Skip to main content

மீண்டும் அதிகரித்த கரோனா...! மீண்டும் திறக்கப்பட்ட கோயம்பேடு...!

Published on 27/09/2020 | Edited on 27/09/2020
 Corona increased again ... Coimbate reopened ...

 

தமிழகத்தில் இன்று மேலும் 5,791 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில், கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,280 ஆக பதிவாகியுள்ளது. இதனால் சென்னையில் 4 வது நாளாக 1000 க்கும் மேலாக கரோனா உறுதி செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் மட்டும் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 1,63,423 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் தமிழகத்தில், ஒரே நாளில் 94,200 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் மூன்று மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த சென்னை கோயம்பேடு மார்க்கெட் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. சென்னையில் கரோனா பாதிப்பு அதிகரித்ததை அடுத்து கடந்த மே 5 ஆம் தேதி சென்னையில் மிகப் பெரிய மார்க்கெட்டான கோயம்பேடு மொத்த விற்பனை காய்கறி அங்காடி மூடப்பட்டது. இந்நிலையில் இன்று மாலை சந்தை மீண்டும் திறக்கப்பட்டது.

முதன்மை திட்ட அலுவலர் கோவிந்தராஜன் மற்றும் தலைமை திட்ட அலுவலர் பெரியசாமி ஆகியோர் ரிப்பன் வெட்டி கோயம்பேடு மார்க்கெட்டை திறந்து வைத்தனர். வியாபாரிகள் உற்சாகத்துடன் தனிமனித இடைவெளி பின்பற்றாமல் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அதேபோல் கரோனா மீண்டும் பரவாமலிருக்க மூடப்பட்டிருந்த காய்கறி சந்தை முழுவதும் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் இரவு 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே சரக்கு வாகனங்கள் அனுமதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 198 கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தூய்மை பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வெள்ளிக்கிழமை தோறும் சந்தைக்கு விடுமுறை அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களை அடையாளம் காணும் வகையில் நிர்வாகத்தால் சிறப்பு உடையும் வழங்கப்பட்டுள்ளது.

21  நாட்களுக்கு பிறகு கடந்த 4 நாட்களான சென்னையில் கரோனா தொற்று எண்ணிக்கை 1000க்கும் மேல் பதிவாகி வரும் நிலையில் இதற்கு காரணம் தளர்வுகள்தான் என்ற கருத்து நிலவும் நிலையில் தற்பொழுது கோயம்பேடு மார்க்கெட் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெறுப்பு பிரச்சாரம்; மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டி போராட்டம் (படங்கள்)

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, வெறுப்பு பிரச்சாரம் செய்துவரும்  பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவும், வழக்கு பதிவு செய்திடவும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் மத்திய சென்னை மாவட்டம் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை கண்டனம் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. பிறகு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க, பேரணியாக சென்றனர்.

Next Story

ஷர்மிளா தற்கொலை விவகாரம்; ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Sharmila incident RdO Order for investigation

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் ஜல்லடையான் பேட்டையைச் சேர்ந்த ஷர்மிளா (வயது 22) என்ற பெண்ணை கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரவீன் - சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், எதிர்ப்பையும் மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது. இந்த காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் இவர்கள் இருவரும் வசித்து வந்தனர்.

இத்தகைய சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால் ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு (22.04.2024) உயிரிழந்தார். மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியுள்ளதோடு கொலைக்கு காரணமானவர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா மரணம் தொடர்பாக கோட்டாட்சியர் (RDO - ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஷர்மிளாவின் உடற்கூராய்வு சற்று நேரத்தில் நடைபெற உள்ளது எனவும், உடற்கூராய்வு வீடியோ பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.