Skip to main content

அலறும் ஆரணி... தவிக்கும் மக்கள்!- கண்டுக்கொள்ளாத அதிகாரிகள்

Published on 04/07/2020 | Edited on 04/07/2020
corona rate in arani

 

திருவண்ணாமலை மாவட்டத்தில் இரண்டு சுகாதார மாவட்டங்கள் உள்ளன, திருவண்ணாமலை சுகாதார மாவட்டம், செய்யார் சுகாதார மாவட்டம். தற்போதைய நிலையில் இரண்டு சுகாதார மாவட்டத்திலும் சேர்த்து 2,354 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் தங்கவைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். நோயாளிகளின் உறவினர்களும் தனித்து வைக்கப்பட்டு கண்காணித்து நோய் தொற்று உருவானவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

திருவண்ணாமலை சுகாதார மாவட்டத்தை விட செய்யார் சுகாதார மாவட்டத்தில் அதிகளவில் கரோனா பாதிப்பு மற்றும் பரவல் அதிகமாகவுள்ளது. அதாவது 1,500 பேர் அந்த சுகாதார மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள். இதுபற்றி நம்மிடம் பேசிய மருத்துவர்கள், வந்தவாசி, செய்யார், வெம்பாக்கம் தாலுகாக்கள், காஞ்சிபுரம் மாவட்டத்தை ஒட்டியுள்ள பகுதிகள். அதோடு சென்னைக்கு அதிகளவு வேலைக்கு சென்றவர்கள் இந்த பகுதியில் இருந்து சென்றவர்கள்தான்.

அங்கு லாக்டவுன் போட்டபிறகு தங்களது சொந்த ஊர் திரும்பியவர்கள் முறையாக பதிவு செய்து பரிசோதனை செய்துக்கொள்ளவில்லை. கிராம அளவில் அமைக்கப்பட்ட கமிட்டிகளும் அதனை கண்காணிக்கவில்லை. இதனால் தொற்று பரவிவிட்டது. அதனால்தான் தற்போது நேரடியாக பாதிக்கப்பட்டவர்களைவிட பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து தொற்று ஏற்பட்டவர்கள் அதிகமாக வருகிறது என்கிறார்கள்.

இந்நிலையில் ஆரணி நகரத்தில் ஊரடங்கு உள்ளதா என கேள்வி எழுப்பும் நிலையிலேயே உள்ளது என்கிற குற்றச்சாட்டை வியாபாரிகளும், சமூகநல ஆர்வலர்களுமே எழுப்பி வருகின்றனர். ஆரணியை சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான கிராம மக்கள் தங்கள் தேவைக்கு ஆரணி நகருக்கே வருகின்றனர். அப்படி வரும் பொதுமக்களிடம் வியாபாரிகள், வியாபார நிறுவனங்கள் என எங்கும் சமூக இடைவெளியை சுத்தமாக கடைபிடிக்கவில்லை, இதனால் நகரில் இருந்து கிராமத்துக்கும் கிராமத்தில் இருந்து நகருக்கும் நோய் பரவுகிறது.

கடைகள், நிறுவனங்கள், மார்க்கெட் பகுதிகள் என எங்கும் சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை. குறிப்பாக ஆரணியின் மிக பிரபலமான பாரி பேக்கரி, அமர் கேண்டீன், ராஜா துணிக்கடை, ஸ்டார் பிரியாணி கடைகள் என எங்கும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவில்லை. இதனால் காவல்துறையும் கண்டும் காணாமலே இருக்கிறது. இதுபற்றி சமூக வலைதளங்களில் பலர் குறைபட்டும் காவல்துறை, நகராட்சி, வருவாய்த்துறை என யாரும் கண்டுக்கொள்ளவில்லை.

