தொடர் மழை; ஒரே நாட்களில் 2 அடி உயர்ந்த பவானிசாகர்

continuous rain;  Bhavanisagar rose 2 feet in a single day

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. நீர் பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து குறைந்து வந்தது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீலகிரி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. நேற்று மாலை 15 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று காலை 5 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது.

இன்று (28/06/2024) காலை பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 5,894 கன அடியாக நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 62.44 அடியாக உயர்ந்து உள்ளது. நேற்று ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்துள்ளது.குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

அதேபோல் 41 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரி பள்ளம் அணை நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 38.93 அடியாக உள்ளது. அதேபோல் 33 அடி கொள்ளளவு கொண்ட வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.57 அடியாக உயர்ந்து உள்ளது.

Erode Rainfall weather
இதையும் படியுங்கள்
Subscribe