Skip to main content

விழுப்புரம் மாவட்ட கிராமங்களில் கரோனா தடுப்பு பணிகள் முடுக்கி விடப்படும்: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

Published on 07/08/2020 | Edited on 07/08/2020

 

 

radhakrishnan ias

 

 

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, மருத்துவ கல்லூரி டீன் குந்தவி தேவி, சுகாதாரத்துறை துணை இயக்குனர் செந்தில்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

 

கூட்டம் முடிந்த பிறகு சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தபோது, கரோனா தடுப்பு பணிகள் தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளது. அதனால் நோய் கட்டுக்குள் வந்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், திண்டிவனம் ஆகிய நகராட்சிகளிலும் செஞ்சி, விக்கிரவாண்டி ஆகிய பேரூராட்சிகளிலும் அதிகமானவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் பாதிப்பு கூடுதலாக ஏற்ப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 820 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். 

 

சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் மருத்துவ உப கரணவசதிகள் தேவையான அளவு உள்ளன. நோயாளிகளை மூன்று விதமாக பிரித்து கண்காணிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சுகாதாரப் பணிக்கு கூடுதலாக செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் இரவு நேரங்களில் நோயாளிகளை முழுமையாக கவனித்து இறப்பு விகிதத்தை குறைக்கும் வகையில் நல்ல முறையில் பணியாற்றி வருகிறார்கள்.

 

radhakrishnan ias

 

கரோனா பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்பை விட குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. புது டெல்லிக்கு அடுத்தபடியாக தமிழகத்தில்தான் அதிகம்பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னை, மதுரை, நெல்லை ஆகிய பகுதிகளில் நோய்த்தொற்று அதிகரித்திருந்தாலும் அங்கு 12 வகையான மருத்துவ சிகிச்சை முறைகள் நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இறப்புகளை தடுக்க இந்திய மருத்துவமுறையில் சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. விழுப்புரம் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் 12 பெண்களுக்கு மகப்பேறு மருத்துவமும் 34 பேருக்கு அறுவை சிகிச்சை பிரசவமும் செய்துள்ளனர். இப்படி சிறப்பாக செயல்பட்ட மருத்துவர்களுக்கு எமது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.

 

பணியின்போது இறந்த டாக்டர்கள் மட்டுமல்லாது மற்ற துறைகளிலும் பணிபுரிந்து உயிரிழந்தவர்களை கணக்கெடுத்து அவர்களது குடும்பத்தினருக்கு அரசு வழங்கும் இழப்பீட்டுத் தொகை படிப்படியாக அனைவருக்கும் கிடைப்பதற்கு உரிய நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. பொதுமக்களுக்கு கரோனா காரணமாக ஏற்படும் அச்சத்தை போக்கும் வகையில் டெலிபோன் மூலம் அவ்வப்போது 2000 பேருக்கு ஆலோசனைகளை வழங்கி வருகிறோம். இதுவரை 25,000 பேருக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது” இவ்வாறு கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பா.ம.க. வேட்பாளரை ஆதரித்து ராமதாஸ் பிரச்சாரம்!

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
PMK Ramdas campaign supporting the candidate

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக தமிழக முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று முன்தினம் (22.03.2024) திருச்சி சிறுகனூரில் நடைபெற்ற பிரச்சார பொது கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு திருச்சி தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோவையும், பெரம்பலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் அருண் நேருவையும் ஆதரித்து வாக்கு சேகரித்து தனது பிரச்சாரத்தை தொடங்கினார். இத்தகைய சூழலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (24.03.2024) மாலை திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டு வண்ணாங்கோயில் என்ற இடத்தில் இந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க.வின் முதல் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தை தொடங்கியுள்ளார்.

இதற்கிடையே பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பட்டாளி மக்கள் கட்சிக்கு காஞ்சிபுரம், அரக்கோணம், தர்மபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து பா.ம.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதன்படி அரக்கோணம் - பாலு, கடலூர் - தங்கர்பச்சான், திண்டுக்கல் - திலகபாமா, தர்மபுரி - செளமியா அன்புமணி, விழுப்புரம் - முரளி சங்கர், ஆரணி - கணேஷ் குமார், மயிலாடுதுறை - ம.க. ஸ்டாலின், சேலம் - அண்ணாதுரை, கள்ளக்குறிச்சி - தேவதாஸ்  காஞ்சிபுரம் - ஜோதி வெங்கடேஷ் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் விழுப்புரம் மக்களவைத் தொகுதி பா.ம.க. வேட்பாளர் முரளி சங்கரை ஆதரித்து கோவடி கிராமத்தில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்கு ஒரு நல்ல வேட்பாளரான முரளி சங்கர் நிறைய படித்துள்ளார். 6 மொழிகளில் சரளமாக பேசுவார். மக்களை பற்றி சிந்திக்க கூடியவர். மக்களுக்காக பாடுபடக்கூடியவர். சிறந்த விளையாட்டு வீரரும் ஆவார்” எனத் தெரிவித்தார். 

Next Story

திரௌபதி அம்மன் கோவில் இன்று திறப்பு; போலீசார் குவிப்பு

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Draupadi Amman temple opens today; Police build up

விழுப்புரம் திரௌபதி அம்மன் கோவில் இன்று திறக்கப்படுகிறது.

விழுப்புரம் அருகே உள்ள மேல்பாதி கிராமத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த திரௌபதி அம்மன் தீமிதி திருவிழாவில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் கோவிலுக்கு சீல் வைத்தது. கோவிலில் இதுவரை யாரும் அனுமதிக்கப்படவில்லை. எட்டு கட்டமாக சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் இரு தரப்பும் நீதிமன்றத்தை நாடி இருந்தது.

இந்நிலையில் 22 ஆம் தேதியான இன்று கோவிலைத் திறந்து பூஜை நடத்துவதற்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படாத நிலையில், ஒரு கால பூஜை மற்றும் பூசாரியால் செய்யப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று அதிகாலை முதலே கோவிலை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்ற நிலையில், தற்போது கட்டிங் மெஷின் மூலம் கோவில் பூட்டு உடைக்கப்பட்டு கோவிலைத் திறக்கும் பணி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், பாதுகாப்புப் பணிக்காக அதிகப்படியான போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.