Skip to main content

அடுத்தடுத்து கொலை... நடுங்கும் மலைக்கோட்டை மாநகர்...

Published on 12/12/2019 | Edited on 12/12/2019

 

 

தமிழகத்தில் கள்ள கடத்தல், சமூக விரோத செயல்களுக்கு களத்தில் இறங்கி வேலை செய்வதற்கு பெரிய பெரிய ரவுடி கும்பல் தற்போது மைனர்களை பயன்படுத்தி வருகிறார்கள். 

 

செயின் திருடுவது என தொடங்கி தற்போது கொலை செய்வது வரை மைனர்கள் இருப்பதுதான் கொடுமையிலும் கொடுமை. இதை போலிஸ் கண்டுகொள்ளாமல் இருப்பது எதிர்கால சமூகத்திற்கு பெரிய ஆபத்து. அந்த வரிசையில் தான் அரியமங்கலம் குப்பை கிடங்கு கொலை சம்பவம் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

Tiruchirappalli

 

திருச்சி அரியமங்கலத்தில் உள்ள குப்பை கிடங்கில் 12 வயது சிறுவனை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் இப்பகுதியில் நடக்கும் 5வது கொலையாகும். அத்தனை கொலைகளையும் மைனர் குரூப் செய்வது தான் உச்சக்கட்ட கொடுமை!
 

திருச்சி அரியமங்கலம் மேலஅம்பிகாபுரம், அண்ணாநகரைச் சேர்ந்தவர் அலியார். இவரது மகன் அப்துல் வாஹித் (வயது 12). 6-ம் வகுப்பு படித்து வந்த அப்துல் வாஹித் கடந்த 4 மாதங்களாக பள்ளிக்கு செல்லவில்லை. கடந்த 3-ந் தேதி மாலை வீட்டிலிருந்து வெளியே சென்ற சிறுவன் மீண்டும் வீடு திரும்பவில்லை.

Tiruchirappalli


பல்வேறு இடங்களில் தேடியும் அப்துல்வாஹித் கிடைக்கவில்லை. அவன் எங்கே சென்றான்? என்ன ஆனான்? என்பது தெரியாமல் பெற்றோர் தவித்தனர். இது குறித்து அலியார் கடந்த 6-ந் தேதி அரியமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, சிறுவனை தேடிவந்தனர்.

 

விசாரணையில், அதே பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி சேகர். இவரது மனைவி கயல்விழி. இவர் முன்னாள் அ.தி.மு.க. கவுன்சிலர் ஆவார். இவரை அரசியலுக்கு கொண்டு வந்தவர் அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் மரியம்பிச்சை.  இத்தம்பதியின் இரண்டாவது மகன் முத்துக்குமார் (26). இவர் பன்றிகள் வளர்த்து வருகிறார். அவற்றை வேவு பார்க்க அடிக்கடி அப்துல்வாஹித் வருவது தெரிந்து, சிறுவன் மீது அவர்கள் மிகவும் கோபமாக இருந்தது தெரியவந்தது.
 

Tiruchirappalli


இதுதொடர்பாக முத்துக்குமாரை பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில், பன்னி பெரியசாமியின் மகன் சிலம்பரசன் எங்களுடைய பன்றியை அடிக்கடி பிடித்து விற்பனை செய்து வந்தான். அவனுக்கு அப்துல் வாஹித் உதவி செய்வதாக கூறப்பட்டது. குறிப்பாக பன்றிகள் எங்கே நிற்கின்றன என அவன் வேவு பார்த்து சொல்வதாகவும் கூறினார்கள். இன்னொரு முறை அவன் வந்தால் கட்டி போடுங்கள் என நான் கூறினேன்.

 

இந்நிலையில் கடந்த 3-ந் தேதி மாலை அப்துல்வாஹித் எங்கள் பகுதிக்கு வந்தான். அப்போது சரவணன் (19), மற்றும் அவருடைய நண்பர்கள் அவனை பிடித்து கட்டி வைத்து அடித்தனர். இதில் அவன் இறந்து விட்டான். உடனே நான் அப்துல் வாஹித்தின் உடலை அரியமங்கலம் குப்பை கிடங்கில் போட்டுவிடும்படி கூறினேன்.

 

அதன்படி அவர்கள், அங்கு தீ பிடித்தால் அணைக்க தேவைப்படும் வகையில் கட்டப்பட்டுள்ள தண்ணீர் தொட்டியில், அப்துல்வாஹித்தின் உடலை கல்லை கட்டி போட்டு, அதில் குப்பைகளை போட்டு மூடி புதைத்து விட்டனர் என வாக்குமூலம் கொடுத்திருக்கிறான்.



 

இதைத்தொடர்ந்து அரியமங்கலம் குப்பை கிடங்கில் உள்ள தொட்டியில் சிறுவன் புதைக்கப்பட்ட இடத்தை, போலீசில் சிக்கியவர்கள் அடையாளம் காட்ட காலை முதல் மாலை வரை பொக்லைன் எந்திரம் மூலம் குப்பைகளை கிளறி தேடும் படலம் நடந்தது. மாலை 6.15 மணிக்கு சிறுவன் அப்துல் வாஹித் உடலை போலீசார் மீட்டனர்.

 

பின்னர் தாசில்தார் மோகன் முன்னிலையில், போலீஸ் உதவி கமிஷனர் மணிகண்டன், இன்ஸ்பெக்டர் முத்தரசு மற்றும் போலீசார் மேற்பார்வையில் உடல் வெளியே எடுக்கப்பட்டது. சிறுவன் கொலை செய்யப்பட்டு 6 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டதால் உடல் லேசாக அழுகிய நிலையில் காணப்பட்டது. பின்னர் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டது.

