Skip to main content

வெல்லம் உருகி ஊத்துது, மிளகு 'ஸ்டாக் அவுட்!' - பொங்கல் பரிசு சப்ளையில் தொடரும் குளறுபடி

Published on 10/01/2022 | Edited on 10/01/2022

 

Continued mess in Pongal gift supply in rations

 

ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம் செய்வதில் தொடர்ந்து குளறுபடிகள் நிலவுகின்றன. வெப்பத்தில் உருகி ஓடும் வெல்லமும், பரிசுத்தொகுப்பில் விடுபட்ட பொருள்களாலும் ரேஷன் கார்டுதாரர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். 

 

பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழக அரசு அரிசி பெறக்கூடிய 2.15 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்குப் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் திட்டத்தை ஜன.4ம் தேதி தொடங்கியது. 1200 கோடி ரூபாயில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 

 

பச்சை அரிசி (ஒரு கிலோ), வெல்லம் (ஒரு கிலோ), முந்திரி (50 கிராம்), உலர் திராட்சை (50 கிராம்), ஏலக்காய் (10 கிராம்), பாசிப்பருப்பு (500 கிராம்), ஆவின் நெய் (100 கிராம்), மஞ்சள்தூள் (100 கிராம்), மிளகாய்த்தூள் (100 கிராம்), மல்லித்தூள் (100 கிராம்), கடுகு (100 கிராம்), சீரகம் (100 கிராம்), மிளகு (50 கிராம்), புளி (200 கிராம்), கடலைப்பருப்பு (250 கிராம்), உளுந்தம் பருப்பு (500 கிராம்), ரவை (ஒரு கிலோ), கோதுமை மாவு (ஒரு கிலோ), உப்பு (500 கிராம்), துணிப்பை (ஒன்று), முழு கரும்பு (ஒன்று) ஆகிய 21 பொருள்கள் கொண்ட பரிசுத்தொகுப்பாக வழங்கப்பட்டு வருகிறது. 

 

பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்கப்படுவதாகச் சொல்லப்பட்ட துணிப்பை, குறிப்பிட்ட காலத்திற்குள் தயார் செய்ய இயலாததால் கடைகளுக்கு விநியோகம் செய்யப்படுவதில் தொடர்ந்து நெருக்கடி நிலவுகிறது. துணிப்பைகள் தைத்துக் கொடுக்கும் ஒப்பந்தம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒரு பை தைக்க, ஜி.எஸ்.டி. வரியுடன் சேர்த்து 32 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. துணிப்பை இல்லாததால் பல இடங்களில் ரேஷன் கார்டுதாரர்கள் வெறுங்கையுடன் ரேஷன் கடைக்குச் சென்று, பொங்கல் பரிசுத்தொகுப்பைப் பெற்றுச்செல்ல முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். பின்னர் வீட்டில் இருந்து பை எடுத்து வந்து பரிசுத்தொகுப்பைப் பெற்றுச்சென்றனர். இதுகுறித்து நக்கீரன் இணையதளம் ஜன. 7ம் தேதி விரிவாக செய்தி வெளியிட்டுள்ளது. 

 

பொங்கல் பரிசுத்தொகுப்பில் ஏதேனும் குறைகள் இருந்தால் புகார் தெரிவிக்கலாம் என அமைச்சர் சக்கரபாணி ஒரு டோல்ப்ரீ எண் வெளியிட்டார். அந்த எண்ணும், உபயோகத்தில் இல்லை என்று வந்ததாகச் சொல்கிறார்கள் கார்டுதாரர்கள்.

 

இது ஒருபுறம் இருக்க, பெரும்பாலான ரேஷன் கடைகளுக்கு இன்னும் 40 சதவீத கார்டுதாரர்களுக்குத் தேவையான வெல்லம், மிளகு உள்ளிட்ட பொருள்கள் அனுப்பி வைக்கப்படவில்லை என்ற புகார்கள் கிளம்பியுள்ளன. இதனால் பல இடங்களில் பொங்கல் பரிசுத்தொகுப்புகள் வழங்கப்படாமல் ரேஷன் கடைகள் திடீரென்று மூடப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன. 

