Skip to main content

சங்கராபுரம் விபத்து எதிரொலி... பட்டாசுக் கடைகளில் தொடரும் ஆய்வுகள்!!

Published on 29/10/2021 | Edited on 29/10/2021

 

 Continued inspections in firecracker shops

 

சங்கராபுரத்தில் கடந்த 26ம் தேதி இரவு 7 மணி அளவில் செல்வகணபதி என்பவரது பட்டாசு குடோனில் விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர், நான்கு கட்டடங்கள் இடிந்து தரைமட்டமானது, 30க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து தமிழகம் முழுவதும் காவல்துறை, வருவாய்த் துறை, தீயணைப்புத் துறை அதிகாரிகள் உஷார் படுத்தப்பட்டு இரவு பகல் பாராமல்  ஆய்வுப் பணிகளைச் செய்ய அரசு முடுக்கிவிட்டுள்ளது. பல்வேறு ஊர்களில் முறைகேடாக வைக்கப்பட்டுள்ள பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது.

 

விபத்து நடந்த சங்கராபுரத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே நகராட்சிக்குச் சொந்தமான கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இவற்றில் இரண்டு கடைகளைச் செல்வகணபதி வாடகைக்கு எடுத்து அதில் பட்டாசுகளை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு, டிஎஸ்பி கங்காதரன், தாசில்தார் பாண்டியன், இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் சங்கராபுரம் பேரூராட்சி அலுவலர்கள் அந்தக் கடைகளின் பூட்டை உடைத்து சோதனை செய்தனர். அதில் வைக்கப்பட்டிருந்த 8 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. குளத்து மேட்டுத் தெருவில் வெங்கடேசன், கடை வீதியைச் சேர்ந்த ரவி,குப்புசாமி என்பவருக்குச் சொந்தமான பட்டாசுக் கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அங்கு போதிய பாதுகாப்பு இன்றி அளவுக்கதிகமான பட்டாசுகள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

 

 Continued inspections in firecracker shops

 

சங்கராபுரம் அருகில் உள்ள தேவபாண்டலம் கந்தசாமி என்பவரது பெட்டிக் கடையில் விற்பனைக்காக வைத்திருந்த மூன்று லட்ச ரூபாய் மதிப்பிலான பட்டாசு போலீசார் பறிமுதல் செய்து பெட்டிக் கடை உரிமையாளர் கந்தசாமியைக் கைது செய்தனர். இதுபோன்று சங்கராபுரம் நகரில் அளவுக்கதிகமான பட்டாசு வைத்திருந்த கடைகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டன. பட்டாசு விற்பனை உரிமம் பெற்ற கடைகளில் மட்டுமல்லாமல் பல்வேறு இடங்களிலும் பட்டாசு விற்பனை செய்யப் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து கடைகளுக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர். விதிமுறைகளை மீறி பட்டாசுக் கடைகளை நடத்துவோர், அவற்றைப் பதுக்கி வைத்திருப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

அறந்தாங்கியில் பயங்கர தீ விபத்து! - நகைக்கடை, பாத்திரக்கடை எரிந்து சேதம்!

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
 fire broke out at a firecracker shop in Aranthangi

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சந்தைப்பேட்டை சாலையில் உள்ள நகைக்கடை மற்றும் பட்டாசுக் கடையில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தீயானது பாத்திரக் கடைக்குப் பரவி அருகே உள்ள கடைகளுக்கும் பரவத் தொடங்கியுள்ளதால் தீயை அணைக்கும் பணியில் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில் உள்ளிட்ட தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், தீபாவளிக்கு விற்பனை செய்து மீதமுள்ள பட்டாசுகளை குடோனில் வைத்திருந்தனர். அந்த பட்டாசுகளும் வெடித்து தீயை மேலும் பரவச் செய்துள்ளன. நகைக்கடையில் உள்ள தங்க நகைகள், பாத்திரக் கடையில் உள்ள பல லட்சம் மதிப்பிலான அலுமினியம், பித்தளை, எவர்சில்வர் மற்றும் பிளாஸ்டிக் பாத்திரங்கள் எரிந்து சேதமடைந்துள்ளன. தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கப் போராடி வருகின்றன.

அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து அறந்தாங்கி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story

ஓட்டலில் தீ விபத்து! அலறியடித்து வெளியேறி தப்பித்த வாடிக்கையாளர்கள்!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Aruppukottai hotel fire incident

விருதுநகர் மாவட்டம் -  அருப்புக்கோட்டை பஜார் பகுதியில்,  இனிமைஹோட்டல் என்ற பெயரில் தனியார் உணவகம் உள்ளது.  இந்த உணவகத்தின் மாடியிலுள்ள சைனீஸ் உணவு தயார் செய்யும் பகுதியில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.  அங்கிருந்து தீ பரவி,  மாடி அறை முழுவதும் மளமளவென்று தீ பற்றி எரிந்தது. தீ பற்றி எரிந்ததும்,  உணவகத்தில் இருந்த வாடிக்கையாளர்கள், பணியாளர்கள் அனைவரும் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர்.

இந்தத்  தீ விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த அருப்புக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ராமராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் தீ பற்றி எரிந்த பகுதியில் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்தத்  தீவிபத்தில் உணவகத்தில் இருந்த மின்சாதனப் பொருட்கள், பில் போடும் கம்ப்யூட்டர்கள், டேபிள்கள்,  சேர்கள்  ஆகிய அனைத்துப் பொருட்களும் தீயில் எரிந்து நாசமானது.

Aruppukottai hotel fire incident

இதே உணவகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பும் இதே போல் தீ விபத்து ஏற்பட்டது .மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? சமையல் அறையில் அதிக வெப்பம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதா?  இல்லை வேறு ஏதேனும் காரணமா?  என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.