Skip to main content

“புத்தருக்குக் கிடைத்தது போன்ற ஞானத்தையும் பெறமுடியும்!”- வழக்கறிஞர்களுக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி அறிவுரை!

Published on 27/11/2019 | Edited on 27/11/2019

வழக்கறிஞர் தொழிலில் ஆரம்பத்தில் வெற்றி கிடைக்காவிட்டாலும் அதிருப்தி அடைய வேண்டாம் என இளம் வழக்கறிஞர்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி அறிவுரை வழங்கியுள்ளார்.
 

இந்திய அரசியல் சாசனம் 1949- ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்டு, 1950- ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வந்தது. அரசியல் சாசனம் ஏற்றுக் கொள்ளப்பட்ட தினம், அரசியல் சாசன தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

the constitution of india day high court judge speech


சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசியல் சாசன தினம் மற்றும்   வழக்கறிஞர்கள் பதிவு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், 865 சட்ட  பட்டதாரிகள்  வழக்கறிஞர்களாகப் பதிவு செய்து,  உறுதிமொழி  எடுத்துக் கொண்டனர். இதேபோல, அரசியல் சாசன தின உறுதிமொழியை தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி படிக்க சக நீதிபதிகளும், பார் கவுன்சில் நிர்வாகிகளும், வழக்கறிஞர்களும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

the constitution of india day high court judge speech


இந்நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி பேசுகையில், ‘‘இந்த மாநிலம் அறிவுசார் மக்களின் முனையமாக உள்ளது. சட்டத்தின் ஆட்சியை உறுதிசெய்யும் அரசியல் சாசனம் அனைத்து சட்டங்களுக்கும் தாயாக உள்ளது. அரசியல்சாசனம் பகவத் கீதையைப் போன்றது. அது உங்களுக்கு பல விசயங்களைக் கற்றுத்தரும். மூத்தோர்களின் வழியைப் பின்பற்றுங்கள். உலகிலேயே மிகப்பெரிய அரசியல் சாசனம் நம்முடையதுதான். நல்ல விசயங்களைச் செய்வதற்கு நல்ல பாதையைத் தேர்ந்தெடுங்கள். வழக்கறிஞர் தொழில் ஆரம்பத்தில் போராட்டங்கள் நிறைந்ததாகவும், அதிருப்தி நிறைந்ததாகவும்தான் இருக்கும். நல்ல குணாதிசயங்களை வளர்த்துக்கொள்ளுங்கள். ஆழ்ந்த சட்ட அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். சிறந்த முறையில் பணியாற்றினால் உண்மையான திருப்தி கிடைப்பதுடன் புத்தருக்கு கிடைத்தது  போன்ற ஞானத்தையும் கூடுதலாகப் பெறமுடியும். சுயநலத்தை விட்டொழியுங்கள். ஒட்டுமொத்த அமைப்பும் நம்பிக்கையின் அடிப்படையிலேயே இயங்குகிறது. அந்த நம்பிக்கையை நீங்கள் பெற்றெடுக்க வேண்டும். ஆரம்பத்தில் வெற்றி இல்லாவிட்டாலும்  அதிருப்தி அடையாதீர்கள்’ என்றார்.

the constitution of india day high court judge speech


நீதிபதி என்.கிருபாகரன் பேசுகையில்,"சமீபகாலங்களில் தமிழகத்தில் உரிமைகள் கொண்டாடப்பட்டு கடமைகள் மறக்கப்பட்டு வருகின்றன. போராட்டங்களில் மக்கள் அதிக கவனம் செலுத்துகின்றனர். பணிபுரிவதில் ஆர்வம் காட்டுவதில்லை. சமூகத்தில் எதிர்வினை உருவாகும்போது வழக்கறிஞர்களின் பங்கு அங்கு முக்கியமாகிறது. உங்களது சட்ட அறிவு என்பது பொதுநலனுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டும். பணம் சம்பாதிப்பது மட்டுமே வாழ்க்கையல்ல. சாதி, மத சக்திகளுக்கு இறையாகிவிடக் கூடாது. போக்குவரத்து விதிகளை மதியுங்கள். சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் சிலர் தங்களை தற்காத்துக்கொள்ளவே சட்டப் பட்டம் பெறுகின்றனர். அதுபோன்ற சூழல் இனி உருவாகக்கூடாது", என்றார்.
 

