continuously three days leave erode city area fully traffic

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் தங்கி பல்வேறு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், புது வருடம் போன்ற விசேஷ நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நேரங்களில் ஈரோட்டில் தங்கி இருக்கும் வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் சொந்த ஊருக்குச் சென்று கொண்டாடுவது வழக்கம். இந்த நேரத்தில் ஈரோடு பஸ் நிலையம், ரயில் நிலையங்களில் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்.

Advertisment

இந்நிலையில் நேற்று தமிழ் புத்தாண்டு மற்றும் அதைத்தொடர்ந்து சனி, ஞாயிறு என 3 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் ஈரோட்டில் உள்ள வெளி மாவட்டம் மக்கள் நேற்று முன்தினம் இரவே சொந்த ஊருக்கு செல்ல தொடங்கி உள்ளனர். இதன் காரணமாக நேற்று முன்தினம் மாலை முதல் இரவு வரை ஈரோடு மாநகர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிழவியது. குறிப்பாக ஈரோடு பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் மாலை முதல் நள்ளிரவு வரை மக்கள் கூட்டம் அலைமோதியது. சேலம், கோவை செல்லும் பஸ்களில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. இதேபோல் மதுரை, திருநெல்வேலி செல்லும் பஸ் நிலையம் கூட்டம் அதிகமாக இருந்தது.

Advertisment

தற்போது பள்ளிகளில் விடுமுறை விடப்பட்டுள்ளதால் குடும்பத்தினருடன் பஸ் நிலையங்களில் பொது மக்கள் வந்திருந்தனர். இதைப்போல் ஈரோடு ரெயில் நிலையங்களிலும் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாகவே இருந்தது. அனைத்து ரயில்களிலும் கூட்டம் அதிகமாகவே இருந்தது. முன்பதிவு பெட்டிகள் அனைத்தும் நிரம்பி விட்டன. முன்பதிவு இல்லாத பெட்டிகளில் இடம் பிடிக்க மக்கள் போட்டா போட்டி போட்டனர். குறிப்பாக கோயம்புத்தூரில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. இதன் காரணமாக நேற்று முன்தினம் மாலை முதல் ஈரோடு மேட்டூர் ரோடு, காளை மாட்டு சிலை, ஸ்வஸ்திக் கார்னர், பன்னீர்செல்வம் பூங்கா பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதேபோல் பல்வேறு வெளி மாவட்டங்களில் பணிபுரியும் ஈரோட்டை சேர்ந்தவர்களும் தொடர் விடுமுறை காரணமாக ஈரோட்டிற்கு தங்களது குடும்பத்துடன் வர தொடங்கியுள்ளனர். நேற்று காலையும் ஈரோடு ரெயில் நிலையத்தில் கூட்டம் அதிகமாகவே இருந்தது.