Skip to main content

கரோனா விதியை கடைப்பிடிக்காத நிறுவனங்களுக்கு சீல், அபராதம்!!!

Published on 09/10/2020 | Edited on 09/10/2020
ddd

 

 

தமிழகத்தில் கரோனா வேகமாக பரவி வருகிறது. இதுவரை கரோனா நோய் தாக்கப்பட்டவர்கள் 6.50 லட்சம். மேலும் இந்நோயால் இதுவரை 10 ஆயிரம் பொதுமக்கள் பலியாகியுள்ளனர். ஆனால் மக்களிடம் கரோனா பற்றிய பயம் குறைந்துள்ளது. ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டு பேருந்து போக்குவரத்து தொடக்கம், வியாபார நிறுவனங்கள், கோயில்கள் திறப்பு போன்ற பல பகுதிகளில் மக்கள், தனி மனித இடைவெளியை கடைப்பிடிப்பதில்லை. அதேபோல் 30 சதவித மக்கள் முகத்துக்கான மாஸ்க் போடாமல் வலம் வருகின்றனர்.

 

 

ddd


அரசின் கரோனா விதிகளை கடைப்பிடிக்காத கடைகள், நிறுவனங்கள், தனிநபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அரசாங்கம் ஏற்கனவே அறிவித்துள்ளது. அதன்படி திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நகரில் கரோனா பரவல் கட்டுப்பாடு விதிக்கப்பட்ட பகுதிகளில், தனி மனித இடைவெளியை கடைப்பிடிக்காத ராமன் பல் மருத்துவமனை மற்றும் வாரி கட்பீஸ் என இரண்டு தொழில் நிறுவனங்களை பூட்டினர். அதோடு அவைகளுக்கு 11 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார் வட்டாட்சியர் பத்மநாபன்.

 

அதேபோல் முக கவசம் அணியாமல் வாகனங்கள் ஓட்டிய வாகன ஓட்டிகளை நிறுத்தி, முககவசம், கரோனாவை எந்தளவுக்கு தடுக்கும் என்பதை தனது மருத்துவ குழு மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களுக்கு முககவசம் வழங்கி அனுப்பிவைத்தார் ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கப் பொதுநல மனு; மனுதாரருக்கு அபராதம் விதித்த நீதிமன்றம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
The court fined the petitioner on PIL to grant bail to Kejriwal

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி (21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது. இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் அன்றைய தினமே (21.03.2024) அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே தன்னுடைய கைது நடவடிக்கையை ‘சட்டவிரோத கைது’ என அறிவிக்கக் கோரியும், ஜாமீன் கோரியும் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் கெஜ்ரிவால் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து கடந்த 9 ஆம் தேதி (09.04.2024) உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் தன்னைக் கைது செய்ததை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை நிராகரித்த டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 10 ஆம் தேதி (10.04.2024) மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே, அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த ஜாமீன் மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக்கோரி சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அவர் அளித்த அந்த மனுவில், ‘கெஜ்ரிவாலை அவரது பதவிக்காலம் மற்றும் விசாரணை முடியும் வரை நிலுவையில் உள்ள அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ யால் பதிவு செய்யப்பட அனைத்து குற்ற வழக்குகளிலும் இருந்து இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தது.

இந்த மனு இன்று (22-04-24) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு தற்காலிக தலைமை நீதிபதி மன்மோகன் மற்றும் நீதிபதி மன்மித் பிரீதம் சிங் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கெஜ்ரிவால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகுல் மெஹ்ரா, “இந்தப் பொதுநல வழக்கு முற்றிலும் அனுமதிக்க முடியாதது. மேலும், தவறான வழிகாட்டுதலானது. மனுதாரர், நீதிமன்றத்தை அரசியல் தளமாக்குகிறார். கெஜ்ரிவால் விரும்பினால், ஜாமீன் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வார். அப்படி இருக்கையில், அவருக்காக மனு தாக்கல் செய்ய இவர் யார்?. இது விளம்பர நோக்கம் கொண்ட வழக்கு ஆகும்” என்று வாதிட்டார்.

இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ‘கெஜ்ரிவாலுக்கு உங்கள் உதவி எதுவும் தேவையில்லை. அவருக்கு உதவ நீங்கள் யார்?.’ என்று தெரிவித்தனர். அப்போது, மனுதாரரின் தரப்பில் ஆஜரான கரண்பால் சிங், “முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரம் கொண்ட கெஜ்ரிவால் இல்லாததால் கடந்த ஒரு மாதமாக அரசுப் பணிகள் பாதிக்கப்பட்டு, மக்கள் அவதிப்படுகிறார்கள்” என்று வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள்,  ‘கெஜ்ரிவால் சார்பாக மனு தாக்கல் செய்ய மனுதாரருக்கு எந்த அதிகாரமும் இல்லை. மனுதாரர் சட்டக்கல்லூரி வகுப்புகளுக்கு செல்கிறாரா?. அவர் சட்டக் கொள்கைகளைப் பின்பற்றவில்லை என்று இதிலிருந்து தெரிகிறது’ எனக் கூறியும் இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல எனக்கூறியும் மனுதாரரின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும், மனுதாரருக்கு ரூ.75,000 அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.

Next Story

முதல்வரின் உத்தரவு; ஆய்வுக்குப் பிறகு 59 கடைகளுக்கு சீல்!

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
59 shops sealed for selling banned tobacco products in Erode

முதல் - அமைச்சர் உத்தரவின்படி உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை, வருவாய் துறை, மாநகராட்சி நிர்வாகம், போலீசார், பொதுப்பணித்துறை ஆகியோர் இணைந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா எனவும் பள்ளி கல்லூரி அருகிலும், கடைகளிலும் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி ஈரோடு கலெக்டர் உத்தரவின்படி கடந்த பிப்ரவரி மாதம் மட்டும் உணவு பாதுகாப்பு துறையினர் கடைகளில் குழு ஆய்வு மேற்கொண்டதில் 59 கடைகளில் போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த 59 கடைகளுக்கும்  சீல் வைக்கப்பட்டு ரூ. 12 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த கடைகளில் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக அரசின் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை, சட்ட விதிகளின்படி சம்பந்தப்பட்ட துறையினர் கொண்ட குழுவினர் முன்னிலையில்  வெண்டிபாளையம் மாநகராட்சி உரக்கடங்கில் அழிக்கப்பட்டது. இதன் மொத்த மதிப்பு ரூ. 2 லட்சத்து 73 ஆயிரத்து 956 ஆகும். பொதுமக்கள் உணவு மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் தொடர்பான புகார்களுக்கு 9444042322 என்ற வாட்ஸ் அப் எண்ணைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் தங்க விக்னேஷ் தெரிவித்துள்ளார்.