Skip to main content

தொடரும் சிறார் பாலியல் கொலை சம்பவங்கள்; தர்மபுரியில் மீண்டும் அதிர்ச்சி

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Continued incidents of againt child ; Shock again in Dharmapuri

அண்மையில் புதுச்சேரியில் ஒன்பது வயது சிறுமி கஞ்சா போதை இளைஞர் மற்றும் முதியவர் ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்க முயன்று கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து இதேபோன்ற சிறார் பாலியல் கொலை சம்பவங்கள் ஆங்காங்கே நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் சிறுவன் ஒருவன் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ளது மிட்டா ரெட்டி ஹள்ளி கிராமம். அங்குள்ள அரசுப் பள்ளியில் படித்து வந்த ஐந்தாம் வகுப்பு சிறுவன் திடீரென காணாமல் போயுள்ளார். பங்குனி உத்திரத்திற்காக பழனி மலைக்கு செல்வதற்காக அந்த சிறுவன் மாலை அணிந்து இருந்ததாகக் கூறப்பட்ட நிலையில், சிறுவன் காணாமல் போனது பரபரப்பை ஏற்படுத்தியது. உறவினர்களும் பெற்றோர்களும் பல இடங்களில் தேடியும் சிறுவன் கிடைக்கவில்லை.

அதே பகுதியைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவன் அந்தச் சிறுவனை அழைத்துச் சென்றதை சிலர் பார்த்ததாக கூறியுள்ளனர். அன்று மாலை வரை சிறுவன் கிடைக்காததால் சிறுவனின் பெற்றோர் அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரைத் தொடர்ந்து சிறுவனை அழைத்துச் சென்றதாக கூறப்பட்ட பிளஸ் 2 மாணவனை அழைத்து போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் பிளஸ் டூ மாணவன் ஐந்தாம் வகுப்பு படித்து வந்த அந்த மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும், இதனை வெளியே சொல்லி விடுவான் என்ற பயத்தில் கொலை செய்து கிணற்றில் வீசிய கொடூர சம்பவமும் வெளியே வந்தது.

அதனைத் தொடர்ந்து அந்த பிளஸ் டூ மாணவனை அழைத்துச் சென்ற தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார், கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட சிறுவனின் சடலத்தை மீட்டனர். இந்த சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்