இதுப்பற்றி அதிகாரி ஒருவரிடம் நாம் கேட்டபோது, “ஆரணி நகரம் என்பது அமைச்சர் சேவூர்.ராமச்சந்திரன் தொகுதிக்குள் வருகிறது. ஆரணியில் இருந்து 5 கி.மீ தூரத்தில் உள்ள சேவூர்தான் அமைச்சரின் ஊர். கடைக்காரர்கள் பலரும் நான் அமைச்சரின் ஆள் என்கிறார்கள். பாரி பேக்கரியில் எந்நேரமும் கூட்டம் குவிகிறது. சிறிய கடை கூட்டம் நெருக்கியடித்து நிற்கிறது. சமூக இடைவெளி என்றால் என்னவென்று கேட்கிறார்கள் அந்த கடையில் பணியாற்றும் ஊழியர்களே. அந்த பேக்கரி மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. காரணம், அது அமைச்சரின் வலதுகரமாக உள்ள அதிமுக பிரமுகரும், பால் கூட்டுறவு சங்க மாவட்ட துணை தலைவருமான பாபுவின் கடையது. விதிமுறையை கடைப்பிடிக்காத அவர் கடை மீது எப்படி நடவடிக்கை எடுப்பது, இதனால் அந்த சாலையில் உள்ள எந்த கடை மீதும் நடவடிக்கை எடுக்க முடிவதில்லை. இப்படி பல கடை உரிமையாளர்கள் அமைச்சரின் ஆள், ஆளும்கட்சி என்பதால் ஒன்றும் செய்ய முடியவில்லை” என்றார்.

அமைச்சரின் அரசு கார் ஓட்டுநருக்கு கரோனா பாசிட்டிவ் உறுதியானதும், அமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினர் பரிசோதனை செய்யப்பட்டனர். அமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தில் அனைவருக்கும் நெகட்டிவ் என வந்துள்ளது. அன்று முதல் கடந்த ஒருவாரமாக அமைச்சர் எந்த நிகழ்ச்சியிலும் கலந்துக்கொள்ளாமல் தனித்து வீட்டிலேயே குடும்பத்துடன் தனித்து இருக்கிறார். நெருங்கிய கட்சி பிரமுகர்களை கூட சந்திக்கவில்லை. அமைச்சர் அவ்வளவு பாதுகாப்பாக இருக்கும்போது, அவரது தொகுதி மக்கள் விவகாரத்திலும் கவனம் செலுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

சார்ந்த செய்திகள்

Next Story

கலச ஊர்வலம்; அனுமதி தந்த அதிகாரிகள் - கொண்டாடிய பாமக

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Officials who gave permission to bury the ashes of Vanniyar Sangam

திருவண்ணாமலை மாவட்டம், நாயுடுமங்கலம் சுற்றியுள்ள கிராமங்கள் வன்னியர் சமுதாயத்தினர் பலமாக உள்ள பகுதி. வன்னியர் சங்கத்தின் எழுச்சி பெரியதாக இருந்த காலகட்டத்தில் நாயுடுமங்கலம் கூட்டுசாலையில் பேருந்து நிறுத்தம் அருகில் 1989ஆம் ஆண்டு வன்னியர் சங்கத்தின் சார்பில் வன்னியர் சங்கத்தின் அடையாளம் எனச் சொல்லப்படும் அக்னி கலசம் அமைக்கப்பட்டது. பட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்படாத அந்தக் காலக்கட்டத்தில் வன்னியர் சங்கத்தின் தலைவர்களில் ஒருவராக இருந்த மருத்துவர் ராமதாஸ், அந்த அக்னி கலசம் சிலையை திறந்து வைத்தார்.

ஆண்டுகள் பல கடந்த நிலையில், பராமரிக்கப்படாமல் இருந்த அந்த அக்னி கலசம் சிலையை கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திருவண்ணாமலை டூ வேலூர் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்தின் போது நெடுஞ்சாலைத்துறை அகற்றியது. அப்போது, இதற்கு வன்னியர் சங்கம் மற்றும் பாமக கடுமையான எதிர்ப்பை தெரிவித்தது. வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த 10 ஆயிரம் பேர் நாயுடுமங்கலத்தில் திரண்டு மறியல் போராட்டம் செய்தனர். சாலை விரிவாக்கம் முடிந்ததும் மீண்டும் அச்சிலை அங்கு வைக்கப்படும் என அதிகாரிகள் வாக்குறுதி அளித்துள்ளனர்.

சாலை விரிவாக்க பணிகள் முடிந்த பின்பு அங்கு அக்னி கலச சிலை வைக்கப்படவில்லை. இதுகுறித்து வன்னியர் சங்கம் மற்றும் பாமகவினர் அதிகாரிகளுடன் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது அக்னி கலசம் சிலை அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டது என்றும் அதனால் மீண்டும் வைக்கமுடியாது என அதிகாரிகள் சொன்னதாக கூறியுள்ளனர்.

