குடிசை மாற்று வாரியத்தின் கீழ் சென்னை புளியந்தோப்பு கே.பி. பார்க்கில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டது. மக்கள் அக்குடியிருப்புகளில் குடியேறி சில மாதங்களே ஆன நிலையில், கை வைத்தாலே சுவர்கள் உதிர்ந்து கொட்டுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூவம், அடையாறு கரையோரம் குடிசையில் வசிக்கும் மக்களை மறு குடியமர்த்த, சென்னை புளியந்தோப்பு கேசவ பிள்ளை பூங்கா பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் 2018ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை இரண்டு கட்டங்களாக கட்டப்பட்டன.
முதற்கட்டமாக 764 வீடுகளும் இரண்டாவது கட்டமாக 1,056 வீடுகளும் என மொத்தம் 1,820 வீடுகள் கட்டப்பட்டன. கூவம், அடையாறு மற்றும் பக்கிங்காம் கால்வாய் அருகே குடிசைகளில் வசிப்பவர்கள் பயனாளிகளாக அந்தக் குடியிருப்பில் குடியேறி இரண்டு - மூன்று மாதங்களே ஆகும் நிலையில், கட்டடத்தில் பல இடங்களில் தொட்டாலே சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்து விழும் அளவிற்குத் தரமற்ற முறையில் இருப்பதாக அங்கு குடியிருக்கும் மக்கள் அச்சம் தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், பல அரசியல் தலைவர்களும் இதற்கு கண்டனம் தெரிவித்துவருகின்றனர். அதனைத் தொடர்ந்து புளியந்தோப்பு குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் இடிந்து விழுந்த இடங்களில் பூச்சு வேலைகள் நடைபெற்றுவருகிறது.