மனித குலத்திற்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்று பற்றி சமூக ஊடகங்களில் வதந்தி பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென ஏற்கனவே காவல்துறை அறிவித்திருந்தது.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தூக்கநாயக்கன்பாளையம் என்ற கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பூபாலன், கார்த்திகேயன் ஆகிய 2 பேர் வாட்ஸ்அப்பில் கரோேனா வைரஸ் தொற்று பற்றி பல வதந்திகளை பரப்பி மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அந்த இரண்டு இளைஞர்களையும் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் பரிந்துரையின் பேரில் காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
தமிழகத்தில் கரோனா பற்றி வதந்தி பரப்பிய பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் குண்டர் சட்டப்படி தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.