தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,859 பேருக்கு கரோனா செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை மொத்தமாக கரோனா உறுதி செய்யப்பட்ட எண்ணிக்கை என்பது 25,55,664 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 68 நாட்களாக கரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் ஒரே நாளில் 103 ஆக பாதிப்பு அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 1,57,024 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 1,859 ஆக உள்ளது. சென்னையில் மேலும் 181 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. சென்னையில் ஏற்கனவே நேற்று 164 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று 3வது நாளாக சென்னையில் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. அதேபோல் இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி 28 பேர் கரோனாவால் இறந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34,023 ஆக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 21 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 7 பேரும் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை 21,207 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இந்நிலையில் தளர்வுகள் அளித்தால் மக்கள் அதிகமாக கூடுகின்றனர் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் தனியார் மருத்துவமனையில் ரோபோடிக் கல்லீரல் அறுவை சிகிச்சை நிகழ்வை தொடங்கி வைத்து பேசிய தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ''கரோனா பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தளர்வுகள் அளித்தால் உடனே மக்கள் கூடி விடுகின்றனர். அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் மக்கள் அலட்சியப் படுத்துகின்றனர். இதுபோன்ற நேரத்தில் தனியார் மருத்துவமனைகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.