Skip to main content

சத்தியமூர்த்தி பவன் வெளியே திடீரென குவிந்த காங்கிரஸார்! பாதுகாப்பிற்கு போலீஸ் குவிப்பு!

Published on 22/12/2021 | Edited on 22/12/2021

 

Congressmen suddenly gathered outside Sathyamoorthy Bhavan!

 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனை இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் முற்றுகையிடப் போவதாக வந்த தகவலை அடுத்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கட்சி அலுவலகத்தின் வாயிலில் குவிந்தனர்.

 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளர் ரூபி மனோகரன், சென்னை மாவட்டத் தலைவர்கள் ராஜசேகரன், ரஞ்சன் குமார், அடையாறு துரை, நாஞ்சில் பிரசாத், திருவள்ளூர் மாவட்டத் தலைவர் ஏ.ஜி. சிதம்பரம், மாநிலச் செயலாளர்கள் கடல் தமிழ்வாணன், ரஞ்சித்குமார், அயன்புரம் சரவணன் உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸார் இருக்கைகள் அமைத்து சத்தியமூர்த்தி பவன் வாயிலில் அமர்ந்திருந்தனர். 

 

இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதால் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காங்கிரஸ் கட்சியினரிடம், "கட்சி அலுவலகத்திற்கு நாங்கள் பாதுகாப்பு தருகிறோம். யார் போராட்டம் நடத்த வந்தாலும் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம், நீங்கள் கலைந்து செல்லுங்கள்" என்று பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து காங்கிரஸ் கட்சியினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பாகக் காணப்பட்டது. இதன் காரணமாக சத்தியமூர்த்தி பவன் வெளியிலேயே ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெளியேறிய விஜயதாரணி; வீடியோ வெளியிட்ட தமிழ்நாடு காங்கிரஸ்

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
The video was released by the Tamil Nadu Congress for Vijayadharani who left from party

கடந்த மூன்று முறையாகத் தொடர்ந்து விளவங்கோடு தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வான காங்கிரஸைச் சேர்ந்த விஜயதாரணி, நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் பா.ஜ.க.வில் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இது, காங்கிரஸ் ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

விஜயதாரணி 2021ல் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றபோது, சட்டமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்தாகவும் அது கிடைக்காமல் போக பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி கிடைக்கும் என நினைத்ததாகவும், ஆனால் சமீபத்தில் சட்டமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் பதவி செல்வப்பெருந்தகைக்கு வழங்கப்பட்டது. இதனையடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டும் கிடைக்காததால் விஜயதாரணி அதிருப்தியில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன.

முன்னதாகவே அவர் டெல்லியில் முகாமிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், தற்போது இன்று (24-02-24) பிற்பகல் 2 மணிக்கு டெல்லியில் பாஜகவில் இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் சுதாகர் ரெட்டி, மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், மத்திய இணை அமைச்சர் எல். முருகன் ஆகியோர் முன்னிலையில் தற்போது விஜயதாரணி பாஜகவில் இணைந்துள்ளார்.

இது தொடர்பாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (பக்கத்தில்) காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, முன்பு பேசிய ஒரு பழைய வீடியோவை பகிர்ந்து விமர்சனம் செய்துள்ளது. அதில் ராகுல் காந்தி, ‘எதற்கும் பயப்படாத அச்சமற்ற உண்மையான போராளிகளை மட்டுமே காங்கிரஸ் விரும்புகிறது. பயப்படுபவர்கள் கட்சியை விட்டு வெளியேறுங்கள், உங்களுக்கு RSS தான் சரியான இடம்’ என்று கூறியுள்ளார். 

Next Story

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவர் நியமனம்; தமிழக முதல்வர் வாழ்த்து

Published on 17/02/2024 | Edited on 18/02/2024
Greetings from the Chief Minister of Tamil Nadu for New Chairman of Tamil Nadu Congress Committee appointed

தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக கு. செல்வப்பெருந்தகையை காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் நியமித்து அறிவித்துள்ளார்.

இது குறித்து காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘காங்கிரஸ் தலைவர் கு. செல்வப்பெருந்தகை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், காங்கிரஸ் தலைவர் எஸ். ராஜேஷ் குமார் தமிழ்நாடு சட்டப்பேரவை காங்கிரஸ் குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகப் பொறுப்பு வகித்து வந்த கே.எஸ். அழகிரியின் பங்களிப்புகளைக் காங்கிரஸ் கட்சி பாராட்டுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக செல்வப்பெருந்தகையை நியமித்ததற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சகோதரர் செல்வப்பெருந்தகைக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள். கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியைச் சிறப்பாக வழிநடத்தி வெற்றிகள் பல குவித்திட்ட அருமை நண்பர் கே.எஸ். அழகிரியின் எதிர்காலப் பணிகள் சிறக்கவும் - காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ராஜேஷ் குமார் அவர்களது செயல்பாடுகள் சிறக்கவும் வாழ்த்துகிறேன். இணைந்து பயணிப்போம்! இந்தியாவை வெற்றிபெறச் செய்வோம்!’ என்று பதிவிட்டுள்ளார்.