



இன்று (18.08.2021) பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரமில்லா நேரத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தங்கியிருந்த கொடநாட்டில் நடந்த கொள்ளை, கொலை தொடர்பாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட வழக்கை மீண்டும் தற்போதுள்ள அரசு கையிலெடுத்துள்ளது என்று பேசினார். இதற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலளித்துப் பேசினார். கொடநாடு கொள்ளை, கொலை தொடர்பாக முதல்வர் பேசுகையில், ''கொடநாடு கொலை வழக்கில் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதுபோல நீங்களே அந்தப் பிரச்சனையைக் கிளப்புகிறீர்கள். அந்த மாதிரிதான் அதிமுகவினரின் போக்கு உள்ளது'' என்று கூறினார். இதனையடுத்து, அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். வரும்போதே கருப்பு பேட்ஜ் அணிந்து வந்த அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
அதனையடுத்து வெளியே வந்த அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறும் கலைவாணர் அரங்கின் முகப்பில் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் ஆகியோர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அதிமுவுடன் பாமக, பாஜக ஆகிய கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். 'பொய் வழக்கு போடாதே' என்ற கோஷங்களை முன்வைத்து அதிமுகவினர் தர்ணாவில் ஈடுபட்டுனர்.
அதனையடுத்து ஓபிஎஸ் - இபிஎஸ் உள்ளிட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, “முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தங்கியிருந்த கொடநாடு வீட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளை தொடர்பான வழக்கில் ஏற்கனவே விசாரணைகள் முடிந்து வழக்கு முடியும் தருவாயில் இருக்கும் நிலையில், மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு இந்த வழக்கில் தொடர்புடைய சாயனுக்கு சம்மன் அனுப்பி, அவரை வரவழைத்து அவரிடம் ரகசிய வாக்குமூலம் பெற்றதாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளது. அந்த ரகசிய வாக்குமூலத்தில் என்னையும் கழகப் பொறுப்பாளர்கள் சிலரையும் சேர்த்திருப்பதாக பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அதிமுக அரசால் புலன் விசாரணை செய்யப்பட்ட வழக்கை மீண்டும் காழ்ப்புணர்ச்சியோடு திமுக கையில் எடுத்துள்ளது'' என்றார்.
அதேபோல் இதனைக் கண்டித்து வரும் இரண்டு நாட்களுக்கு சட்டப்பேரவையைப் புறக்கணிப்பதாக ஓபிஎஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.