Skip to main content

இதயம் மரத்து, இரக்கமற்ற தன்மை தலைக்கேறி... எடப்பாடி பழனிசாமிக்கு ஸ்டாலின் கண்டனம்

Published on 24/06/2020 | Edited on 24/06/2020
mk-stalin

 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'வந்தாரை வாழவைக்கும் சென்னை' என்று பெயர் பெற்ற மாநகரத்தில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் மனம் வெந்து நொந்து, தங்கள் ஊர்களை நோக்கிப் பயணப்படுகிறார்கள் என்றால், அதற்கு கரோனா பீதி மட்டுமே காரணமல்ல, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசும் எதையும் செய்ய முன்வரவில்லை, அநியாயமாகக் கைவிட்டுவிட்டதே என்ற சோகத்திலும், விரக்தியிலும்தான் புறப்பட்டுச் செல்கிறார்கள். இந்த மக்களுக்கு நம்பிக்கை அளித்திருக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையா இல்லையா? வாழ்க்கை விரட்டுகிறது, அத்தோடு சேர்ந்து அரசாங்கமும் மேலும் விரட்டுகிறது என்றால், மக்கள் என்ன செய்வார்கள்? 

முதல்வர் நாற்காலி, அமைச்சரவை, அரசாங்கம், நிதிக்கருவூலம், கோட்டை என அத்தனையையும் வைத்திருக்கும் முதலமைச்சர் பழனிசாமிதானே இம்மக்களைக் காக்க வேண்டும்? வேறு யாரையாவது அவர் கைகாட்டிவிட்டு, கண் காணாத இடத்திற்குப் போய் ஒளிந்து கொள்ள முடியுமா?

கரோனா பரவி தினமும் 2000-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள், தினமும் ஏறத்தாழ 50 பேர் அளவுக்கு இறந்து கொண்டு இருக்கிறார்கள். சென்னையில் அதிகம் பரவி வந்த தொற்று, கடந்த ஒரு வாரமாகத் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பரவி வருகிறது. இதனைத் தடுப்பதற்கு வழியற்ற முதலமைச்சர் பழனிசாமி, கோவைக்கும், திருச்சிக்கும் பயணமாகிறார். குடிமராமத்துப் பணிகளைப் பார்வையிடவும், இதர கட்டுமானப் பணிகளைப் பார்வையிடவும் செல்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதயம் மரத்து, இரக்கமற்ற தன்மை தலைக்கேறி, எடுத்தேன் கவிழ்த்தேன் எனும் எதேச்சதிகாரம் பெருகி வருவதையே இது காட்டுகிறது.

மாண்புமிகு முதலமைச்சர் திரு. பழனிசாமி அவர்களே! தமிழ்நாட்டு மக்கள் இப்போது இருப்பது மருத்துவ நிபுணர்கள் சொல்லும் 'கோல்டன் பீரியட்' ஆகும். இதில் ஒவ்வொரு நிமிடமும் முக்கியம். உங்களது அலட்சியத்தால், அக்கறை இன்மையால், தன்னிச்சையான அணுகுமுறையால், இந்த 90 நாட்களையும் வீணடித்தது போல,  இனியும் வீணடித்து, மக்களை வேதனை வலைக்குள் வீழ்த்தி விடாதீர்கள்  என்று கேட்டுக் கொள்கிறேன்.

கரோனா பேரழிவில் இருந்து மக்களைக் காப்பாற்றுங்கள்; வாழ்வியல் பேரிடரில் இருந்து மக்களை மீட்டுத்தாருங்கள்! காலம் உங்களுக்கு இட்டிருக்கும் கடமையிலிருந்து எப்படியாவது தப்பித்து நழுவி விடலாம் என்று கற்பனையிலும் நினைக்காதீர்கள்!” என்று கூறியுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜக உட்கட்சி மோதல்; 3 பேரிடம் போலீசார் விசாரணை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Police investigation of 3  BJP people 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் சென்னை பாஜக கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளராக இருக்கும் முத்து மாணிக்கம் என்பவர் கடந்த 20ஆம் தேதி துரைப்பாக்கம், மேட்டுக்குப்பம் பகுதியில் பாஜக கட்சி நிர்வாகியான ஜெகநாதன் என்பவரின் வீட்டில் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பாஜக நிர்வாகிகளான டிக்காராம், வெங்கட் என சிலர் மக்களவை தேர்தலின் போது பூத் ஏஜெண்ட் ஆக வேலை செய்ததற்கு பணம் தரவில்லை எனக்கூறி முத்து மாணிக்கத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.

இதனையடுத்து முத்து மாணிக்கம் அளித்த புகாரின் பேரில் பாஜகவினர் 8 பேர் மீது, கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் துரைப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பாஜகவின் துரைப்பாக்கம் மண்டல துணைத் தலைவர் வாசு, 95 ஆவது வட்டத் தலைவர் ஜெயக்குமார், 191 வது வார்டு வட்டத் தலைவர்  வெங்கடேசன் ஆகிய 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பூத் ஏஜெண்ட்களுக்கு வழங்கப்பட்ட பணத்தை பிரிப்பதில் ஏற்பட்ட தகராற்றில் பாஜக மாவட்ட செயலாளருக்கு சொந்த கட்சியினரே கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைப்பு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sharmila handed over to Praveen parent

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் ஜல்லடையான் பேட்டையைச் சேர்ந்த ஷர்மிளா (வயது 22) என்ற பெண்ணைக் கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரவீன் - சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், எதிர்ப்பையும் மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது. இந்தக் காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் இவர்கள் இருவரும் வசித்து வந்தனர்.

இத்தகைய சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால், ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு (22.04.2024) உயிரிழந்தார். மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியதோடு கொலைக்கு காரணமான தனது பெற்றோர் மற்றும் சகோதரர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா மரணம் தொடர்பாக கோட்டாட்சியர் (RDO - ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ஷர்மிளாவின் உடல் உடற்கூராய்வு செய்யப்படும் போது வீடியோ பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இன்று (25.04.2024) வருவாய் கோட்டாட்சியர் இப்ராஹிம் நேரில் விசாரணை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து ஷர்மிளா உடலுக்கு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடைபெற்று நிறைவடைந்த நிலையில் ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.