Contractor arrested for assaulting municipal engineer

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் நகராட்சியில் பொறியாளராகப் பணியாற்றுபவர் ஜெயபிரகாஷ் நாராயணன் (வயது 46), விழுப்புரம் மாவட்டம், என்.ஜி.ஓ நகரைச் சேர்ந்தவரான இவர் கடலூரில் பணியாற்றி, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு விருத்தாசலம் நகராட்சியில் பொறியாளராக பொறுப்பேற்றார்.

Advertisment

அதே நகராட்சியில் ஒப்பந்ததாரராக மதியழகன் (வயது 49) என்பவர் இருந்து வந்தார். இந்நிலையில் துர்கா நகர் பகுதியில் நடைபெற்ற சிமெண்ட் சாலை போடும் பணி காரணமாக 20 லட்ச ரூபாய் மதியழகனுக்கு நிலுவை பில் பாக்கி இருந்து வந்தது. இதற்கான பில்லை முடித்து தருமாறு மதியழகன் ஜெயபிரகாஷ் நாராயணனிடம் கேட்டு வந்தார்.

Advertisment

அப்போது 'நகராட்சி பணியாளர்களுக்கு சம்பளம் போடவே வருவாய் இல்லை. எனவே வருவாய் சீரான பின் பில் பாக்கி தரப்படும்' என ஜெயப்பிரகாஷ் நாராயணன் கூறினார். மேலும் பணியின் தரம் குறித்து ஆய்வு செய்த பின்பு தான் பில் தொகை வழங்கப்படும் என ஜெயபிரகாஷ் நாராயணன் கூறியுள்ளதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ஒப்பந்ததாரர் மதியழகன் மற்றும் அரசியல்வாதிகள் சில பேருடன் சென்று ஜெயப்பிரகாஷ் நாராயணனை அசிங்கமாக திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து பொறியாளர் ஜெயபிரகாஷ் நாராயணன் கொடுத்த புகாரின் பேரில் விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் விஜயரங்கன் மற்றும் போலீசார் ஒப்பந்ததாரர் மதியழகன் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

Advertisment

அதேபோல் ஒப்பந்ததாரர் மதியழகன் கொடுத்த ஒரு புகாரின் பேரில், பொறியாளர் ஜெயபிரகாஷ் நாராயணன் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.