Skip to main content

தனிவழி சர்ச்சை... விரக்தியில் பக்தர்கள்... கண்டுகொள்ளாத அதிகாரிகள்

Published on 11/10/2022 | Edited on 11/10/2022

 

tn

 

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கிரிவலம் என்பது தென்னிந்தியாவில் புகழ்பெற்றது. அண்ணாமலையார் கோவில் பின்புறமுள்ள மலையை அண்ணாமலையாராக நினைத்து 14 கி.மீ தூரத்தை பக்தர்கள் வலம் வருகின்றனர். வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்தாலும், ஒவ்வொரு பௌர்ணமியன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

 

வார விடுமுறை நாட்கள், பௌர்ணமி நாள், பண்டிகை நாட்களில் நகரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அளவுக்கு பக்தர்கள் வாகனங்களில் வந்து குவிவதால் அண்ணாமலையார் கோவிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்ய குறைந்தது 4 மணி நேரம் ஆகிவிடுகிறது. சுவாமி தரிசனத்துக்காக வரிசையில் செல்லும் பக்தர்கள் கால்வலி ஏற்பட்டால் கூட எங்கும் உட்காரகூட முடியாது. கழிவறைக்கு போக வேண்டும் என அவசரமாக வரிசையில் இருந்து வெளியே வந்தால் கோவிலுக்கு வெளியே வரவேண்டும், அதன்பின் உள்ளே செல்ல முடியாது. இதனால் மணிக்கணக்கில் காத்திருக்கும் பக்தர்கள் 4 மணி நேரம் சிறுநீரை கூட அடக்கிக்கொண்டு சுவாமி தரிசனம் செய்வதால் நொந்து போகின்றனர். பக்தர்கள் கூட்டம், அதனால் சுவாமி தரிசனம் செய்ய தாமதம் என ஒற்றை வார்த்தையில் கோவில் நிர்வாகமும், காவல்துறையும் கூறுகிறது.

 

உண்மையான காரணம் அதுதானா?

 

அண்ணாமலையார் கோவிலுக்குள் செல்ல நான்கு வழிகள் உள்ளன. பொதுவாக ராஜகோபுரம் மற்றும் திருமஞ்சன கோபுரம் வழியாக கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். விவரம் அறிந்த உள்ளுர் பக்தர்கள், முக்கிய விருந்தினர்கள், அரசுத்துறையை சேர்ந்த அதிகாரிகள், அவர்களது குடும்பத்தினர் அம்மணியம்மன் கோபுரம் வழியாக கோவிலுக்குள் செல்வார்கள். கோவில் ஊழியர்கள், அறநிலையத்துறையை சேர்ந்தவர்கள், கோவில் சிவாச்சாரியார்கள் அவர்களது குடும்பத்தார் பேகோபுரம் வழியாக உள்ளே செல்வார்கள். பக்தர்கள் அதிகளவில் வருவார்கள் என்பதால் பௌர்ணமி மற்றும் திருவிழா நாட்களில் கோவிலுக்குள் அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனம் போன்றவை கிடையாது.

 

TN

 

பௌர்ணமியன்று வெளிமாநில, வெளி மாவட்ட பக்தர்கள் கிரிவலம் வருவதற்கு முன்பு அண்ணாமலையார் – உண்ணாமலையம்மனை தரிசனம் செய்துவிட வேண்டும் என வரிசையில் நிற்கிறார்கள், ஆயிரக்கணக்கானவர்கள் வரிசையில் நிற்பார்கள்.

 

வரிசையில் காத்திருக்க முடியாதவர்கள் அல்லது விரும்பாதவர்கள் மாற்று வழி என்னவென பார்க்கிறார்கள். சிறப்பு தரிசனம் செய்ய விரும்புகிறவர்களை குறிவைத்து கோவிலுக்குள் அழைத்து செல்லவே புரோக்கர்கள் சிலர் உள்ளனர். பௌர்ணமி நாட்களில் ஆட்களின் எண்ணிக்கையை பொறுத்து 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை வசூலித்து விடுவார்கள். அந்ததொகையில் கோவிலில் பணியாற்றும் சில சிவாச்சாரியர்களுக்கு, கோவில் அதிகாரிகளுக்கு பங்கு தந்துவிடுவார்கள்.

