Skip to main content

தொடர் நீர்வரத்து; கடல்போல் காட்சியளிக்கும் பவானிசாகர் அணை

Published on 24/12/2022 | Edited on 24/12/2022

 

continuous flow; Bhavanisagar dam looks like the sea

 

ஈரோடு மாவட்ட மக்களின் வேளாண்மைக்கும் குடிநீருக்கும் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகள் உள்ளது. இந்த நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது.

 

கடந்த சில நாட்களுக்கு முன்பு அணையின் நீர்மட்டம் 104.50 அடியாக உயர்ந்தது. இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி பவானிசாகர் அணையிலிருந்து பவானி ஆற்றுக்கு உபரி நீர் திறந்து விடப்பட்டது. இதனால் பவானி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. தொடர்ந்து மழைப்பொழிவு இருந்ததால் அணையின் நீர்மட்டம் நேற்று 23ந் தேதி 104.95 அடியாக உயர்ந்தது. இந்த நிலையில் அணைக்கு வரும் நீர் வரத்தைக் காட்டிலும் பாசனத்திற்காக வாய்க்கால்களில் அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் சற்று குறைந்துள்ளது.

 

இன்று 24ந் தேதி காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.87 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1079 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு ஆயிரம் கனஅடி, பவானி ஆற்றுக்கு 250 கனஅடி, தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 700 கனஅடி என மொத்தம் 1250 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பவானிசாகர் அணை பார்ப்பதற்கு கடல் போல் காட்சி அளிக்கிறது. இதனை அடுத்து பொதுப்பணித்துறையினர் உஷார்படுத்தப்பட்டு தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். ஏற்கனவே கரையோர பகுதியில் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தியுள்ளனர். அணை முழுமையாக நிரம்பிய பிறகு அணைக்கு வரும் நீர் அப்படியே பாசத்திற்காகவும், காவிரி ஆற்றிலும் வெளியேற்றப்படும்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முற்றுகைக்கு ரெடியான நிர்வாகி கைது; தொடரும் கீழ்பவானி வாய்க்கால் நீர் திறப்பு பேச்சுவார்த்தை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Executive arrested for siege; Negotiations on the opening of water by the Kilpawani canal continue

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்தில் 5-வது நினைப்புக்கு ஏப்ரல் 18ஆம் தேதி முதல் 13 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட வேண்டும். ஆனால் இந்த 5வது நினைப்புக்கு தண்ணீர் திறப்பது குறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் இதுவரை எந்தவித அறிவிப்பும் வெளியிடாததால் கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தினர், கடந்த சில நாட்களுக்கு முன்னர் இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும், மாவட்ட கலெக்டருக்கும் மனு அளித்திருந்தனர்.

இந்நிலையில் இதுவரை அறிவிப்பு வெளியிடாததால் நேற்று காலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கீழ்பவானி வடிநில கோட்ட கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தினர் முடிவு செய்திருந்தனர். இந்நிலையில் அந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ரவியை சென்னிமலை போலீசார் அவர் வீட்டில் இருந்து கைது செய்து சென்னிமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்திருந்தனர். இதையடுத்து கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள் சுதந்திர ராசு, வெங்கடாசலம் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் சென்னிமலையில் குவிந்தனர். அதைத்தொடர்ந்து அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 5வது இணைப்புக்கு தண்ணீர் திறப்பது குறித்து வரும் 20 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தி, சுமூக முடிவு எட்டப்படும் எனத் தெரிவித்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட ஒருங்கிணைப்பாளர் ரவி விடுவிக்கப்பட்டார்.

Next Story

ஆந்திர அரசின் முடிவுக்கு அமைச்சர் துரைமுருகன் கடும் கண்டனம்! 