 

சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை, முழுநேர ரேஷன் கடைகள் 848, பகுதி நேர கடைகள் 373 என மொத்தம் 1,221 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் அரிசி பெறக்கூடியவர்கள் 10.50 லட்சம் கார்டுதாரர்கள் உள்ளனர். ஆயிரம் கார்டுகளுக்கு மேல் கொண்ட ரேஷன் கடைகளில், கடந்த 4ம் தேதி முதல் இதுவரை 50 சதவீதம் பேருக்கு மட்டுமே பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டு உள்ளதாகச் சொல்கிறார்கள் கூட்டுறவுத்துறை ஊழியர்கள். 

 

பரிசுத்தொகுப்புக்காகக் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட வெல்லம், பல இடங்களில் வெப்பம் தாங்காமல் உருகி ஓடுவதாகவும், ரவை, கடலைப்பருப்பு உள்ளிட்ட மளிகை பொருள்கள் தரமற்று உள்ளதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. 

 

Continued mess in Pongal gift supply in rations

 

சேலம் மாவட்டம், சித்தனூர் அருகே தளவாய்ப்பட்டியில் உள்ள ரேஷன் கடையில் (கடை எண்: ஏசி 045) 1,200 கார்டுதாரர்கள் உள்ளனர். இந்தக் கடைக்கு இன்னும் 400 கார்டுகளுக்குத் தேவையான மண்டை வெல்லம் அனுப்பி வைக்கப்படாததால், பரிசுத்தொகுப்பை விநியோகம் செய்யவில்லை. இதனால் ஜன. 8ம் தேதி திடீரென்று அந்த ரேஷன் கடை மூடப்பட்டது. கடையின் முகப்பில், ‘ரேஷன் விற்பனையாளர் மளிகை பொருள்களை எடுத்து வர குடோனுக்குச் சென்றதால் இன்று விற்பனை இல்லை. விற்பனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும்’ என்று சாக்பீஸில் எழுதப்பட்டு உள்ளது. இதையறியாமல் பொங்கல் பரிசுத்தொகுப்பு வாங்க வந்த கார்டுதாரர்கள் கடை மூடப்பட்டதைப் பார்த்து ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். 

 

சேலம் பொன்னம்மாபேட்டையில் உள்ள பல ரேஷன் கடைகளுக்குப் பரிசுத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள மிளகு (50 கிராம்) இன்னும் அனுப்பி வைக்கப்படவில்லை. இதனால் இப்பகுதிகளிலும் பரிசுத்தொகுப்பு விநியோகம் முடங்கியுள்ளது. 

 

இது தொடர்பாக ரேஷன் கடை ஊழியர்கள் நம்மிடம் பேசினர், ''பொங்கல் பரிசுத்தொகுப்பை தயார் செய்வதற்குப் போதிய அவகாசம் இல்லாததால் கிடங்குகளில் இருந்து ரேஷன் கடைகளுக்குப் பொருள்களை அனுப்பி வைப்பதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. பரிசுத்தொகுப்பில் மளிகை பொருள்களைப் பொட்டலம் தயார் செய்து போடும் பணிகளையும் இரவோடு இரவாக செய்து வருகிறோம். பரிசுத்தொகுப்புடன் தருவதாகச் சொல்லப்பட்ட துணிப்பையும் முழுமையாக சப்ளை செய்யப்படவில்லை. கடைகளுக்கு எப்போது சப்ளை செய்யப்பட்டாலும், அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் துணிப்பை வழங்கப்பட்டு விடும் என்பதைச் சொல்லி இருக்கிறோம். 

 

மண்டை வெல்லம் அச்சில் ஊற்றி எடுத்த பிறகு, அதை உலர்த்த வேண்டும். ஆனால், அவசரகதியில் அச்சில் ஊற்றப்பட்ட உடனேயே ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவதால் வெப்பத்தில் உருகி விடுகின்றன. கடைசியில் கார்டுதாரர்களின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ரேஷன் ஊழியர்கள்தான் ஆளாக நேரிடுகிறது. தமிழக அரசு அறிவித்துள்ளதுபோல எல்லோருக்கும் 6 அடி நீள கரும்பு கொடுப்பது நடைமுறையில் சாத்தியமில்லை. சப்ளை செய்யப்பட்ட கரும்பிலேயே பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ரேஷன் ஊழியர்களையும் முன்களப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைத்திருந்தோம். இந்த நேரத்தில் எங்கள் கோரிக்கையையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்'' என்கிறார்கள் ரேஷன் கடை பணியாளர்கள். 

