தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சுயசரிதை நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி வரும் பிப்ரவரி 28- ஆம் தேதி அன்று தமிழகம் வருகிறார்.
'உங்களின் ஒருவன்' என்ற பெயரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள சுயசரிதை நூலின் முதல் பாகம் வரும் பிப்ரவரி 28- ஆம் தேதி அன்று வெளியாகிறது. இதற்கான விழா, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி தமிழகம் வரவிருக்கிறார்.
ஏற்கனவே, சமூக நீதி கூட்டமைப்பில் இணையுமாறு தேசிய அளவில் 30- க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார். இந்த நிலையில், நடைபெறவுள்ள நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்க மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி உள்ளிட்டக் கட்சிகளுக்கும், தி.மு.க.வுடன் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் 2024- ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி முன்னோட்டமாக முதலமைச்சரின் சுயசரிதை நூல் வெளியீட்டு விழா இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.