Skip to main content

கரோனா அதிகரித்த மாவட்டங்கள்... கட்டுப்பாடா...? முழுமுடக்கமா?

Published on 07/05/2021 | Edited on 07/05/2021

 

Corona increased districts ...

 

தமிழகத்தில் இரண்டாம் அலை காரணமாக நாளுக்கு நாள் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 26,465 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று சென்னையில் ஒரே நாளில் 6,738 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 1,35,355 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் 22,381 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை தமிழகத்தில் குணமடைந்து வீடு திரும்பினோர் எண்ணிக்கை 11,73,439  ஆக அதிகரித்துள்ளது.

 

இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி தமிழகத்தில் 197 பேர் கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். அரசு மருத்துவமனைகளில் 124 பேரும் தனியார் மருத்துவமனைகளில் 73 பேரும் கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனா உயிரிழப்பு மொத்த எண்ணிக்கை 15,171 ஆக அதிகரித்துள்ளது. 

 

இன்று மாலை சென்னை நந்தனம் வர்த்தக மையத்தில் உள்ள சிறப்புக் கரோனா வார்டை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்ட நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் உடன் ஆலோசனையில் பங்கேற்றார்.

 

Corona increased districts ...

 

கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ''தமிழகத்தில் தினசரி கரோனா தொற்று என்பது 25 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் உள்ளது. மருத்துவத்துறை, காவல்துறை, உள்ளாட்சித்துறை ஆகியவை இணைந்து செயல்பட வேண்டும். மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்தக்கூடிய அவசர, அவசியத் தேவை உள்ளது. கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்களை பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும். 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தானாக முன்வந்து கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்'' என்றார்.

 

இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை, மதுரை, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் கரோனா தொற்று எண்ணிக்கை அதிக அளவில் உயர்ந்துள்ளது. இதனால் தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் கரோனா கட்டுப்பாடுகளை அதிகரிக்கலாமா அல்லது முழு முடக்கம் அறிவிக்கலாமா என கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக இரவு நேர ஊரடங்கு, வார இறுதி ஊரடங்கு அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்