
தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்குத் தலா 6 சட்டமன்றத் தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 சட்டமன்றத் தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 சட்டமன்றத் தொகுதிகளும், காங்கிரஸ் கட்சிக்கு 25 சட்டமன்றத் தொகுதிகளுடன் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியும், ஆதி தமிழர் பேரவைக்கு 1 தொகுதி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 3 தொகுதி, தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு 1 தொகுதி, மக்கள் விடுதலை கட்சிக்கு 1 தொகுதி, அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சிக்கு ஒரு தொகுதி என ஒதுக்கப்பட்டு, தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.

திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் இன்று (10.03.2021) மதியம் 12 மணிக்கு வெளியாக இருக்கும் என்ற தகவல்கள் வெளியாகிய நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் அண்ணா அறிவாலயம் வந்தார். இந்நிலையில் அறந்தாங்கி தொகுதியைக் காங்கிரசுக்கு ஒதுக்கக்கூடாது என திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக உறுப்பினர் ஒருவர் தீக்குளிக்க முயற்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.