Officials who gave permission to bury the ashes of Vanniyar Sangam

தமிழ்நாடு முழுவதுமே அனுமதி பெறாமல் பல சிலைகள் உள்ளது. அதனை ஏன் எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளனர். நாயுடுமங்கலம் என்கிற கிராமத்தில் வன்னியர் சமுதாய கலசம் வைப்பது சாதி பிரச்சனையை உருவாக்கும்  என அதிகாரிகள் தரப்பில் கூறியுள்ளனர் . ஊர் பெயர்தான் நாயுடுமங்கலமே தவிர, அங்கு நாயுடு சமுதாயத்தினர் அவ்வளவாக இல்லை. அப்படியிருக்க இத்தனை ஆண்டுகளாக வராத சாதி பிரச்சனை இப்போது எப்படி வரும்? என கேள்வி எழுப்பியுள்ளனர். இதனைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்நிலையில், கடந்தவாரம் திடீரென திருவண்ணாமலை பாமக மா.செ பக்தவாச்சலம் தலைமையில் பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர், அக்னி கலச சிலையை கொண்டுவந்து விடியற்காலை நேரத்தில் அதே இடத்தில் வைத்தனர். இதனை அறிந்த போலீஸார் அச்சிலையை எடுத்துச்சென்று கலசப்பாக்கம் தாலுக்கா அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்தனர். இதுக்குறித்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், சாலை பணி முடிந்ததும் கலசத்தை வைக்கிறேன் என வாக்குறுதி தந்த அதிகாரிகள், இதுவரை வைக்கவில்லை. இதன்பின்னால் ஆளும்கட்சியின் திட்டமிட்ட அரசியல் உள்ளது. திமுக வன்னியர்களை திட்டமிட்டு புறக்கணிக்கிறது. கலசத்தை வைக்க அனுமதிக்கவில்லையென்றால் பெரும் போராட்டம் நடைபெறும் என அறிக்கை வெளியிட்டார். அதேபோல் இயக்குநர் கவுதமன் உட்பட வன்னியர் சங்கத்தை சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், மார்ச் 14 ஆம் தேதி நாயுடுமங்கலத்தில் கூடுவோம். கலசத்தை மீண்டும் வைப்போம், திரண்டுவாருங்கள் வன்னிய சொந்தங்களே என பாமக, வன்னியர் சங்கம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தினர் ஆலோசனை நடத்தினர்.

Officials who gave permission to bury the ashes of Vanniyar Sangam

திருவண்ணாமலை மாவட்டம் மட்டுமல்லாமல் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள வன்னியர் சங்கத்தினர் மற்றும் பாமகவினர் திருவண்ணாமலையில் குவிய தொடங்கினர். இருசக்கர வாகனங்கள், கார்களில் வன்னிய சங்க நிர்வாகிகள், பாமக நிர்வாகிகள், தொண்டர்கள் சுமார் 4 ஆயிரம் பேர் திருவண்ணாமலையில் இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள நாயுடுமங்கலத்திற்கு வன்னியர் சங்க மாநில தலைவர் பு.தா.இளங்கோவன் தலைமையில், மாநில கொள்கை பரப்பு செயலாளர் செல்வகுமார், முன்னாள் எம்.எல்.ஏ மா.செ கணேஷ்குமார் புறப்பட்டனர். வாகனத்தில் புதியதாக அக்னி கலசம் கொண்டுவந்தனர். தடையை மீறி கலசம் வைப்போம் என அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில் வருவாய்த்துறை, காவல்துறை திடீரென கலசம் வைக்க அனுமதி அளித்தது. அதனைத் தொடர்ந்து கொண்டுவந்த அக்னி கலசத்தை பேருந்து நிழற்கூடம் அருகே பீடம் கட்டி அதில் வைத்து வன்னியர் சங்கத்தினரும், பாமகவினரும் வெற்றி கூச்சலிட்டனர். எந்த அசம்பாவிதத்திலும் தொண்டர்கள் ஈடுப்படக்கூடாது என எச்சரிக்கை விடுத்தபடியே இருந்தனர். சிலை அமைக்கப்பட்டதும் அனைவரும் கலைந்து சென்றனர்.

பிரச்சனை ஏற்பட்டுவிடக்கூடாது என நான்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் என சுமார் 1200 போலீஸார் வழி நெடுக பாதுகாப்புக்கு நின்றனர். போக்குவரத்தில் மிக முக்கிய சாலையான திருவண்ணாமலை - வேலூர் சாலையில் போக்குவரத்து திருப்பிவிடப்பட்டது. இதனால் சுமார் 6 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story

வேட்டையாடும் லஞ்ச ஒழிப்புத்துறை; அலறும் அரசுத்துறை அலுவலர்கள்

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
Screaming bribe-taking government officials for A predatory anti-bribery department

