continuous rain; Bhavanisagar dam water level highest in 2 days

Advertisment

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பொழிந்து வருகிறது. பல்வேறு இடங்களில் நீர்நிலைகள் நிரம்பி வருகிறது. இதன் காரணமாக சில இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப் பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 78.94 அடியாக உயர்ந்துள்ளது. இரண்டு நாளில் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 4 அடி உயர்ந்துள்ளது. அணைக்குவினாடிக்கு 8,574 கன அடியாக நீர் வந்து கொண்டிருக்கிறது. பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதைப்போல் குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 32 அடியாகவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 4.92 அடியாகவும், வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் 29.69 அடியாகவும் உள்ளது.