 

இந்த  கொலைக்கு முன்பாக இந்த குப்பை கிடங்கு இருக்கும் தீடீர் நகர் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்.  இந்த குப்பை கிடங்கு சமூக விரோதிகளின் கூடாரமாக இருப்பதற்கு முக்கிய காரணம் அங்கே இரண்டு குடும்பம் தான். திருச்சி மாநகராட்சிக்குள் சட்டவிரோதமாக பன்னி வளர்பதும், ஏற்றுமதி செய்வதையே முழுநேர தொழிலாக இருப்பதால் இவர்கள் இரண்டு குடும்பத்திற்கும் இடையே நடக்கும் பழிக்கு பழி முன்விரோதம் தான் இங்கே அடிக்கடி கொலை சம்பவம் நடக்கிறது என்கிறார்கள்.  பன்னி பெரியசாமி ஆரம்ப காலத்தில் பெரிய ரவுடியாகவும் பன்னி வளர்பவராகவும் இருந்தவர். இவரோடு காலப்போக்கில் வேலைக்கு வந்தவர் பன்னிசேகர். இரண்டு பேரும் சேர்ந்து திருச்சியில் சட்ட விரோதமாக பன்னி வளர்க்க ஆரம்பித்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்க ஆரம்பித்து இரண்டு பேருக்கும் இடையே சொத்து பிரிப்பதில் பிரச்சனை ஆரம்பமானது. அது தொடர் பழிக்கு பழி கொலையாக மாறி தற்போது அவர்கள் இரண்டு பேரும் மறைந்து தற்போது அவர்களுடைய மகன்கள் இரண்டு பேருக்கும் இடையே பெரிய பிரச்சனையாக வளர்ந்து பழிக்கு பழியாக வளர்ந்து  நிற்கிறது. 



 

ஒரு பக்கம் பன்னி பெரியசாமியின் மகன் சிலம்பரசன், இன்னோரு பக்கம் பன்னி சேகரின் மகன் முத்துகுமார் இரண்டு பேரும் பன்னி வளர்பதில் விற்பதில் கோஷ்டி சண்டை போட்டு கொலைகள் செய்து கொண்டுயிருக்கிறார்கள். என்கிறார்கள் விசயம் தெரிந்த போலிஸ்காரர்கள்.

 

தற்போது நடந்த கொலை கூட பழிக்கு பழி கொலை தான் என்கிறார்கள். என்னவென்று விசாரித்தபோது கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சிலம்பரசன் – முத்துகுமார் இரண்டு குரூப்பை வரவழைத்து பொன்மலை ஏசிபி பஞ்சாயத்து செய்தார். அப்போது பேச்சுவார்த்தையில் முத்துகுமாரின் பெயரை தன் நெஞ்சில் பதித்து இருக்கும்  ஒரு பையன் ஒருவன் சிலம்பரசனை எதிர்த்து அசிங்கமாக பேச, அந்த பஞ்சாயத்திற்கு பின்பு அந்த பையனை சிலம்பரசன் குரூப் ரொம்ப கொடூரமான முறையில் கொலை செய்தது. அந்த பகையை மனதில் வைத்துக்கொண்டுதான் தற்போது சிலம்பரசன் குரூபில் உள்ள 2வது உளவு சொல்லும் பையனை கொலை செய்திருக்கிறார்கள். இது இத்தோடு நிற்காது இந்த இரண்டு கும்பலையும் அங்கிருந்து அகற்றாவிட்டால் இந்த கொலைகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும். அரியமங்களம் குப்பை கிடங்கில் பல இலட்ச ரூபாய் செலவு செய்து சுற்றுசுவர், கண்காணிப்பு கேமிரா என எத்தனை முறை பொறுத்தினாலும், பன்னி மேய்ப்பதற்க்காக சுவற்றையும் கண்காணிப்பு கேமிராவையும் உடைத்து விடுவார்களாம். இதை தட்டி கேட்பதற்கே போலிசார் பயந்து போய் இருக்கிறார்களாம்

 

இந்த சம்பவத்தில் கொலை செய்யப்பட்ட அப்துல் வாஹித்துக்கு 12 வயது. கொலையாளிகளாக கருதப்படும் அனைவரும் 16 வயது முதல் 19 வயதுடையவர்கள்.  இந்த பன்னி வளர்ப்பில், ஏற்றுமதி செய்வதில் பணம் தாராளமாக புழங்குவதால் ரவுடிகளாக மாறும் சிறுவர்கள் திருச்சிக்கு பெரிய அச்சத்தை கொடுப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

வெள்ளியங்கிரி மலை ஏறிய இளைஞருக்கு நேர்ந்த துயரம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tragedy befell the young man who climbed the Velliangiri mountain

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது டிரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர்.

மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர். இந்நிலையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறி சாமி தரிசனம் செய்துவிட்டு, கீழே இறங்கியபோது 7 வது மலையில் திருப்பூரை சேர்ந்த வீரக்குமார் (வயது 31) என்பவர் கடந்த 18 ஆம் தேதி தவறி விழுந்தார். இதனால் அவரின் கை மற்றும் வயிற்றுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

உடல்நலக் குறைவால் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய 7 பேர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக் உயர்ந்துள்ளது. முன்னதாக சித்ரா பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களை ட்ரோன் மூலம் கண்காணிக்க வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது எனவும், கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் காட்டுத் தீயை கண்காணிக்கவும் ட்ரோன்களை பயன்படுத்த வனத்துறை முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.