 

பேகோபுரம் வழி அல்லது அம்மணியம்மன் கோபுரம் வழியாக பணம் தந்த பக்தர்களை உள்ளே அழைத்து சென்று சுவாமி தரிசனம் செய்யவைத்து, வெளியே அழைத்துவந்து விட்டுவிடுவார்கள். இது பாதுகாப்புக்கு நிற்கும் காவல்துறை அதிகாரிக்கும் தெரியும் ஆனால் கண்டுக்கொள்வதில்லை. அதற்கு காரணம், மற்ற நாட்களைவிட பௌர்ணமி நாட்களில் காவல்துறையில் உள்ள உயர்அதிகாரிகளின் குடும்பத்தினர், அவர்களது உறவினர்கள், நண்பர்கள் என பெரும் பட்டாளமே ஒவ்வொரு பௌர்ணமிக்கும் வருகின்றனர். அவர்கள் புறப்படும்போதே மாவட்ட காவல்துறைக்கு தகவல் அனுப்பிவிடுகிறார்கள். அவர்களின் வாகனங்களை நகர எல்லையில் இருந்து எந்த சிக்கலும் இல்லாமல் அழைத்துவந்து ஹோட்டல்களில் தங்கவைத்து பின்பு அம்மணியம்மன் கோபுரம் வழியாக கோவிலுக்குள் அழைத்து சென்று சுவாமி தரிசனம் செய்ய வைக்கின்றனர்.

 

மாவட்டத்தில் நடக்கும் அத்தனை சம்பவங்களையும் எஸ்.பியின் கவனத்துக்கு கொண்டுசெல்வதே எஸ்.பி தனிப்பிரிவின் பணி. இதற்காக இன்ஸ்பெக்டர் தலைமையில் ஒருபெரிய டீமே பணியாற்றுகிறது. ஒவ்வொரு காவல்நிலையத்திலும் காவல்நிலைய எல்லையில் நடக்கும் சம்பவங்கள், காவல்நிலையத்துக்கு வரும் புகார்கள், அதனால் வரும் பிரச்சனைகள், காவல்நிலையத்தில் நடக்கும் தவறுகளை எஸ்.பி தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் மூலமாக எஸ்.பியின் கவனத்துக்கு கொண்டு செல்கின்றனர். இதற்காக இவர்கள் 24 மணி நேரமும் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். ஆனால், திருவண்ணாமலை நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள காவல்நிலையத்தில் பணியாற்றுபவர்கள் அம்மணியம்மன் கோபுரம், கொடிமரம், பேகோபுரம் முன்பு நின்றுக்கொண்டு அதிகாரிகளின் நண்பர்கள், குடும்பத்தினர், உறவினர்களை கோவிலுக்குள் அழைத்து செல்லும் வேலையை மட்டுமே செய்கின்றனர்.

 

தாங்கள் அழைத்துவருபவர்களை சிறப்பாக தரிசனம் செய்யவைக்க வேண்டும் என்றால் கோவில் நிர்வாகம் மற்றும் சிவாச்சாரியர்களின் ஒத்தொழைப்பு தேவை என்பதால் அவர்களின் விவகாரத்தை காவல்துறை கண்டுக்கொள்வதில்லை. காவல்துறையினர் அழைத்துவருபவர்களை அறநிலையத்துறை ஊழியர்கள் கண்டுக்கொள்வதில்லை. இந்த இரண்டு தரப்பினர் வரிசையில் நிற்காமல் தனி வழியில் சுவாமி தரிசனத்துக்கு தங்களுக்கு வேண்டப்பட்டவர்களை அழைத்து செல்லும்போது, பொதுதரிசன வழியில் எந்த சிபாரிசும் இல்லாமல் வரும் பக்தர்களை நிறுத்தி விடுகின்றனர். இதனாலயே பலமணி நேரம் பக்தர்கள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. சிபாரிசோடு வருபவர்கள் சில நிமிடங்களில் தரிசனம் முடித்துவிட்டு சென்றுவிடுகிறார்கள் என்கிறார்கள் கோவில் அறங்காவலர் குழுவை சேர்ந்தவர்கள்.

 

TN

 

புரட்டாசி மாத பௌர்ணமி, காலாண்டு விடுமுறை மற்றும் வார இறுதிநாளான 9.10.2022 ஆம் தேதி வந்ததால் கடந்த மூன்று நாட்களாக பக்தர்கள் கூட்டத்தில் திருவண்ணாமலை நகரம் நிரம்பி வழிகிறது. கோவிலுக்குள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய நீண்ட நேரம் எடுக்கிறது என்கிற குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உட்பட அதிகாரிகள் 9.10.2022ஆம் தேதி மாலை கோவிலுக்குள் ஆய்வுக்கு சென்றவர்கள், பக்தர்கள் விரைந்து சுவாமி தரிசனம் செய்யும் வகையில் தரிசன வழி மாற்றிவிட்டனர், வரிசையில் வந்த பக்தர்களிடம் குறைகளை கேட்டனர். பின்னர் கிரிவலப்பாதையில் சைக்களிலேயே சென்று ஆய்வு செய்தனர்.  

