Controversial speech Police are serious about arresting actress Kasthuri

பிராமணர்களுக்குப் பாதுகாப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் கடந்த 3ஆம் தேதி (03.11.2024) சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தெலுங்கு பேசும் மக்கள் குறித்து நடிகை கஸ்தூரி பேசியது சர்ச்சை ஏற்படுத்தியிருந்தது. கஸ்தூரியின் பேச்சுக்கு எதிராகவும் ஆதரவாகவும் பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வந்தனர். கஸ்தூரியின் இந்த பேச்சு பூதாகரமான நிலையில் இது குறித்து சென்னை, மதுரை, திருச்சி எனதமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் காவல்துறையில் பல்வேறு அமைப்பினர் புகார் கொடுத்ததோடு கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர்.

Advertisment

இத்தகைய சூழலில் தான் எழும்பூர் போலீசார், கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு பேசுவது; ஜாதி, மதம், இனம் குறித்து இருவேறு பிரிவு மக்களிடையே கழகத்தை ஏற்படுத்துவது; அரசுக்கு எதிராக அல்லது பொது அமைதிக்கு எதிராக எந்த ஒரு நபரையும் குற்றம் செய்யத் தூண்டுதல்; அவதூறு பரப்புதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இதற்காக அவருக்குச் சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜர்ப்படுத்த எழும்பூர் காவல்துறையினர் முயற்சி எடுத்தனர். இதற்காக நேற்று (10.11.2024) அவர் வீட்டுக்கு சம்மன் அளிக்கச் சென்ற பொழுது அவருடைய வீட்டு கதவு பூட்டப்பட்டு இருந்தது. அதோடு அவருடைய செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து நடிகை கஸ்தூரி தலைமறைவாகிவிட்டதாகத் தகவல்கள் வெளியான நிலையில் அவரை தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisment

அதேசமயம் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கஸ்தூரி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நாளை (12.11.2024) விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில் தலைமறைவாக உள்ள நடிகை கஸ்தூரியைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு எழும்பூர் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அவர் வேறு செல்போன் ஏதும் பயன்படுத்துகிறாரா என்ற கோணத்திலும் சைபர் கிரைம் போலீசார்விசாரணையில் இறங்கியுள்ளனர்.