைக்காவலர் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் தொடர்பான பகுதிகள் தனிபடுத்தப்பட்ட பகுதிகளாகமாற்றப்பட்டது.

அதேசமயம் தென்காசி மாவட்டத்தின் சிவகிரி காவல் நிலையக் காவலர்கள் அருகிலுள்ள தேவிபட்டணம் கிராமத்தில் கரோனா கட்டுப்பாட்டுப் பகுதியில் பணியிலிருந்ததால், அவர்களில் ஐந்து பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு அவர்கள் தென்காசி அரசு மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிவகிரி காவல் நிலையம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு மூடப்பட்டது. இதர காவலர்கள் தனிமையிலிருக்கும்படி அறிவுறுத்தப்பட்டனர்.

நிலைமை இப்படி வேகமெடுக்க இன்று நெல்லை, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த 4 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

corona virus nellai police thenkasi
இதையும் படியுங்கள்
Subscribe