 

இதுவும் சர்ச்சையாகி உள்ளது, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதில் தாமதம் எதனால் என்பது தெரிந்தும் தெரியாதது போல நடந்துக்கொண்டது சரியா? உள்ளே ஆய்வு நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்புவரை எஸ்.பி தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஒருவர் தலைமையில் தனிப்பிரிவு போலீசார், அம்மணி அம்மன் கோபுரம் வழியாக தங்களது உயர் அதிகாரிகளின் நண்பர்கள், அவர்களது குடும்பத்தினரை உள்ளே அழைத்து சென்று சுவாமி தரிசனம் செய்யவைத்தனர் என்கிறார்கள் பாஜகவை சேர்ந்தவர்கள்.

 

அடுத்தமாதம் கார்த்திகை மாத தீபத்திருவிழா திருவண்ணாமலையில் கோலாகலமாக நடக்கவுள்ளது. 'பௌர்ணமி நாளிலேயே பக்தர்களை இந்தளவுக்கு வதைக்கும் கோவில் நிர்வாகம் மற்றும் காவல்துறை, 12 நாள் திருவிழாவில் பக்தர்களை எந்தளவுக்கு வாட்டி வதைக்க போறாங்கன்னு தெரியல' என அச்சம் தெரிவிக்கின்றனர் பக்தர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோவில் காவலாளி அடித்துக் கொலை; போலீசார் தீவிர சோதனை!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
69-year-old temple watchman was beaten to passed away near Mappedu

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேட்டுமாநகர் பகுதியில் புதிதாக விநாயகர் கோயில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் கட்டுமான பணிக்காக செங்கல் இறக்கி வைத்திருப்பதால், அதனை பாதுகாப்பதற்காக  கோவிலுக்கு காவலாளியாக செல்வம் (69) என்ற முதியவர் கடந்த இரண்டு நாட்களாக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை கோவில் காவலாளி செல்வம் தலையில் பலத்த காயங்களுடன் விழுந்து கிடப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் மப்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து மப்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு நடத்தினர். தலையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த காவலாளி செல்வம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், முதியவர் செல்வத்திற்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் பிள்ளைகள் ஏற்கெனவே இறந்துவிட்ட நிலையில், தனியாக வாழ்ந்து வந்தது தெரிந்தது. மப்பேடு மாநகரில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த இரண்டு நாட்களாக கோயில் கட்டுமான பணி காரணமாக இரவு காவலாளியாக வேலை பார்த்ததும் தெரியவந்தது. எனவே புதிதாக கட்டப்படும் கோயிலில் 69 வயதான செல்லம் முதியவர் காவலாளியாக வேலை பார்த்த நிலையில் அவரை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எதற்காக இந்த கொலை நடைபெற்றது? இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து மப்பேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவலாளிக்கே பாதுகாப்பு இல்லாத சம்பவத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

Next Story

மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்! 

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Madurai Vaigai River woke up Kallazhakar

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமரிசையாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இதனை லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் நேரில் கண்டு களிப்பர். தகதகக்கும் தங்கக் குதிரையில் கம்பீரமாக வலம்வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது.

இந்த சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரைத் திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் நேற்று (22.04.224) கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து பரவசம் அடைந்தனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அதே சமயம் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக கள்ளழகர் மதுரை வந்தடைந்தார். கள்ளழகர் உடன் பாரம்பரியமாகக் கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டது.

இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று (23.04.2024) நடைபெற்றது. கள்ளழகரை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் குவிந்தனர். இதனையடுத்து பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றின் கரைக்கு வருகை புரிந்தார். கள்ளழகர் வைகையாற்றில் இறங்குவதற்கு முன்பு ஆற்றங்கரையில் மாலை அணிவித்து அகழருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களின் கோஷம் விண்ணை முட்ட, தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் இறங்கினார். கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வைக் காண சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார், புகழேந்தி, ஆதி கேசவலு மற்றும் அருள் முருகன் உள்ளிட்டோர் வருகை புரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.