Skip to main content

பாபநாசம் படத்தைப் பார்த்து தப்பிக்க முயன்ற தூக்குத்தண்டனை குற்றவாளி; குடும்பத்தோடு சிக்கியது எப்படி?

Published on 22/11/2022 | Edited on 22/11/2022

 

convict who hatched a movie-style plan to escape execution

 

2013 ஆம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் அடுத்த மேல்பாலானந்தல் கிராமத்தை சேர்ந்த பரமசிவன் என்பவரின் 4 வயது பெண் குழந்தை இறந்த நிலையில் கிணற்றில் மிதந்தது. பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் பள்ளிக்குச் சென்று விட்டு வந்த 4 வயது குழந்தையைக் கடத்தி கொலைசெய்து கிணற்றில் வீசியது அதே ஊரைச் சேர்ந்த மணிகண்டன் என்பதைக் கண்டுபிடித்த மங்கலம் போலீசார், அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் 2018-இல் திருவண்ணாமலை மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றம் மணிகண்டனுக்கு தூக்குத்தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து மணிகண்டன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கில் அரசு தரப்பு சரியாக வாதாடவில்லை என அவரது தூக்குத்தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.

 

இந்தக் கொலையை தான் செய்யவில்லை என்றும் காவல்துறை தன்மீது பொய்யாக வழக்குப்பதிவு செய்து கைது செய்தது எனக் கூறி, இந்த வழக்கை மீண்டும் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என மணிகண்டன் மனுதாக்கல் செய்தார். அதனை ஏற்று நீதிமன்றமும் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது.

 

வழக்கு சி.பி.ஐ. விசாரணையில் உள்ள நிலையில், கடந்த அக்டோபர் 30 ஆம் தேதி மணிகண்டன் காணாமல் போனார். அவரின் இருசக்கர வாகனம், செல்போன், வாட்ச், சாவி ஆகியன எரிந்து கொண்டிருந்த வைக்கோல்போருடன் ஓரிடத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது. ரத்தக்கறைகளும் அந்த பகுதியில் இருந்தது. இதனால் மணிகண்டன் என்னவானார் என போலீசார் தேடத் தொடங்கினர். மணிகண்டன் காணாமல் போனதாகப் புகார் தந்த அவரது குடும்பத்தார் அதன்பின் அதுகுறித்து கவலைப்படவில்லை. இதனால் அவரது குடும்பத்தினரை போலீசார் தீவிரமாகக் கண்காணித்து வந்தனர்.

 

இந்நிலையில், இரண்டு தினங்களுக்கு முன்பு மணிகண்டன் கைது செய்யப்பட்டார். அவரோடு மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து போலீஸ் தரப்பில் தரப்பட்டுள்ள அறிக்கையில், குழந்தை கொலை வழக்கில் தனக்கு தண்டனை கிடைக்கும் என முடிவு செய்த மணிகண்டன், அதிலிருந்து தப்பிக்க, மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற மோகன்லால் நடித்த த்ரிஷ்யம்1 மற்றும் 2, தமிழில் கமல் நடித்து வெளியான பாபநாசம் படங்களைப் பார்த்து திட்டம் தீட்டியுள்ளார்.

 

convict who hatched a movie-style plan to escape execution

 

தனக்கு நெருக்கமான அரசு மருத்துவக்கல்லூரியில் பணியாற்றும் பாண்டியராஜ் மற்றும் நண்பன் சத்தியராஜோடு தனது ரத்தத்தை எடுத்து அது உறையாத மாதிரி பத்திரப்படுத்தியுள்ளார். திருவண்ணாமலையில் ஒரு திரையரங்கில் கார்த்தி நடித்த சர்தார் படத்துக்குச் சென்றவர் தியேட்டரில் ரகளை செய்து அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாவது போல் செய்துள்ளார்.

 

அக்டோபர் 29 ஆம் தேதி இரவு மங்கலத்தில் இருந்து பாலானந்தல் செல்லும் வழியில் உள்ள முனியன் என்பவரது வைக்கோல்போர்க்கு தீ வைத்து எரித்தவர், அங்கு தனது இருசக்கர வாகனம், செல்போன், வாட்ச் போன்றவற்றை வைத்து தன்னை அடித்து கடத்தி கொலை செய்தது போல் செட்டப் செய்துவிட்டு எஸ்கேப் ஆகியுள்ளார் மணிகண்டன். திருப்பதி, திருப்பூர், வேலூர் எனச் சுற்றிவிட்டு வேலை கிடைக்காமல் பதுங்க வழி தெரியாமல் தன் தங்கையிடம் உதவி கேட்டு வந்தவாசி வந்துள்ளார். அவரின் தங்கை கணவர் சரத்குமார், ஆரணியில் உறவினர் வீட்டில் தங்கவைத்துள்ளார். மணிகண்டனின் தாயார் மறைத்து வைத்திருந்த செல்போன் மூலமாக மணிகண்டனை மங்கலம் காவல்துறை உதவி ஆய்வாளர் நஸ்ரூதீன் தலைமையிலான போலீசார் கண்டுபிடித்து நவம்பர் 21 ஆம் தேதி கைது செய்தனர். சிறுமி கொலை வழக்கில் தூக்குத்தண்டனை உறுதியாகிவிடும் எனப் பயந்து தண்டனையில் இருந்து தப்பிக்க பாபநாசம் படம் பார்த்து திட்டம் போட்டதாகத் தெரிவித்துள்ளார்.

