Skip to main content

எல்லாவற்றையும் போராடியே பெற வேண்டியுள்ளது... ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேதனை!

Published on 16/06/2020 | Edited on 16/06/2020

 

Contract workers


கரோணா வைரஸ் பாதிப்புக்குள்ளாகியவர்களுடன், அரசு கரோனா சிறப்பு மருத்துவமனையில் உயிரைப் பணயம்வைத்து பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு கொடுமை என்னவென்றால் இரண்டு மாதமாகச் சம்பளம் இல்லை! அது மட்டுமா? அறிவிக்கப்பட்ட கூலியும் குறைப்பு. இப்படிச் சட்டவிரோதமாகச் சம்பளப்பிடித்தம் செய்வதை தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாகத் தலையிட்டு தீர்வுகாண கோரி போராட்டத்தில் இறங்கியுள்ளார்கள்.
 


ஈரோடு மாவட்டம், பெருந்துறை, சேனிடோரியத்தில் செயல்பட்டு வரும் அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தற்காலிகமாக கரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்றம் செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது. அங்கு தூய்மைப் பணியாளர்களாகவும் பாதுகாவலர்களாகவும் சென்ற ஏப்ரல் 17 முதல் மே 3 வரை 201 தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் புதியதாகப் பணி அமர்த்தப்பட்டு தொடர்ச்சியாகப் பணிபுரிந்து வருகின்றனர். 

இங்கு ஏற்கனவே 53 தொழிலாளர்கள் பல்லாண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்தனர். மொத்தம் உள்ள 254 பேருக்கும், ஏப்ரல் 16 முதல் தினக்கூலியாக 490/- ரூபாய். இது ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் தூய்மைப் பணியாளர்களுக்கு நிர்ணயித்துள்ள குறைந்த பட்ச ஊதியமாகும். இதுவே வழங்கப்படும் என அவர்களுக்கு உறுதி அளிக்கப்பட்டது.
 

Contract workers


இதனை ஏற்று, ஊரே முடங்கிக் கிடந்த காலத்தில் உயிரைப் பணயம் வைத்து இவர்கள் பணியாற்றி வந்தனர். ஆனால், இத்தொழிலாளர்களுக்கு ஒப்பந்ததாரரான கிரிஸ்டல் இண்டகரேட்ட் சர்வீஸ் பிரைவேட் லிமிடெட்  என்ற தனியார் நிறுவனம் சென்ற ஏப்ரல், மே மாத சம்பளத்தை 13-6-2020 வரை வழங்காமல் அவர்களைப் பரிதவிக்க வைத்து வந்தது.

இதனால் அவர்கள் போக்குவரத்துச் செலவுக்குக் கூட கைக்காசை செலவழித்து பணியாற்றி வந்தனர். அந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேறுவழியின்றி இரண்டு மாத ஊதியத்தை வழங்கினால் மட்டுமே தொடர்ந்து வேலை செய்வோம், இல்லை எனில் வேலை செய்யமாட்டோம் என்று தெரிவித்துவிட்டு கடந்த இரண்டு நாட்களாக மருத்துவமனை வளாகத்தில் காத்திருப்புப் போராட்டம் நடத்தினார்கள். இது தொடர்பாக வட்டாட்சியர், காவல் ஆய்வாளர், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகளுக்கும் அவர்கள் முறையிட்டனர்.

அதனடிப்படையில் சென்ற 13-6-2020 அன்று பெருந்துறை வட்டாட்சியர் அலுவலகத்தில்  வட்டாட்சியர் ஜி.முத்துக்கிருஷ்ணன் தலைமையில் காவல் துணைக் கண்காணிப்பாளர். ராதாகிருஷ்ணன், காவல் உதவி ஆய்வாளர் செந்தில்குமார், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உதவி மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் செந்தில்குமார், கிரிஸ்டல் நிறுவனம் சார்பில் சின்னசாமி, லோகநாதன், தொழிலாளர்கள் சார்பில் ஏ.ஐ.டி.யு.சி. மாநிலச் செயலாளர் எஸ்.சின்னசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது.
 

 

 

Contract workers


இப்பேச்சுவார்த்தையின் போது, மேற்படி கிரிஸ்டல் நிறுவனம் தினம் ஒன்றுக்கு 490 ரூபாய் ஊதியம் வழங்குவதாக அளித்த உறுதிமொழிக்கு மாறாக, ஒரு நாளைக்கு  423 ரூபாய் மட்டுமே வழங்குவோம் என்றும், அதில் வருங்கால வைப்பு நிதிக்கு 24% -ம், தொழிலாளர் ஈட்டுறுதி திட்டத்திற்கு  3.75% , காப்பீட்டுத் திட்டத்திற்கு 1.25% -ம் ஆக மொத்தம் 29% சதவீத ஊதியத்தை அதாவது தினக்கூலி 423 ரூபாயில் 122 ரூபாயை பிடித்தம் செய்து கொண்டு மீதித்தொகை 301ரூபாய் மட்டுமே வழங்குவோம் என்றும் கூறியிருக்கிறார்கள்.

