Skip to main content

அறிகுறியே இல்லாமல் உடலில் புகும் கரோனா... -பூட்டப்பட்ட காவல் நிலையங்கள்

Published on 06/08/2020 | Edited on 06/08/2020
Erode District

 

 

தொடர்ந்து மக்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் கரோனா வைரஸ் அதன் தீவிரத்தை இழந்தபாடில்லை. இதன் பரவலால் ஈரோட்டில் மூன்று காவல் நிலையங்கள் பூட்டப்பட்டுவிட்டன. 

 

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்துள்ள ஆப்பக்கூடல் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த பெண் காவலர் ஒருவருக்கு கரோனா வைரஸ்  தொற்றுநோய் உறுதிசெய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த அனைத்து காவலர்களுக்கும் தொற்றுநோய் உள்ளதா என்று மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

 

பரிசோதனை முடிவில் பவானி காவல் நிலைய ஆய்வாளர் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் என்பவருக்கு தொற்று நோய் உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து அவர் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அதேபோல் பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே வசித்து வரும் தனியார் தொலைக்காட்சி நிருபர் செந்தில்குமாருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவரையும் பெருந்துறை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 

 

தொடர்ந்து பவானி நகரப் பகுதிகளில் வைரஸ் தொற்று பரவுதல் அதிகமாகி வருகிறது. பவானி காவல் ஆய்வாளருக்கு தொற்றுநோய் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து ஆப்பக் கூடல், பவானி ஆகிய காவல் நிலையத்தில் கிருமிநாசினிகள் அடிக்கப்பட்டு வருவாய் துறையினர் போலீஸ் ஸ்டேசனை பூட்டி அங்கு வெளி ஆட்கள் யாரும் வராத அளவிற்கு காவல் நிலையத்தை பாதுகாத்து வருகின்றனர்.

 

அதேபோல் சத்தியமங்கலம் அடுத்த புஞ்சைபுளியம்பட்டி உதவி காவல் ஆய்வாளருக்கு கரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து காவல் நிலையம் பூட்டப்பட்டது. அருகில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வரும் காவலர்கள் குடும்பத்தினர் மற்றும் காவலர்கள் 80 நபர்களுக்கு புளியம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் மருத்துவ பரிசோதனை செய்தனர்.

 

புளியம்பட்டி நகராட்சி ஊழியர்கள் காவல் நிலையம் மற்றும் காவலர் குடியிருப்பு பகுதியில் கிருமி நாசினி தெளித்தனர். கடந்த சில நாட்களாக புளியம்பட்டியில் புதிய தொற்று கண்டுபிடிக்கப்படாத நிலையில், இன்று உதவி காவல்துறை ஆய்வாளருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது புளியம்பட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பவானி நகராட்சி அலுவலர் ஒருவருக்கும், ஈரோடு மாநகராட்சி அலுவலர் ஒருவருக்கும் வைரஸ் தொற்று உறுதியானதால் இந்த அலுவலகங்களும் பூட்டப்பட்டன.

 

வைரஸ் தொற்று உறுதியான பலருக்கும் காய்ச்சல் அறிகுறி எதுவும் இல்லாமல் இருப்பதோடு, வைரஸ் பாதித்தவர்கள் எவ்வித தொடர்பிலும் இல்லாதவர்கள் என்பதால் போலீஸ் மற்றும் அலுவலர்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'மீண்டும் சிக்கிய 4 கோடி'-பறக்கும் படை அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
erode


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தியுள்ளன.

மேலும், தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர் நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் இரவு பகல் என சுழற்சி முறையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் தொகையைப் பறிமுதல் செய்து வருகின்றனர்.

அதன்படி ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, கோபி, அந்தியூர், பவானி சாகர் என மாவட்டம் முழுவதும் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளில் இதுவரைத் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையின் போது, உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.4 கோடியே 28 லட்சத்து 20 ஆயிரத்து 303 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்கள் காண்பித்ததால் ரூ.2 கோடியே 95 லட்சத்து 65 ஆயிரத்து 213 சம்பந்தப்பட்டவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதம் 1 கோடியே 32 லட்சத்து 55 ஆயிரத்து 90 ரூபாய் பணம் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் பாஜகவின் நெல்லை வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் அது தொடர்பாக அவருக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

தேர்தல் விதிமுறையால் மந்தமான ஈரோடு ஜவுளி சந்தை

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

ஈரோடு கனி மார்க்கெட் பகுதியில் தினசரி கடை, வார சந்தை நடைபெற்று வருகிறது. திங்கட்கிழமை மாலை முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை நடைபெறும் வாரச்சந்தை தென்னிந்திய அளவில் மிகவும் புகழ் பெற்றது. இந்த ஜவுளி வார சந்தைக்காக கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து மொத்த விலையில் துணிகளைக் கொள்முதல் செய்வார்கள்.

சாதாரண நாட்களில் ரூ.2 கோடி வரை வர்த்தகம் நடைபெறும். தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை காலங்களில் ரூ.6 கோடி வரை வர்த்தகம் நடைபெறும். இந்த ஜவுளி சந்தையானது ஈரோடு பார்க் மட்டுமின்றி சென்ட்ரல் தியேட்டர், அசோகபுரம் போன்ற பகுதிகளிலும் செயல்படும். இந்நிலையில் பாராளுமன்றத் தேர்தல் அறிவிப்பு கடந்த மாதம் 16ஆம் தேதி வெளியானது. தேர்தல் அறிவிப்பு வெளியான உடனேயே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டன. இதனால் ரூ.50,000 க்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லும் பணங்களைத், தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.

இதனால் ஈரோடு ஜவுளி வாரச் சந்தைக்கு வெளிமாநில வியாபாரிகள் வருவதில்லை. இதன் காரணமாக மொத்த வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதமாக தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக வெளிமாநில வியாபாரிகள் ஜவுளி வார சந்தைக்கு அறவே வரவில்லை. இதனால் மொத்த வியாபாரம் முடங்கிப்போய் உள்ளது. தற்போது ஆன்லைனில் ஒரு சில ஆர்டர்கள் மட்டும் வந்து கொண்டிருக்கிறது. இதேபோன்று சில்லறை விற்பனையும் மிகவும் மந்தமாக நடந்து வருகிறது. இன்று 10 சதவீதம் மட்டும் சில்லறை வியாபாரம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். மொத்த வியாபாரம் சுத்தமாக நடைபெறவில்லை. தேர்தல் முடிந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டால்தான், ஜவுளி வாரச்சந்தை மீண்டும் பழையபடி சூடு பிடிக்க தொடங்கும் என ஜவுளி வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் கோடிக்கணக்கில் துணிகள் தேக்கம் அடைந்துள்ளதாக வேதனை தெரிவித்தனர்.