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
Minister Duraimurugan strongly condemns Andhra govt decision

ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் உள்ள சாந்திபுரம் என்ற இடத்தில் பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை ஒன்று கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று (26.02.224) குப்பம் சாந்திபுரம் பகுதியில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி புதிய தடுப்பணை கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

அதனைத் தொடர்ந்து பேசிய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, “பாலாற்றில் தடுப்பணை கட்ட ரூ. 215 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்திருந்தார். அதே சமயம் பாலாற்றில் ஆந்திர அரசு சார்பில் புதிய தடுப்பணை கட்டுவதற்குத் தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். மேலும் பாலாற்றில் புதிய தடுப்பணை கட்டுவதற்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பாலாற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கு ஆந்திர அரசு அடிக்கல் நாட்டியுள்ளதற்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாலாறு ஒரு பன்மாநில நதி ஆகும். இது 1892 ஆம் ஆண்டு மதராஸ் மைசூர் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி பன்மாநிலங்களுக்கு இடையே பாயும் நதிகளில் பாலாறும் ஒன்றாகும். கடந்த 1892 ஆம் ஆண்டின் ஒப்பந்தத்தின்படி மேற்பகுதியிலுள்ள மாநிலங்கள் கீழ்ப்பகுதியிலுள்ள மாநிலங்களின் முன் அனுமதி இல்லாமல், எந்த அணை கட்டுமானத்தையோ அல்லது நீரைத் தடுப்பதற்கான கட்டுமானத்தையோ அல்லது நீரைத் திருப்புவதற்கும் நீரைத் தேக்குவதற்கும் உரிய எந்த ஒரு செயலையும் மேற்கொள்ள முடியாது. இந்த ஒப்பந்தம் ஆற்றுப் படுகை சம்பந்தப்பட்ட மாநிலங்களையும் கட்டுப்படுத்தும். மேலும் இந்த ஒப்பந்தம் செல்லுபடியாகும் என 16.02.2018 அன்று  உச்சநீதிமன்றம் காவிரி சம்பந்தப்பட்ட பிரச்சனையில் அளித்த தீர்ப்பில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறு தீர்ப்பு இருக்கையில் ஆந்திர அரசு தன்னிச்சையாக ஒரு புதிய அணையை கட்ட முயற்சிப்பது 1892 ஆம் ஆண்டின் ஒப்பந்தத்தை மீறுவதாகும். மேலும் உச்சநீதிமன்றத்தின் கருத்துக்கு முற்றிலும் மாறுபட்ட செயலாகும். இது ஒரு தவறான முயற்சியாகும். மேலும் இதற்கு முன் சித்தூர் மாவட்டம் கணேசபுரத்தில் ஆந்திர அரசு தன்னிச்சையாக ஒரு அணையைக் கட்ட முயற்சித்தபோது அச்செயலை ஆட்சேபித்து தமிழ்நாடு அரசு 10.02.2006 அன்று உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்தது. இவ்வழக்கில் இரு மாநில சாட்சியாளர்களது குறுக்கு விசாரணை 2018-ல் முடிவடைந்தது. இவ்வழக்கின் இறுதி விசாரணை நடக்க உள்ளது.

இதற்கிடையே ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே ஏற்கெனவே அமைக்கப்பட்ட தடுப்பணைகளின் உயரத்தை அதிகரித்து இருப்பதை எதிர்த்து மற்றும் ஒரு சிவில் வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடுத்துள்ளது. இந்த வழக்கும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இவ்வாறு 2 அசல் வழக்குகளும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது, தன்னிச்சையாக ஆந்திர அரசு பாலாற்றில் ஒரு புதிய அணையைக் கட்ட முயற்சிப்பதும், அதற்காக அதனுடைய நிதிநிலை அறிக்கையில் (Budget) பணம் ஒதுக்கியிருப்பதும் முற்றிலும் உச்சநீதிமன்றத்தை அவமதிப்பதாகத்தான் கருத வேண்டும். இச்செயல் இரு மாநிலங்களின் நட்பிற்கு ஏற்றதல்ல. மேலும் கூட்டாட்சிக்கு எதிரானது. ஆகையால் ஆந்திர அரசு இந்த அணை கட்டும் பிரச்சினை குறித்த வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, இம்மாதிரியான எந்தவித செயல்களையும் மேற்கொள்ளக் கூடாது என இரு மாநிலங்களின் நலன் கருதி கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.