தொழிலாளர்கள் சார்பில், ஏற்கனவே உறுதியளித்தபடி தினமொன்றுக்கு 490/-ரூபாய் வீதம் கணக்கிட்டு ஏப்ரல், மே மாதங்களுக்கான ஊதியத்தைப் பாக்கியின்றி உடனடியாக வழங்க வேண்டும். வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் தொழிலாளர்களின் பங்குத் தொகை அதிக பட்சம் 12% மட்டுமே ஆகும். தொழிலாளர் செலுத்தும் அதே அளவு பங்குத் தொகையை நிர்வாகம் செலுத்த வேண்டும் என்பதே சட்டமாகும். ஆனால் கிரிஸ்டல் நிறுவனம் நிர்வாகம் செலுத்த வேண்டிய பங்குத் தொகையையும் தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்வதாகக் கூறுவதை ஏற்க இயலாது.

மேலும், தொழிலாளர் ஈட்டுறுதி திட்டத்தில் தொழிலாளர்களின் பங்குத் தொகை அவர்களது ஊதியத்தில் தற்போது 0.75% மட்டுமே ஆகும். ஆனால் கிரிஸ்டல் நிறுவனம் தொழிலாளர்களிடம் 3.75% பிடித்தம் செய்வதாகக் கூறுவதையும் ஏற்க இயலாது. அதோடு, காப்பீட்டுத் (Insurance) திட்டத்திற்காகத் தொழிலாளர்களின் ஊதியத்தில் 1.25% பிடித்தம் செய்வதாகக் கூறுகின்றனர். ஆனால், காப்பீட்டுத் திட்டம் பற்றிய எந்த விபரத்தையும் தற்போது வரை தொழிலாளர்களுக்கு கிரிஸ்டல் நிறுவனம் தெரிவிக்கவில்லை.

அதோடு, ESI திட்டம் பொருந்தும் தொழிலாளர்களுக்குத் தனியாக இன்ஷீரன்ஸ் திட்டம் அவசியமில்லை. ஆகவே, இன்ஷீரன்ஸ் திட்டத்திற்கு என சம்பளத்தில் பிடித்தம் செய்ய வேண்டியதில்லை. கிரிஸ்டல் காண்ட்ராக்ட் நிறுவனத்தின் மேற்கண்ட நடவடிக்கைகள் அனைத்தும் சட்ட விரோத, தொழிலாளர் விரோத, மோசடி நடவடிக்கைகளாகும். ஆகவே, அந்நிறுவனத்தின் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

அதிகாரிகள் தரப்பில், மாவட்ட ஆட்சித் தலைவர், மருத்துவத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் தொழிலாளர்களது கோரிக்கைகளைத் தெரிவித்துத் தீர்வுகாண நடவடிக்கை எடுப்பதாகவும், அதுவரை தொழிலாளர்கள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடர்ந்து பணிபுரியுமாறும் கேட்டுக் கொண்டனர்.
 

http://onelink.to/nknapp


கரோனா என்கிற கொடூரத்தின் இந்த நெருக்கடியான நேரத்தில் பணி செய்வது அவசியமானது என்பதால் அதிகாரிகளின் வேண்டுகோளை தொழிலாளர்கள் ஏற்றுக் கொண்டனர். பின்னர், கிரிஸ்டல் நிறுவனம் தெரிவித்தபடி ஏப்ரல், மே மாத ஊதியம் தொழிலாளர்கள் வங்கிக் கணக்கில் தொடர்ந்து செலுத்தப்பட்டு வந்ததது. அதன் பிறகே தொழிலாளர்கள் கரோனா வார்டு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

தாளவாடியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை ; வாழை மரங்கள் சேதம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப் பகுதியில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் வாட்டி வந்தது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. குடிநீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு தாளவாடி மலைப்பகுதி மக்கள் தள்ளப்பட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை நேரங்களில் கடும் வெயில் வாட்டி வருவதும் மதியம் 3 மணிக்கு மேல் சூறைக் காற்றுடன் மிதமான மழையும் சில இடங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது.

இந்தத் திடீர் சூறைக்காற்றால் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்தனர். இந்தநிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் மேகமூட்டம் சேர்ந்து தூரல் மழையாக ஆரம்பித்தது. அப்போது தாளவாடி, கும்டாபுரம், பாரதிபுரம், ராமாபுரம், ஓசூர், தொட்டகாஜனூர், கரளவாடி ஆகிய பகுதிகளில் சூறைக்காற்றுடன் 15 நிமிடம் மிதமான மழை பெய்தது. சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ராமாபுரம் கிராமத்தில் விவசாயி தீபு (35) என்பவரின் 700 நேந்திரம் வாழை, சுந்தரமூர்த்தி என்பவரின் 1000 வாழை, ராசு என்பவரின் 1000 வாழை, தொட்டகாஜனூர் சிவண்ணா என்பவரின்  1000 வாழை என 4 ஆயிரம் வாழைகள் முறிந்து நாசமானது. அதேபோல் தாளவாடியில் இருந்து ராமாபுரம் செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு சென்ற நெடுஞ்சாலைத் துறை மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.

மேலும், ராமாபுரம், பாரதிபுரம் கிராமத்தில் சூறைக்காற்றால் 6 மின்கம்பங்கள் முறிந்து சேதமடைந்தது. அதை சீர் செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு இடங்களில் மின்தடையும் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 20,000 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தாளவாடி மலைப்பகுதியில் சூறைக்காற்றுக்கு சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஒருபுறம் மழை வந்ததால் சந்தோசம் இருந்த போதும், சூறைக்காற்றால் வாழை சேதம் அடைந்துள்ளதால் மலைப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தமிழக அரசு கள ஆய்வு மேற்கொண்டு சேதமடைந்த வாழைகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் கடந்த இரண்டு நாட்களாக மட்டும் ரூ. 20 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.