 

மணிகண்டனுக்கு உதவிய அவரின் தங்கை கணவர் சரத்குமார், நண்பர்கள் அரடாப்பட்டு கிராமத்தை சேர்ந்த சத்தியராஜ், திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தற்காலிக நர்ஸாக பணியாற்றும் மதுரை திருமங்கலம் ஊரனூரைச் சேர்ந்த பாண்டியராஜன் என நான்கு பேரைக் கைது செய்துள்ளனர். மணிகண்டன் மனைவி, தாயாரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கடைசி நேரத்தில் இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'- நீதிமன்றம் பதில்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'Can't order transfer at the last moment'- court reply

தமிழக கூடுதல் டிஜிபி அருண் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் எனவே அவரை  இடமாற்றம் செய்ய வேண்டும் எனக்கோரி வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஐபிஎஸ் அதிகாரி அருணை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது. அதிகாரிகள் நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் கண்காணித்து தவறு செய்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.  

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.கே.சாமி என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். தேர்தல் ஆணையம் சார்பில் காவல்துறை கூடுதல் டிஜிபி ஆக இருக்கக்கூடிய காவல்துறை அதிகாரி அருண் ஒரு கட்சிக்காக செயல்படுகிறார். அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என மனுதாரர் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் அந்த அதிகாரி இருப்பதாகவும் ஆகவே எந்த அச்சமும் மனுதாரர் கொள்ள வேண்டாம். அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி யாராக இருந்தாலும் தேர்தல் நடவடிக்கையை பொறுத்தவரை சரியான முறையில் இயங்கவில்லை என்றால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலை நியாயமாக நேர்மையாக நடத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. கடைசி நேரத்தில் காவல்துறை அதிகாரியை இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'  எனக் கூறி இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தனர். 

Next Story

ஐ.ஜே.கே கட்சி நிர்வாகி வீட்டின் கழிவறையில் ரூ.1லட்சம் பறிமுதல்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
IJK party executive house toilet Rs 1 lakh seized

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே திருமங்கலம் ஊராட்சியில் உள்ள இந்திய ஜனநாயக கட்சி நிர்வாகி வீட்டின் பின்புறம் உள்ள கழிவறையில் ரூபாய் ஒரு லட்சம் பணம் மற்றும் துண்டறிக்கைகளை  தேர்தல் பறக்கும் படையினர் நேற்று (17.4.2024) இரவு பறிமுதல் செய்தனர்.

பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி வேட்பாளராக இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றார்.இந்நிலையில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி லால்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருமங்கலம் மாதா கோயில் தெருவைச் சேர்ந்த சூசையப்பர் மகன் வினோத் சந்திரன்  ஐஜேகே கட்சியின் கிளைச் செயலாளராக உள்ளார். இவர் அந்தப் பகுதி வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக லால்குடி வருவாய் வட்டாட்சியர் முருகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து லால்குடி வட்டாட்சியர் உத்தரவின் பெயரில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் செழியன் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அதில், வினோத் சந்திரன் வீட்டின் பின்புறம் உள்ள கழிவறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சம் ரூபாய் பணம், பணம் விநியோகிக்கக்கூடிய பெயர் பட்டியல் மற்றும் டாக்டர் பாரிவேந்தரின் பாராளுமன்றத் தொகுதி பணிகள் என்ற தலைப்பில் அச்சிடப்பட்ட 500 புத்தகங்கள் 100 துண்டு பிரசுரங்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதனைத் தொடர்ந்தும் வினோத் சந்திரனிடம் நடத்திய விசாரணையில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் தன்னுடையது இல்லை என கூறியதை அடுத்து பறிமுதல் செய்த பணத்தினை பறக்கும் படை அலுவலர் செழியன் லால்குடி வருவாய் வட்டாட்சியர் முருகனிடம் ஒப்படைத்தார். அவர் பணத்தை லால்குடி கருவூலத்தில் வட்டாட்சியரிடம் ஒப்படைத்தார்.