Skip to main content

கரோனா துயரம்... விரக்தியில் ஐஸ்கிரீம்களை ரோட்டில் கொட்டிய தொழிலாளி!!!

Published on 13/07/2020 | Edited on 13/07/2020
corona impact:incident in pudukottai

 

கரோனா தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில். ஒட்டு மொத்த தொழில்களும், தொழிலாளர்களும் முடங்கி போனார்கள், வாங்கிய கடனை கட்ட வழியில்லை. அன்றாடம் உணவுக்கே திண்டாடும் உழைக்கும் மக்கள். சின்ன, சின்ன தொழில் செய்த சிறு முதலாளிகள் மற்றவர்களிடம் கிடைக்கும் கூலி வேலைக்கு செல்கிறார்கள். இப்படி கரோனா துயரம் நீண்டு கொண்டே போகிறது.

 

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில். பல வருடங்களாக ஆலங்குடியில் ஒரு ஐஸ்கிரீம் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்தவர் கடந்த ஜனவரி மாதம் இறுதியில் ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் ( எல்லாம் கடன் ) தனது சொந்த ஊரில் ஐஸ் கிரீம் தயாரிக்கும் இயந்திரம் அமைத்து ஒரு மாதம் வரை உற்பத்தி செய்து பல வாகனங்கள் மூலம் திருவிழா, போன்ற கூட்டம் கூடும் இடங்களில் விற்பனை செய்து வந்தார். மார்ச் முதலில் மாசிமகம் திருவிழாவில் வியாபாரம் செய்தவர் அதற் பிறகு ஊரடங்கால் வியாபாரம் முடங்கியது.

 

corona impact:incident in pudukottai


ஊரடங்கு ரத்து செய்யப்பட்டு திருவிழாக்கள் தொடங்கும் என்ற நம்பிக்கையில் சுமார் ரூ. 2 லட்சம் ரூபாய்க்கு உற்பத்தி செய்த ஐஸ் கிரீம்களை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பாதுகாத்து வந்தார் 4 மாதங்கள் ஓடிவிட்டது. நாளுக்கு நாள் கரோனா அதிகரித்து வருவதால் எந்த விழாக்களுக்கும் அனுமதி இல்லை. அதனால் 4 மாதங்கள் பாதுகாத்து வந்த ஐஸ்கிரீம்களை இனியும் பாதுகாத்து மின்கட்டணம் கட்ட முடியாது என்று சாலையில் கொட்டி அழித்தார்.

 

corona impact:incident in pudukottai


இதுகுறித்து செந்தில் கூறும்போது, ரூ. 15 லட்சம் கடன் வாங்கி தொழில் தொடங்கி ஒரு மாதம் தான் முழுமையாக உற்பத்தி செய்தேன், அடுத்த மாதமே ஊரடங்கு. அதனால் கோடையை நம்பி தொழில் தொடங்கிய எங்களுக்கு மொத்தமாக இழப்பு ஏற்பட்டது. கடன் கொடுத்தவர்கள் கழுத்தை பிடிக்கிறார்கள். வட்டியும் கட்ட வழியில்லை கடனும் கட்ட வழியில்லை. தயாரிக்கப்பட்ட ஐஸ் கிரீம்களை பாதுகாக்க குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்ததால் ரூ. 15 ஆயிரம் மின்கட்டணம் வந்தது. அதை கட்ட கூலி வேலைக்கு சென்று மின்கட்டணம் கட்டிவிட்டேன். ஆனால் கடனையும், வட்டியும் கட்ட என்னால் முடியவில்லை. அதனால் கடன் கொடுத்தவர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறேன். அந்த விரக்தியில்தான் இனியும் மின்கட்டணம் கட்ட வசதி இல்லை என்பதால் இத்தனை நாள் பாதுகாத்து வைத்திருந்த ஐஸ் கிரீம்களை சாலையில் கொட்டி அழித்துவிட்டேன்.

 

அதனால் என்னை போன்ற பாதிக்கப்பட்டுள்ள சிறு தொழில் செய்பவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்குவதுடன் மறுபடியும் தொழில் செய்ய வங்கி கடன் உதவிகளும் செய்ய வேண்டும் என்றார் வேதனையுடன். கரோனா நோய் பாதிப்பைவிட அதன் காரணத்தால் ஏற்படும் பாதிப்புகள்தான் அதிகமாக உள்ளது. எப்போது விடியும்?

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாழைமரம் தோரணங்களோடு தயாரான மாதிரி வாக்குப் பதிவு மையம்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Voting registration center ready with banana trees

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி(நாளை) தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்புரை பரபரப்புகள் அடங்கியுள்ள நிலையில் ஆங்காங்கே வாக்குச் சாவடிகள் தயாராகிவிட்டது. மாதிரி வாக்குச் சாவடி என்று ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் சில வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

Voting registration center ready with banana trees

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் ஒரு வாக்குச் சாவடியைத் தேர்வு செய்து மாதிரி வாக்குச் சாவடியாக அமைக்கப்பட்டுள்ளது. வாக்குப் சாவடிக்கு முன்பு வாழை மரம், தோரணங்கள் கட்டி வாசலில் வண்ணக் கோலமிட்டு பூ, பழம் தாம்பூலம் தட்டுடன் இனிப்பு வழங்கி வாக்குப் பதிவுக்கு வரும் வாக்காளர்களை வரவேற்று வாக்குப் பதிவுக்கு அனுப்பும் வண்ணம், வாக்குப் பதிவு மையத்திற்குள் விழா கூடம் போல அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

ஏற்பாடுகளை கீரமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் செய்துள்ளனர்.

Next Story

வேங்கைவயல் விவகாரம்; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Vengaivayal Affair High Court action order

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் வழக்கறிஞர் மார்க்ஸ் ரவீந்தரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி கங்காபூர்வாலா அடங்கிய அமர்வில் இன்று (16.04.2024) விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில், “இந்த விவகாரத்தில் உண்மை கண்டறியும் சோதனையும், குரல் மாதிரி பரிசோதனையும்” நடத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மனுதாரர் தரப்பில், “சி.பி.சி.ஐ.டி. போலீசார் இதுவரை எந்த ஒரு முழு விசாரணையையும் நடத்தவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, “இந்தச் சம்பவம் நடந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. இத்தனை நாட்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். வேங்கைவயல் விவகாரத்தில் 3 மாதத்தில் விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு உத்தரவிடப்படுகிறது” எனத் தெரிவித்து வழக்கு ஜூலை 3 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.