 

Continued mess in Pongal gift supply in rations

 

இது தொடர்பாக சேலம் மாவட்ட நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் சிவக்குமாரிடம் கேட்டபோது, ''பொங்கல் பரிசுத்தொகுப்பில் எந்தெந்த பொருள்கள் தட்டுப்பாடு ஏற்பட்டிருந்ததோ அவற்றை எல்லாம் கடைகளுக்கு அனுப்பி வைக்கும் பணிகள், இந்த லாக்டவுன் நேரத்திலும்கூட நடந்து வருகின்றன. திங்கள்கிழமை முதல் எல்லா கடைகளிலும் பொங்கல் பரிசுத்தொகுப்பு தடையின்றி வழங்கப்படும்'' என்றார். 

 

இதற்கிடையே, பொங்கல் பரிசுத்தொகுப்பிற்குப் பதிலாக 500 ரூபாய் ரொக்கமும், எப்போதும் போல கார்டுதாரர்களுக்கு வழங்கப்படும் சர்க்கரை, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட 130 ரூபாய் மதிப்பிலான பொருள்களை இலவசமாகவும் கொடுத்திருந்தாலே ரேஷன் கடைகளில் கூட்டத்தையும், வேலைப்பளுவையும் தவிர்த்திருக்க முடியும் எனக் கார்டுதாரர்கள் தங்கள் எதிர்பார்ப்பையும் கூறுகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஆன்லைனில் விண்ணப்பித்தால் வீட்டுக்கே குடும்ப அட்டை வந்து சேரும்” - அமைச்சர் சக்கரபாணி

Published on 14/01/2024 | Edited on 14/01/2024
Minister Chakrapani says that if you apply online, the ration card will reach your home

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், புதிய திட்டப் பணிகளுக்கு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அடிக்கல் நாட்டினார். அதன்பின் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகளையும் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சக்கரபாணி, “தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்றது முதல் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் வகையில் சிறப்பான ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.

தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை தமிழர்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் வருகின்ற 2024-ம் ஆண்டு தைப்பொங்கலுக்கு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி பொங்கல் பரிசு தொகுப்பாக, பச்சரிசி 1 கிலோ (மதிப்பு - ரூ. 35.20), சர்க்கரை ஒரு கிலோ (மதிப்பு ரூ. 40.61), கரும்பு ஒன்று (மதிப்பு ரூ. 33.00) என மொத்தம் மதிப்பு ரூ.108.81 மற்றும் ரொக்கம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. ஆக ஒரு பரிசுத் தொகுப்பின் மொத்த மதிப்பு ரூ.1108.81 ஆகும். தமிழகம் முழுவதும், 2,14,30,587 குடும்ப அட்டைதாரர்களுக்கு மொத்தம் ரூ.2,376.22 கோடி மதிப்பிலான பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 6,79,414 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.75.33 கோடி மதிப்பிலான பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் 1004  நியாய விலைக் கடைகளில் 6,46,259 குடும்ப அட்டைதாரர்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் 19 நியாய விலைக் கடைகளில்  22,572 குடும்ப அட்டைதாரர்கள், மகளிர் சுய உதவிக்குழு 12 நியாய விலைக் கடைகளில் 10,705 குடும்ப அட்டைதாரர்கள் என 1035 நியாய விலைக் கடைகளின் மூலமாக மொத்தம் 6,79,414 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.

இன்றைய தினம் பொருளூர் ஊராட்சி, மரிச்சிலம்பு ஊராட்சியில் பூணம்பட்டி, புளியம்பட்டி ஊராட்சியில் புளியம்பட்டி, தும்பலப்பட்டி ஊராட்சியில் தும்பலப்பட்டி, தொப்பம்பட்டி ஊராட்சியில் தொப்பம்பட்டி, கீரனூர் பேரூராட்சியில் கீரனூர், மேல்கரைப்பட்டி ஊராட்சி மேல் கரைப்பட்டி, கோரிக்கடவு ஊராட்சியில் கோரிக்கடவு, அக்கரைப்பட்டி ஊராட்சியில் நரிக்கல்பட்டி, மானூர் ஊராட்சியில் மானூர் தாளையூத்து ஊராட்சியில் தாளையூத்து, புஷ்பத்தூர் ஊராட்சி புஷ்பத்தூர் ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளது. 

