கரோனோ நோய் பரவலை தடுக்கும் விதமாக மத்திய, மாநில அரசுகள் அறிவித்த ஊரடங்கு மே 31-ஆம் தேதிவரை நீடிக்கிறது. கடந்த வாரத்திற்கு முன்பு வரை கோயம்பேடு காய்கறி சந்தையிலிருந்து வந்தவர்களால் கடலூர் மாவட்டத்தில் கரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது. கடந்த வாரம் அதே வேகத்தில் நோயாளிகள் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பினர்.
இந்நிலையில் கடந்த ஓரிரு நாட்களாக புதிய நோய் தொற்றாளர்கள் இல்லாத நிலையில் இன்று மீண்டும் 5 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஏற்கனவே கடலூர் மாவட்டத்தில் கரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 23-ஆம் தேதி வரை 427 ஆக இருந்தது. இன்று 5 பேருக்கு தொற்று உறுதியானதால் மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 432 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 417 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பிதால் தற்போது நோயாளர்களின் எண்ணிக்கை 115 ஆக குறைந்துள்ளது.
தற்போது மாவட்டத்தில் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 11 பேர், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் 4 பேர், திட்டக்குடி அரசு மருத்துவமனையில் 2 பேர், புதுச்சேரி ஜிப்மரில் ஒருவர் என 18 பேர் கரோனா சிறப்பு வார்டுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
இந்நிலையில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என 3,351 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 10,817 பேரின் உமிழ்நீர் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் 432 பேருக்கு கரோனா இருப்பதும், 10,245 பேருக்கு இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. இன்னும் 140 பேரின் உமிழ்நீர் பரிசோதனை முடிவுகள் வெளிவர வேண்டியுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.