the constitution of india day high court judge speech

 

நீதிபதி பி.என்.பிரகாஷ் பேசுகையில், மக்கள் வழக்கறிஞர்கள் என்றாலே அதிருப்தியில் உள்ளனர். வழக்குகளை எப்படி வாதிடலாம் எனக்கூறும் அளவுக்கு சென்று விட்டது. திறமையான வழக்கறிஞர்களாக நீங்கள் செயல்பட வேண்டும், என்றார். நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பேசுகையில்,  “சட்டத்தின் ஆட்சி முடிந்து விட்டால் கலகம் உருவாகிவிடும். நல்ல குணாதிசயங்களை வளர்த்து அறிவைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்.”  என்றார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னையில் ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Traffic change in Chennai for a year

சென்னை தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் நாளை (27.04.2024) முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி (26.04.2025) வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “மேட்லி சந்திப்பு தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் 27.04.2024 முதல் 26.04.2025 வரை ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றுப்பாதைகளில் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி வடக்கு உஸ்மான் சாலையில் இருந்து தி.நகர் பேருந்து நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் பனகல் பார்க் அருகில் உள்ள உஸ்மான் சாலை மேம்பாலத்தில் செல்லத் தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வாகனங்கள் மேம்பாலத்தின் அனுகு (சர்வீஸ் ரோடு) சாலை வழியாக சென்று பிரகாசம் சாலை, பாஷ்யம் சாலை, தியாகராயர் சாலை, பர்கிட் சாலை வழியாக தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். 

Traffic change in Chennai for a year

பர்கிட் சாலை, மூப்பாரப்பன் தெரு சந்திப்பில் இருந்து மேட்லி நோக்கி செல்வதற்கு பேருந்துகள் மட்டும் அனுமதிக்கப்படும். மற்ற வாகனங்கள் மூப்பாரப்பன் தெரு, மூசா தெரு, தெற்கு தண்டபானி தெரு, மன்னார் தெரு வழியாக உஸ்மான் சாலை மூலம் தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். தி. நகர் பேருந்து நிலையத்திலிருந்து சைதாப்பேட்டை அண்ணா சாலையை அடைய தெற்கு உஸ்மான் சாலை சென்று கண்ணம்மாபேட்டை சந்திப்பை அடைந்து தென்மேற்கு போக் சாலையில் சென்று சிஐடி நகர் நான்காவது பிரதான சாலை, சிஐடி நகர் மூன்றாவது பிரதான சாலை சென்று அண்ணா சாலையை அடையலாம். 

Traffic change in Chennai for a year

சிஐடி நகர் 1ஆவது பிரதான சாலையிலிருந்து வடக்கு உஸ்மான் சாலைக்குச் செல்லும் வாகனங்கள் கண்ணம்மாபேட்டை சந்திப்பில் தென்மேற்கு போக் சாலை வழியாகச் சென்று வெங்கட் நாராயணா சாலையில் சென்று நாகேஸ்வரன் ராவ் சாலை வழியாக வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். தி.நகர் பேருந்து நிலையத்திலிருந்து வடக்கு உஸ்மான் சாலையை அடைய மேட்லி ரவுண்டானாவில் இருந்து பர்கிட் ரோடு சென்று வெங்கட் நாராயண சாலை வழியாக நாகேஸ்வர ராவ் சாலையில் இடதுபுறம் திரும்பி வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். எனவே வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

சென்னை விமான நிலையத்தில் கிடந்த தங்கம்; சுங்கத்துறையினர் விசாரணை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Gold found at Chennai airport; Customs investigation

சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் கிடந்த தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை சர்வதேச விமான நிலைய குப்பைத் தொட்டியில் கேட்பாராற்று கிடந்த ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குப்பைத் தொட்டியில் கிடந்த 1.2 கிலோ தங்க நகைகளைக் கைப்பற்றிய சுங்கத் துறையினர், சிசிடிவியை பார்க்காதபடி நகையை குப்பைத் தொட்டியில் போட்டுச் செல்லும் நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குப்பைத் தொட்டியில் கிடந்த மர்ம பார்சலில், வெடிகுண்டு இருக்குமோ என்ற சந்தேகத்தில் சோதனை நடத்திய போது, தங்கக் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சென்னை விமான நிலையத்தில் ரூ.85 லட்சம் மதிப்பிலான 1.25 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.