Skip to main content

ஊரடங்கு காலத்தில் மின் கட்டணம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது? உயர்நீதிமன்றம் கேள்வி

Published on 29/06/2020 | Edited on 29/06/2020
Electriciy bill

 

ஊரடங்கு காலத்தில் மின் கட்டணம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என மனுதாரரும், தமிழ்நாடு மின் பகிர்மான கழகமும், எழுத்துபூர்வ வாதங்களாக தாக்கல் செய்ய,  சென்னை  உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா பரவலை தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, மின் கணக்கீடு செய்யாததால், வீட்டு உபயோக தாழ்வழுத்த மின் நுகர்வோர், முந்தைய மாதத்திற்கு செலுத்திய கட்டணத்தின் அடிப்படையில் கட்டணம் செலுத்தலாம் எனவும், பின்னர் மின்சார கணக்கீடு செய்யும்போது, இரண்டு இரு மாதங்களுக்கும் சேர்த்து மின்சார பயன்பாடு கணக்கிட்டு, முந்தைய மாத கட்டணத்தின் அடிப்படையில் செலுத்தப்பட்ட தொகையைக் கழித்து விட்டு, மீத தொகைக்கு பில் செலுத்த வேண்டும் எனவும் மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

இந்த உத்தரவை ரத்துசெய்து, முந்தைய மின் அளவீட்டின் அடிப்படையில், முதல் இரு மாதங்களுக்கான கட்டணத்தை தனி ‘பில்’லாகவும், மீத யூனிட்களை அடுத்த இரு மாதங்களுக்கான ‘பில்’லாகவும் நிர்ணயித்து, தனித்தனி பில்கள் தயாரிக்க உத்தரவிடக்கோரி, தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் எம்.எல்.ரவி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கில், தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தாக்கல் செய்த பதில் மனுவில், வீடுகளில் மின் அளவீட்டுப் பணிகளை மேற்கொள்ள முடியாவிட்டால், முந்தைய மாத கட்டணத்தின் அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்க விதிகள் உள்ளதாகவும், கட்டண நிர்ணயத்தில் விதிமீறல் ஏதும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இன்று இந்த வழக்கு, நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மின் கட்டணம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பது குறித்து இரு தரப்பும்,  எழுத்துபூர்வமான வாதங்களாகத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு,  வழக்கை ஜூலை 6-ஆம் தேதிக்கு ஒத்துவைத்துள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்