2013 ஆம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் அடுத்த மேல்பாலானந்தல் கிராமத்தை சேர்ந்த பரமசிவன் என்பவரின் 4 வயது பெண் குழந்தை இறந்த நிலையில்கிணற்றில் மிதந்தது. பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் பள்ளிக்குச் சென்று விட்டு வந்த 4 வயது குழந்தையைக் கடத்தி கொலைசெய்து கிணற்றில் வீசியதுஅதே ஊரைச் சேர்ந்த மணிகண்டன் என்பதைக்கண்டுபிடித்த மங்கலம் போலீசார், அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் 2018-இல் திருவண்ணாமலை மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றம் மணிகண்டனுக்கு தூக்குத்தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து மணிகண்டன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கில் அரசு தரப்பு சரியாக வாதாடவில்லை என அவரது தூக்குத்தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்தக் கொலையை தான் செய்யவில்லை என்றும்காவல்துறை தன்மீது பொய்யாக வழக்குப்பதிவு செய்து கைது செய்தது எனக்கூறி,இந்த வழக்கை மீண்டும் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என மணிகண்டன்மனுதாக்கல் செய்தார்.அதனை ஏற்று நீதிமன்றமும் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது.
வழக்கு சி.பி.ஐ. விசாரணையில் உள்ள நிலையில், கடந்த அக்டோபர் 30 ஆம் தேதி மணிகண்டன் காணாமல் போனார். அவரின் இருசக்கர வாகனம், செல்போன், வாட்ச், சாவி ஆகியனஎரிந்து கொண்டிருந்த வைக்கோல்போருடன் ஓரிடத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது. ரத்தக்கறைகளும் அந்த பகுதியில் இருந்தது. இதனால் மணிகண்டன் என்னவானார் என போலீசார் தேடத் தொடங்கினர். மணிகண்டன் காணாமல் போனதாகப் புகார் தந்த அவரது குடும்பத்தார் அதன்பின் அதுகுறித்து கவலைப்படவில்லை. இதனால் அவரது குடும்பத்தினரை போலீசார் தீவிரமாகக் கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில், இரண்டு தினங்களுக்கு முன்பு மணிகண்டன் கைது செய்யப்பட்டார். அவரோடு மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து போலீஸ் தரப்பில் தரப்பட்டுள்ள அறிக்கையில், குழந்தை கொலை வழக்கில் தனக்கு தண்டனை கிடைக்கும் என முடிவு செய்த மணிகண்டன், அதிலிருந்து தப்பிக்க, மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற மோகன்லால் நடித்த த்ரிஷ்யம்1 மற்றும் 2, தமிழில் கமல் நடித்து வெளியான பாபநாசம் படங்களைப்பார்த்து திட்டம் தீட்டியுள்ளார்.
தனக்கு நெருக்கமானஅரசு மருத்துவக்கல்லூரியில் பணியாற்றும் பாண்டியராஜ் மற்றும்நண்பன் சத்தியராஜோடு தனது ரத்தத்தை எடுத்து அது உறையாத மாதிரி பத்திரப்படுத்தியுள்ளார். திருவண்ணாமலையில் ஒரு திரையரங்கில் கார்த்தி நடித்த சர்தார் படத்துக்குச் சென்றவர் தியேட்டரில் ரகளை செய்து அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாவது போல் செய்துள்ளார்.
அக்டோபர் 29 ஆம் தேதி இரவு மங்கலத்தில் இருந்து பாலானந்தல் செல்லும் வழியில் உள்ள முனியன் என்பவரது வைக்கோல்போர்க்கு தீ வைத்து எரித்தவர், அங்கு தனது இருசக்கர வாகனம், செல்போன், வாட்ச் போன்றவற்றை வைத்து தன்னை அடித்து கடத்தி கொலை செய்தது போல் செட்டப் செய்துவிட்டு எஸ்கேப் ஆகியுள்ளார் மணிகண்டன். திருப்பதி, திருப்பூர், வேலூர் எனச் சுற்றிவிட்டு வேலை கிடைக்காமல் பதுங்க வழி தெரியாமல் தன் தங்கையிடம் உதவி கேட்டு வந்தவாசி வந்துள்ளார். அவரின் தங்கை கணவர் சரத்குமார், ஆரணியில் உறவினர் வீட்டில் தங்கவைத்துள்ளார். மணிகண்டனின் தாயார் மறைத்து வைத்திருந்த செல்போன் மூலமாக மணிகண்டனை மங்கலம் காவல்துறை உதவி ஆய்வாளர் நஸ்ரூதீன் தலைமையிலான போலீசார் கண்டுபிடித்து நவம்பர் 21 ஆம் தேதி கைது செய்தனர். சிறுமி கொலை வழக்கில் தூக்குத்தண்டனை உறுதியாகிவிடும் எனப் பயந்து தண்டனையில் இருந்து தப்பிக்க பாபநாசம் படம் பார்த்து திட்டம் போட்டதாகத்தெரிவித்துள்ளார்.
மணிகண்டனுக்கு உதவிய அவரின் தங்கை கணவர் சரத்குமார், நண்பர்கள் அரடாப்பட்டு கிராமத்தை சேர்ந்த சத்தியராஜ், திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தற்காலிக நர்ஸாக பணியாற்றும் மதுரை திருமங்கலம் ஊரனூரைச் சேர்ந்த பாண்டியராஜன் என நான்கு பேரைக் கைது செய்துள்ளனர். மணிகண்டன் மனைவி, தாயாரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.