Corona restrictions announced in Tiruppur, Nagai!
தமிழகத்தில் ஒருநாள் கரோனா பாதிப்பு என்பது இன்று 1,949 ஆக பதிவாகியுள்ளது. கடந்த 68 நாட்களுக்குப் பிறகு நான்கு நாட்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், இரண்டாவது நாளாக நேற்று கரோனா பாதிப்பு குறைந்தது. இந்நிலையில் இன்று மீண்டும் சற்று அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 1,56,635 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் இன்று 189 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் திருப்பூர் மற்றும் நாகை மாவட்டத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் பால், மருந்தகம் உள்ளிட்ட கடைகளைத் தவிர பிற கடைகள் காலை 6 மணிமுதல் மாலை 5 மணி வரை மட்டுமே செய்யப்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருப்பூரில் காலை 10 மணிமுதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள் காலை 6 மணிமுதல் மாலை 5 மணிவரை 50 சதவிகித இருக்கைகளுடன் செயல்படலாம். அதேநேரம் இரவு 9 மணிவரை ஹோட்டலில் பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி. சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் மாவட்டத்தில் வணிக வளாகங்கள், சூப்பர் மார்கெட்டுகள் இயங்க தடை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதேபோல் நாகை மாவட்டத்தில் ஆகஸ்ட் 31 ஆம் தேதிவரை வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் பக்தர்கள் தரிசனத்திற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக பக்தர்கள் வருவதற்கும் நாகை மாவட்ட ஆட்சியர் தடைவிதித்துள்ளார்.