கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிலையம், கிளைசிறை, நீதிமன்றம், மார்கெட், பெட்ரோல் நிலையம் உள்ளிட்ட அனைத்து மக்கள் கூடும் பகுதியில் பேரூராட்சி செயல் அலுவலர் சீனிவாசன், சுகாதார ஆய்வாளர் ஜோதி உள்ளிட்ட பேரூராட்சி ஊழியர்கள் கிருமி நாசினி தெளித்தனர். பின்னர் பேருந்து நிலையத்தின் சுவரில் பொதுமக்கள் கை கழுவுவதற்காக வாஸ் பேசன் அமைத்து கரோனா குறித்த துண்டுப் பிரசுரத்தை வழங்கினார்கள். இதில் பொதுமக்கள் கிருமி நாசினியைக் கையில் தடவிக்கொண்டு கை கழுவி வருகிறார்கள். மேலும் பரங்கிப்பேட்டை பேருந்து நிலையத்திற்கு வரும் அனைத்து பேருந்துகளிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு பேருந்திலுள்ள பயணிகளிடம் கை கழுவுவதால் கரோனாவைத் தடுக்கலாம் என விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.
அதேபோல் பரங்கிப்பேட்டை சமூக ஆர்வலர்கள் அமைப்பு பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனை அருகே பொதுமக்கள் கூடும் பகுதியில் கரோனா தடுக்கும் வகையில் பேப்பர் கைக்குட்டை கிருமி நாசினியைப் பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இதில் பரங்கிப்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் ஆனந்த், அரசு மருத்துவர் சுமதி, பொது சுகாதார ஆய்வாளர் ரிச்சர்ட் எட்வின், பரங்கிப்பேட்டை சமூக ஆர்வலர்கள் முகமதுஹலிபா, அப்துல்பாசித், ஜாவித், ரியாஜ் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு பேப்பர், கைக்குட்டை, கிருமி நாசினி மற்றும் கரோனா வைரஸ் குறித்த துண்டுப் பிரசுரங்களை வழங்கி கை கழுவுவது குறித்து விளக்கி கூறினார்கள்.