
திருச்சியில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஆரஞ்சு மண்டலத்தில் இருந்து சிவப்பு மண்டலத்தில் மாறிக்கொண்டிருக்கிறது. இந்தநிலையில் இன்று திருச்சியில் ஸ்ரீரங்கம் மூலத்தோப்பு மற்றும் கே.கே.நகா் பகுதியை சோ்ந்த 6 போ் கரோனா தாக்கத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
இதனால் திருச்சியில் மொத்த பாதிப்பு 154 ஆக உயர்ந்து உள்ளது. சென்னையில் இன்று ஒரு நாள் பாதிப்போ 1,487 ஆக உள்ளது. அதே நேரத்தில் திருச்சியின் எல்லைப்பகுதியான பெரகம்பி என்கிற கிராமத்தில் தையல் கடை வைத்திருக்கும் பெண்மணி கடந்த ஒரு வாரமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்திருக்கிறார்.
அவருக்கு உடல்நிலை மிகவும் பெரகம்பி சுகாதரநிலையத்தில் சென்று மருந்து கேட்க, அவர்கள் பெரம்பலூர் அரசு மருத்துமனைக்கு அனுப்பி இருக்கிறார்கள். அங்கே அவருக்கு பரிசோதனை செய்ததில் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்து அவர்களை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த பெண்மணியோடு அவருடைய கணவர் மற்றும் அவர் உறவினர்கள் கரோனா பரிசோதனைக்கு அழைத்து சென்றிருக்கிறார்கள்.
இதற்கு இடையில் பெரகம்பியில் அந்த பெண்மணி தையல் கடை வைத்திருப்பவர் என்பதால் அந்த பகுதியில் உள்ளவர்கள் தினமும் அவர் கடைக்கு சென்று பேசுபவர்கள் என்பதால் அவர்கள் எல்லொரும் பயந்து நாளை நம்மையும் கரோனா பரிசோதனைக்கு அழைத்து சென்று விடுவார்கள் என்று பயந்து அவர்கள் அனைவரும் ஊரை விட்டு சென்று விட முயற்சி கொண்டு இருக்கிறார்கள்.
இதுகுறித்து அந்த பகுதி சமூக ஆர்வலர் பெரகம்பி சீனிவாசன் நம்மிடம், இந்த கரோனா பாதிப்பு ஏற்பட்டு அந்த பகுதியில் உள்ளவர்கள் வெளியேற வாய்ப்பு உள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்க முயற்சி செய்தும் யாரும் கேட்பதாக இல்லை. கரோனா தொற்று பரவல் அதிகமாகும் இந்த நேரத்தில் அதிகாரிகள் அலட்சியமாக இருப்பது வேதனையாக இருக்கிறது என்று பதிவு செய்தார்.
இதுவரை சென்னையில் மொத்த பாதிப்பு 30,444 ஆக உயா்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 316 இதுவரை இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.