Skip to main content

“பழைய நடைமுறையே தொடருவது மனவேதனையளிக்கிறது” - ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து இளமாறன்

Published on 18/12/2021 | Edited on 18/12/2021

 

“Continuing the old practice is heartbreaking” - Elamaran

 

இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் நியமனங்களுக்கான தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மீண்டும் போட்டித் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

 

இதுதொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மாநிலத் தலைவர் பி.கே. இளமாறன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “முந்தைய ஆட்சியில் பணி வேண்டி பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டும் எங்களுக்கான தீர்வு எட்டப்படவில்லை. மேலும், கடந்தகால அரசு ஏற்கனவே ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பணிக்காகக் காத்திருப்பவர்கள் மீண்டும் ஒரு போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே ஆசிரியர் பணி வழங்கப்படும் என ஒரு அரசாணையைப் பிறப்பித்தது.

 

இதனை எதிர்த்து எதிர்க்கட்சித் தலைவர் கடும் கண்டனத்தைப் பதிவுசெய்ததுடன், 2021 சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் கோரிக்கை எண் 177இல், ‘2013ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்குப் பணி வழங்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என வாக்குறுதியை அளித்தது மகிழ்ச்சி. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்றாலும் மீண்டும் ஒரு போட்டி தேர்வென்பது ஜனநாயகத்திற்கு முரணான அறிவிப்பு.

 

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத நடைமுறை ஒன்றை, கடந்தகாலத்தில் அறிவித்தது ஆசிரியர் பணிக்காகக் காத்திருப்போருக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தியது. ஆனால் இன்னும் பழைய நடைமுறையே தொடர்வது மனவேதனையளிக்கிறது.

 

மக்களாட்சி நடத்திவரும் முதலமைச்சர் 149/20.07.2018 அரசாணையினை ரத்துசெய்ய வேண்டும். இக்கல்வியாண்டில் மட்டும் சுமார் 5.80 லட்சம் மாணவர்கள் புதிதாக அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளார்கள். மேலும், 2013ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சுமார் எட்டு ஆண்டுகளாக அடிப்படை வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் ஆசிரியர்களுக்கு, தேர்ச்சி பெற்று பணிக்காகக் காத்திருப்பவர்களுக்குத் தேர்ச்சி மூப்பு அடிப்படையில் அரசுப் பள்ளிகளில் ஏற்படக்கூடிய ஆசிரியர் காலிப்பணியிடங்களில் முழு முன்னுரிமை அளித்து, பணி வழங்கி, வாழ்வாதாரத்தைக் காத்திட வேண்டும்.” இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்