Skip to main content

கைதி தப்பி ஓட்டம்; பிடித்து கொடுத்த சேலம் போலீஸ் - கோட்டை விட்ட நாமக்கல் காவல்துறை! 

Published on 03/07/2023 | Edited on 03/07/2023

 

 convict has escaped from the police in Namakkal

 

ஈமு கோழி மோசடி வழக்கில் பத்து ஆண்டுகள் தண்டனை பெற்று தலைமறைவாக இருந்த குற்றவாளியை சேலம் காவல்துறையினர் பிடித்துக்  கொடுத்த நிலையில், நாமக்கல் காவல்துறையினர் ஒரே இரவில் அவரை தப்பிக்க வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

 

சேலம் அன்னதானப்பட்டி காவல்நிலைய காவல்துறையினர், கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு, சேலத்தில் உள்ள ஒரு தனியார் தங்கும்  விடுதியில் சோதனை நடத்தினர். அங்கு சந்தேகத்திற்குரிய வகையில் தங்கியிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அந்த நபர், ஆந்திரா மாநிலம் சித்தூர் அருகே உள்ள பாப்பிசெட்டிப்பள்ளி ராசன்னப்பள்ளியைச் சேர்ந்த இனோ ஆண்ட்ரூஸ்(41)  என்பது தெரிய வந்தது. அவர் மீது நாமக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையில் ஈமு கோழி மோசடி வழக்கில் கோவை டான்பிட் நீதிமன்றம் கடந்த  ஆண்டு ஜூலை மாதம் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 3.60 கோடி ரூபாய் அபராதமும் விதித்தது. 

 

இதையடுத்து இனோ ஆண்ட்ரூஸ்  தலைமறைவாகிவிட்ட நிலையில் அவரை காவல்துறையினர் தேடிக்கொண்டு இருப்பது தெரியவந்தது. அவரை பிடித்து நாமக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையில் அன்னதானப்பட்டி காவல்துறையினர் ஒப்படைத்தனர். அதையடுத்து நாமக்கல் பொருளாதார குற்றப்பிரிவு காவலர்கள் செல்வகுமார், கேசவன் ஆகியோர் இனோ ஆண்ட்ரூஸை அழைத்துச்சென்று  கோவையில் உள்ள டான்பிட் நீதிமன்றத்தில் ஜூன் 30ம் தேதி ஆஜர்படுத்தினர். ஆனால் டான்பிட் நீதிமன்றமோ, அவரை மறுநாள் (ஜூலை 1) காலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டது. இப்போதே மதியம்  ஆகிவிட்டது; இரவு ஒருபொழுதை கழித்தால் காலையில் நேரமாக நீதிமன்றத்தில் கைதியை ஆஜர்படுத்தி விடலாம் எனக்கருதிய காவலர்கள்  இனோ ஆண்ட்ரூஸை கோவையில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதிக்கு அழைத்துச் சென்று தங்களுடன் தங்க வைத்துக் கொண்டனர்.     நள்ளிரவு 1.30 மணியளவில் காவலர்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்ததை அறிந்த இனோ ஆண்ட்ரூஸ், அந்த அறையை விட்டு வெளியே வந்தார்.  விடுதி அறையின் கதவை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார்.     காவலர்கள் காலையில் எழுந்து பார்த்தபோது தங்களுடன் படுத்தியிருந்த கைதியைக் காணாமல் திகைத்தனர். கதவை திறக்க முயன்றபோது அது வெளிப்பக்கமாக பூட்டப்பட்டு இருப்பதும், இனோ ஆண்ட்ரூஸ் தப்பி ஓடிவிட்டதும் தெரிய வந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த  அவர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.     

 

தகவலின் பேரில் நாமக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் கோவை விரைந்தனர். காவலர்கள் அறை எடுத்து தங்கிய  விடுதியில் விசாரணை நடத்தி வருகின்றனர். விடுதி மற்றும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். வழிக்காவலுக்குச் சென்ற காவலர்கள் உண்மையில் அயர்ந்து தூங்கியபோது, அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கைதி இனோ ஆண்ட்ரூஸ் தப்பிச்சென்றாரா அல்லது காவலர்களே அவரை தப்பிக்க வைத்தார்களா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து  வருகிறது. பணியின்போது அலட்சியமாக செயல்பட்ட காவலர்கள் இருவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை பாயும் எனத் தெரிகிறது. இந்த சம்பவம் நாமக்கல் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்; சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Rs. 4 crore confiscation issue; CBCID case registration

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் கடந்த 23 ஆம் தேதி (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தமமும் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரையும் அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. 

