தமிழகத்தில் கரோனா மீண்டும் பரவிவரும் நிலையில், திருமண நிகழ்ச்சிகள் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளில் 100 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். துக்க நிகழ்வுகளில் 50 பேர் மட்டும் பங்கேற்க அனுமதி. அரங்கங்களில் நடக்கும் அரசியல், கல்வி, சமுதாய நிகழ்வுகளில் 200 பேர் மட்டும் பங்கேற்க அனுமதி. மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்துகள், சென்னை மாநகரப் பேருந்துகளில் பயணிகள் நின்றுகொண்டு பயணிக்க தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்து, அவை செயல்படுத்தப்பட்டும் வருகிறது. தொடர்ந்து கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மேலும் சில கட்டுப்பாடுகளை அதிகரிக்கலாமா என்பது குறித்து இன்று முதல்வர் ஆலோசனை நடத்தவுள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களில் நான்கு கட்டங்களாக தலைமைச் செயலாளர் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் இன்று முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்திற்குப் பிறகு கூடுதல் கரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் இந்த ஆலோசனை நடைபெற இருக்கிறது. இந்த ஆலோசனையில் சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.