Skip to main content

ஊரடங்கால் முடங்கிப்போன தொழிலாளர்கள் வாழ்வை மீட்டெடுக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தியவர்கள் கைது!

Published on 22/05/2020 | Edited on 22/05/2020

 

 corona lockdown impact - labourer issue

 

தனியார்மயம், தாராளமயம், 12 மணி நேர வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்தன.


அதன்படி, புதுச்சேரியிலும் போராட்டம் நடைபெற்றது. அனைத்து தொழிலாளர் குடும்பத்துக்கும் நிவாரண நிதி, அரிசி, பருப்பு போன்ற பொருட்களை விரைவாக வழங்க வேண்டும்,  மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கு தலா 7,500 வீதம் நிவாரணம்,  கட்டுமானம், ஆட்டோ, பேருந்து மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் அனைவருக்கும் நிவாரண நிதி, ஓய்வூதியர்களுக்கும் நிவாரண நிதி. நிரந்தர, கேஷுவல், கான்ட்ராக்ட்  தொழிலாளர்கள் முழுச் சம்பளம் வழங்க வேண்டும், வேலைநீக்கம், சம்பள வெட்டு, வேலை நேரத்தை அதிகரிக்கிற முயற்சிகளை தடுத்து நிறுத்தல், அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பஞ்சப்படி உயர்வு ரத்து செய்வதை கைவிடுதல், நிலுவை தொகையை உடனே வழங்குதல், நியாய விலைக்கடைகளை திறந்து பொதுவிநியோக திட்டத்தை பரவலாக்குதல், கோவிட்-19 கிருமித் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க உயிரை பணயம் வைத்து பணிபுரிந்த மருத்துவ பணியாளர்கள், உள்ளாட்சி தூய்மை பணியாளர்களை நிரந்தரப்படுத்தல், அரசு மற்றும் அரசு சார்பு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு  நிலுவை சம்பளத்தை உடனடியாக வழங்குதல், நிரந்தரமற்ற தொழிலாளர்களுக்கு அரசு நிச்சயித்த குறைந்தபட்ச ஊதியத்தை குறைக்க அரசு நியமித்துள்ள குழுக்களை உடனடியாகக் கலைத்தல், ஆஷா, மதிய உணவு மற்றும் அங்கன்வாடி உள்ளிட்ட திட்ட ஊழியர்கள் ஊழியர்களுக்கு 'தொழிலாளர்'  தகுதி வழங்கி, குறைந்தபட்சம் 18,000 ரூபாய் சம்பளம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரியில் 150-க்கும் மேற்பட்ட மையங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. 

மேலும் அனைத்து தொழிற்சங்க தலைவர்களும் பங்கேற்ற இந்த உண்ணாவிரத போராட்டம், தியாகிகள் சிலை முன்பு நடைபெற்றது. இப்போராட்டத்தில் ஏ.ஐ.டி.யு.சி, பாட்டாளி தொழிற்சங்கம், அரசு ஊழியர் சம்மேளனம், தென்னிந்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தொழிற்சங்கங்கள் கலந்து கொண்டன. அதையடுத்து விதிகளை மீறி போராட்டம் நடத்தியதாக தொழிற்சங்க தலைவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்! 

Next Story

சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல்; கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

Published on 30/07/2023 | Edited on 30/07/2023

 

child issue court judgement for labourer

 

சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது.

 

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள சந்திரபிள்ளைவலசு பகுதியைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (வயது 31). கூலித்தொழிலாளியான இவர், கடந்த 2014 ஆம் ஆண்டு, அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்த 6 ஆம் வகுப்பு மாணவனை கழிப்பறைக்கு அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார். மேலும் அந்தச் சிறுவனை பலமுறை மிரட்டி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார்.

 

இதையறிந்த பள்ளி ஆசிரியர்கள், மாணவனின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். இதுகுறித்து சிறுவனின் பெற்றோர் வாழப்பாடி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் காவல்துறையினர் ஹரிகிருஷ்ணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சேலம் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயந்தி, சிறுவனிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட ஹரிகிருஷ்ணனுக்கு ஆயுள் தண்டனை விதித்து ஜூலை 28 ஆம் தேதி தீர்ப்பு அளித்தார். மேலும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.