Rs. 4 crore confiscation issue; CBCID case registration

இது குறித்து நயினார் நாகேந்திரன் சென்னை தியாகராயர் நகரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்தப் பணத்திற்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார்.

இத்தகைய சூழலில் தாம்பரம் போலீசார் இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு நேற்று (28.04.2024) கொண்டு சென்று ஒப்படைத்தனர். அதாவது பணம் எடுத்துச் சென்ற சூட்கேஸ்கள், 7 பைகள், 3 செல்போன்கள், 15 பேரிடம் பெற வாக்குமூலம் தகவல் அடங்கிய ஆவணங்கள், நயினார் ஹோட்டல் அருகே இருந்த சிசிடிவி காட்சிகள், ரயில் டிக்கெட் பெற நயினார் கையொப்பமிட்ட அவசர கோட்டாவிற்கான படிவம் ஆகியவற்றை தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான போலீசார் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். 

Rs. 4 crore confiscation issue; CBCID case registration

இந்நிலையில் இந்த வழக்கு குறித்து சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முன்னதாக இந்த வழக்கில் சதீஷ், நவீன், பெருமாள் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. விரைவில் சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

துப்பாக்கி முனையில் நகைகள் கொள்ளை சம்பவம்; தனிப்படை போலீசார் அதிரடி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
avadi jewelry incident police in action

சென்னையை அடுத்துள்ள ஆவடி முத்தாபுதுப்பேட்டையில் பிரகாஷ் என்பவர் ‘கிருஷ்ணா ஜுவல்லரி’ என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்த நகைக்கடைக்கு கடந்த 15 ஆம் தேதி (15.04.2024) நண்பகல் 12 மணியளவில் 5 மர்ம நபர்கள் தமிழக பதிவெண் கொண்ட மாருதி ஸ்விஃப்ட் காரில் வந்துள்ளனர். இவர்களில் 4 பேர் கடையின் உரிமையாளரான பிரகாஷின் கை மற்றும் கால்களை கட்டிப்போட்டுத் துப்பாக்கி முனையில் நகைக் கடையில் இருந்து ரூ.1.5 கோடி மதிப்பிலான பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். இந்தச் சம்பவம் குறித்து முத்தாபுதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், அந்தக் கடைக்குள் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராக்களின் பதியப்பட்ட காட்சிகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் நகைக்கடை உரிமையாளரின் கை, கால்களை கட்டிப்போட்டு நகைக்கடையில் இருந்து ரூ.1.5 கோடி மதிப்பிலான பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஆவடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. 

avadi jewelry incident police in action

இதனையடுத்து நகைகளை கொள்ளையடித்த கொள்ளையர்களின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டிருந்தனர். இது குறித்து கூடுதல் கமிஷனர் ராஜேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ‘பட்டப்பகலில் நகைக்கடைக்குள் புகுந்து கொள்ளையடித்த கொள்ளையர்களைப் பிடிக்க 8 தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றோம். மேலும், கொள்ளையர்கள் வந்த காரின் எண் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த அடையாளங்களை வைத்து குற்றவாளிகளை தேடும் பணியை மேலும் தீவிரப்படுத்தி வருகிறோம்’ எனத் தெரிவித்திருந்தார்.

மேலும் இந்த நகைக்கடையில் கைவரிசை காட்டியது வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என போலீசார் விசாரணையில் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து 8 தனிப்படைகள் அமைத்து போலீசார் கொள்ளையர்களை ஆந்திரா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதே சமயம் கொள்ளையர்கள் காரை பயன்படுத்தாமல் ரயில் அல்லது விமானம் மூலம் தப்பிச் சென்றிருக்கலாம் எனவும், கொள்ளையர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனவும் போலீசார் தகவல் தெரிவித்திருந்தனர். சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு கொள்ளையர்கள் பயன்படுத்திய காரின் பதிவெண்ணை போலீசார் கண்டுபிடித்திருந்தனர். 

avadi jewelry incident police in action

இந்நிலையில் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாகவும், கொள்ளை சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டதாக கூறி தினேஷ் குமார் மற்றும் சேட்டன்ராம் ஆகியஇருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும் தற்போது சென்னையில் தங்கி இருப்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இதில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.