தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 817 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18 ஆயிரத்தை தாண்டியிருக்கிறது. அதேபோல் சென்னையில் கரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12 ஆயிரத்தை கடந்துள்ளது.
தமிழகத்தில் 18,545 பேருக்கு இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 678 பேர் தமிழகத்திலும், மற்றவர்கள் பிற மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 558 பேருக்கு ஒரே நாளில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் வந்த 136 பேருக்கு இன்று கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் 5 பேருக்கும், விழுப்புரத்தில் 5 பேருக்கும், திருநெல்வேலியில் 4 பேருக்கும், கன்னியாகுமரி, திண்டுக்கல்லில் தலா ஒருவருக்கும் என மகாராஷ்டிராவில் இருந்து வந்தவர்களுக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை 12,203 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று 11,731 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 567 நபர்கள் குணம் அடைந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. மேலும் 6 பேர் உயிரிழந்ததால், கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 133 உயர்ந்திருப்பதாகவும், அதேபோல் தமிழகத்தில் 9,909 பேர் இதுவரை மொத்தம் குணமடைந்துள்ளனர் எனவும் சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.