corona

சேலம் மாவட்டம், கெங்கவல்லி பேரூராட்சி கடை வீதியைச் சேர்ந்த மளிகை கடைக்காரர் ஒருவரின் மகனின் திருமணம் கடந்த 10ம் தேதி ஈரோட்டில் நடந்தது.

Advertisment

மகன் திருமண விழா முடிந்து, வீடு திரும்பிய மளிகை கடைக்காரர், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த 14ம் தேதி அவர் இறந்தார்.

இதையடுத்து, அவருடைய சடலத்தை உறவினர்கள் அடக்கம் செய்தனர். அதன்பிறகே அவருக்கு கரோனா நோய்த்தொற்று இருந்ததும், அதனால்தான் அவர் இறந்தார் என்பதும் உறவினர்களுக்கு தெரிய வந்தது. இறந்தவரின் மனைவிக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

Advertisment

இதையடுத்து, இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட உறவினர்கள் 22 பேருக்கு சுகாதாரத்துறையினர் இரு நாட்களுக்கு முன்பு சளி மாதிரிகள், ரத்த மாதிரிகளை சேககரித்து ஆய்வுக்கு உட்படுத்தினர். பரிசோதனை முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. இதில், இறுதி சடங்கில் கலந்து கொண்டவர்களில் 7 ஆண்கள், 2 பெண்கள் என மொத்தம் 9 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

இறுதிச் சடங்குகளில் 25 பேருக்கு மேல் கலந்து கொள்ளக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், மேற்சொன்ன மளிகைக்கடைக்காரரின் இறுதிச்சடங்கில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்களில் 22 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் 9 பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகி உள்ள நிலையில், இறுதிச்சடங்கில் கலந்து கொண்டவர்களும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் பீதி அடைந்துள்ளனர்.