கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள நரிப்பாளையம் கிராமத்தில் இருந்து ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் காதர் அலிக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதையடுத்து அவர் தலைமையிலான வருவாய்த் துறையினர் எலவாசநூர்கோட்டை அருகே நெடுஞ்சாலை பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது செம்பியன் மாதேவி பகுதியில் இருந்து சரக்கு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அதை மடக்கி சோதனை செய்ததில் அதில் 20 டன் ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த லாரியை பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள் கோட்டை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட லாரி டிரைவர் சதீஷ் குமார் என்பவர், வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
கடத்தப்பட்ட ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு விழுப்புரம் அரசு குடோனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உளுந்தூர்பேட்டை பகுதியில் இருந்து ஆந்திராவுக்கு 20 டன் ரேஷன் அரிசி கடத்த முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.