Container truck seized with 300 kg of cannabis in Madurai ... One arrested

Advertisment

மதுரை மாநகருக்கு கண்டெய்னர் லாரியில் கஞ்சா கடத்தி வருவதாக வந்த ரகசிய தகவலின்பேரில் தனிப்படை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கண்டெய்னர் லாரியை மதுரை மாநகர் சுப்ரமணியபுரம் காவல் நிலையம் எல்லைக்கு அருகே வந்தபோது அதனைத் தனிப்படை போலீசார் மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அதில் கஞ்சா மூட்டை மூட்டையாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து தனிப்படை போலீசார், நடத்திய விசாரணையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கட்ட தேவன்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்த மலைச்சாமி என்பவர் ஆந்திராவிலிருந்து கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது. மேலும் இந்த மூட்டைகளை உசிலம்பட்டி கொண்டு சென்று அங்கு சிறு சிறு பொட்டலங்களாக பிரித்து மதுரை மாநகரில் விற்பனை செய்து தெரியவந்தது.

Advertisment

அதனை தொடர்ந்து போலீசார் அவரை கைதுசெய்து, லாரியிலிருந்து 300 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கஞ்சா கடத்தலுக்கு உடந்தையாக இருந்தவர்களைக் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை சுப்பிரமணியபுரம் காவல் நிலையத்திற்கு நேரில் வந்து பார்வையிட்ட மதுரை சட்ட ஒழுங்கு துணை ஆணையாளர் சிவ பிரசாத், பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “கஞ்சா மூட்டையுடன் லாரி ஒன்று மதுரை நகரை சுற்றிவருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து போலீசார் வாகன சோதனை நடத்தியபோது 300 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா கடத்திவந்த மலைச்சாமி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் தொடர்புடைய பலரையும் பிடிக்க நடவடிக்கை எடுத்துவருகிறோம்” என்று அவர் கூறினார்.