பொருளூர் ஊராட்சி, பொருளூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், வெள்ளத்தடுப்பணை, சிமெண்ட் சாலை, வண்ணக்கல், சிறுபாலம் கட்டுதல் ஆகிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களுக்கு 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது புதிய குடும்ப அட்டை பெற ஆன்லைனில் விண்ணப்பித்தால் வீட்டிற்கு தபாலில் குடும்ப அட்டை வந்து சேரும் வகையில் வழி வகை செய்யப்பட்டுள்ளது. ஆட்சிப் பொறுப்பேற்ற 30 மாதங்களில் இதுவரை சுமார் 15 லட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் குடிமைப் பொருட்களை பெறுவதற்காக நீண்ட தூரம் சென்று சிரமப்படுவதை தவிர்க்கும் வகையில் அவர்கள் குடியிருப்புகளுக்கு அருகிலேயே குடிமைப் பொருட்களை பெற்று பயன்பெறும் வகையில், புதியதாக நியாய விலைக் கடைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.  

நியாய விலைக் கடைகளில் கை ரேகை பதிவு மூலம் பொருட்கள் பெறுவதில் ஏற்படும் சிரமங்களை தவிர்க்க தற்போது கண் கருவிழி பதிவு மூலம் பதிவுகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, 36,000 நியாய விலைக் கடைகளில் கண்கருவிழி பதிவுகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லை பாதுகாப்பாக சேமித்து வைப்பதற்காக 4 இலட்சம் மெட்ரிக் டன் நெல்லை சேமிக்கும் வகையில் செமி குடோன்கள் கட்டப்பட்டு வருகின்றன. பணிகள் முடிந்து விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளன. 

முருங்கை விவசாயிகளை மேம்படுத்தும் வகையில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன் சத்திரம் முருங்கை மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவ மாணவிகளின் விளையாட்டுத் திறனை கண்டறிந்து, ஊக்குவிக்கும் வகையில் சட்டமன்ற தொகுதிகள் தோறும் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டு வருகிறது. தொப்பம்பட்டியில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மைதானம் அமையவுள்ளது. அதேபோல் கேதையறும்பில் விளையாட்டு மைதானம் அமைக்கப்படவுள்ளது” என்று கூறினார்.

Next Story

பொங்கல் தொகுப்பு; ஆழ்வார்பேட்டையில் துவக்கி வைத்த முதலமைச்சர்

Published on 10/01/2024 | Edited on 10/01/2024

 

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை அனைத்துத் தரப்பு மக்களும் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவை பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்படும் என்று கடந்த 2 ஆம் தேதி (02.01.2024) தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 5 ஆம் தேதி (05.01.2024) பரிசுத் தொகுப்புடன் மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 1,000 ரூபாய் பொங்கல் பரிசாக நியாய விலைக் கடைகளில் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக ரொக்கமாக வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.

மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள இலவச வேட்டி மற்றும் சேலை பொங்கல் பரிசுத் தொகுப்புடன் சேர்த்து வழங்கப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி, தகுதியான குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கிடும் வகையில், கடந்த 7ம் தேதி முதல் வீடு வீடாக டோக்கன் விநியோகம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதனையடுத்து வரும் 13 ஆம் தேதி (13.1.2024) வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும். அதே சமயம் விடுபட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு வரும் 14 ஆம் தேதி (14.1.2024) வழங்கிடவும், பொங்கல் திருநாளுக்கு முன்னதாகத் தகுதியான அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

அதே சமயம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ. 1000 வழங்க வேண்டும் எனப் பொதுமக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் அரசுக்குக் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசாக வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நியாய விலைக் கடையில் இன்று காலை ரூ. 1000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கி திட்டத்தை துவக்கி வைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர் பாபு, சக்கரபாணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.