திருவண்ணாமலை மாவட்டம், திருவத்திபுரம் செய்யாறு ஆற்றங்கரை தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (70). நெசவுத்தொழில் செய்து வந்த வெங்கடேசன், வயது மூப்பின் காரணமாகத் தறி ஓட்ட இயலாததால், மொத்த விலையில் ஊதுபத்தி வாங்கி சில்லறை வியாபாரமாக கிராமங்களில் சென்று விற்பனை செய்து வருகிறார். இவருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

இந்த நிலையில், வெங்கடேசன் கடந்த 1999 ஆம் ஆண்டு திருவத்திபுரம் ஊரைச் சேர்ந்த மேனகா என்பவரிடம் உரிமை மாற்று ஆவணமாக ரோட்டரி வழக்கறிஞர் மூலம் இடம் ஒன்றை வாங்கியிருந்தார். அந்த இடத்தை ஒட்டி செய்யாறு வட்டாட்சியர் மூலமாக இலவச வீட்டு மனை பட்டா ஒன்றும் பெற்றிருந்தார். இவை இரண்டும் முன்னும் பின்னும் இணைந்த ஒரே காலி மனையாக இருந்தது. அதில் கூரை வீடு கட்டி வசித்து வந்துள்ளார் வெங்கடேசன்.

தற்போது 70 வயது ஆன காரணத்தினால் வெங்கடேசன் அந்த இடத்தை  தன்னுடைய மகன் பாலமுருகன் பெயரில் எழுதி வைக்க நினைத்து செய்யாறு சார் பதிவாளர் அலுவலகம் சென்று சிலரிடம்  விசாரித்துள்ளார். அப்போது அவர்கள், 1999 ஆம் ஆண்டு மேனகா என்பவரிடம் உரிமை மாற்று ஆவணமாக பெற்ற பட்டாவின் பெயரை மாற்றம் செய்ய வேண்டும் அதன் பிறகு, மகன் பெயருக்கு நேரடியாக கிரையம் செய்தால் மட்டுமே சொத்தை மாற்ற முடியும் என்று சொல்லியுள்ளனர்.

Screaming bribe-taking government officials for A predatory anti-bribery department

அதனால், பட்டா மாற்றம் விஷயமாக கடந்த ஆண்டு டிசம்பர் 20 ஆம் தேதி, மக்களுடன் முதல்வர் முகாமில் வெங்கடேசன் மனு ஒன்றை அளித்துள்ளார். ஆனால், அந்த மனு மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, வெங்கடேசன் நேற்று (11-03-24) திருவத்திபுரம் நகராட்சியில் உள்ள சர்வேயர் பிரிவில் சர்வேயர் கன்னிவேலை சந்தித்து பட்டா மாற்றம் சம்பந்தமாக பேசியுள்ளார். அப்போது கன்னிவேல், லஞ்சமாக 40 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என்று கூறியுள்ளார். இதில் அதிர்ச்சி அடைந்த வெங்கடேசன், ‘எனக்கு 70 வயது ஆகிறது என்னால் அவ்வளவு பணம் கொடுக்க முடியாது. மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் உள்ளேன்’ என்பதை கூறியுள்ளார். அதற்கு கன்னிவேல், ‘கடைசியா சொல்றேன், 20 ஆயிரம் கொடுத்தால் தான் என்னால் பட்டா மாற்றம் செய்ய முடியும்’ என்று சொல்லி வெங்கடேசனை அனுப்பிவிட்டார். 

Screaming bribe-taking government officials for A predatory anti-bribery department

இதில் மனமுடைந்து போன வெங்கடேசன், திருவண்ணாமலை விஜிலன்ஸ் டி.எஸ்.பி வேல்முருகனை அணுகி இன்று (12-03-24) காலை புகார் மனு கொடுத்தார், இதன் அடிப்படையில் டி.எஸ்.பி வேல்முருகன் இன்று காலை ரசாயன பவுடர் தடவிய 20 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வெங்கடேசனிடம் தந்து அனுப்பியுள்ளார். ரசாயன பவுடர் தடவிய பணத்தை வெங்கடேசன், சர்வேயர் கன்னிவேலிடம் கொடுத்தபோது, அவர் அங்கிருந்த கணினி உதவியாளர் மாதவனிடம் கொடுக்க சொல்ல இவரும் தந்துள்ளார். அவர் பணம் பெற்றதும் உள்ளே நுழைந்த விஜிலன்ஸ் குழுவினர் கையும் களவுமாகப் பிடித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். இந்த நிகழ்ச்சி திருவத்திபுரம் நகராட்சி மற்றும் நகரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.